பம்பை ஆட்டத்தில் அதிர்ந்த எட்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்!
ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற எட்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!
ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற எட்டாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!
ஈஷா யோக மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10 வரை) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறி வருகிறது. 9 நாட்கள் திருவிழாவில், இன்றைய எட்டாம்நாள் கொண்டாட்டத்தில் ‘நண்பர்கள் பம்பை-சிலம்பு குழு’வினர் வழங்கிய பம்பை ஆட்ட நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.
மாலை 6.45 மணியளவில் ஈஷா யோக மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
சிவபெருமானின் மனம்கவர்ந்த இசைக் கருவியாகக் கூறப்படும் இந்த பம்பை இசைக்கருவியின் மூலம் இசைக்கப்படும் பம்பை ஆட்டத்தை தர்மபுரியைச் சேர்ந்த நண்பர்கள் கலைக் குழுவினர் வெகு சிறப்பாக வழங்கினர்.
லிங்கபைரவிக்கு சரணம் சொல்லி தெம்மாங்கு பாடலின் வழியாக நிகழ்ச்சியைத் துவக்கிய குழுவினர், பம்பை இசைக் கருவிகள் முழங்க, கைச்சிலம்பாட்டம் உட்பட பல்வேறு சாகச விளையாட்டுக்களை மேடையில் அரங்கேற்றி பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றனர். ஜிம்னாஸ்டிக் போன்ற உடலை வளைத்து தலைகீழாக ஒருவர்மீது ஒருவர் நிற்கும் சாகசங்களை அவர்கள் சைக்கிளின் மீதேறி செய்துகாட்டியது அற்புதமான காட்சியாக இருந்தது.
Subscribe
பம்பை ஆட்டம் பற்றி குழு தலைவர் கூறும்போது...
இந்த பம்பை இசைக் கருவியின் மீது நந்தியும் லிங்கமும் அமையப்பெற்றுள்ளது இதன் தனிச்சிறப்பை விளக்குகிறது. தெய்வீக விழாக்களிலும் கோயில் திருவிழாக்களிலும் இந்த பம்பை ஆட்டம் ஆடப்படும். கைலாயத்திலிருந்து இந்த பம்பையாட்டம் வந்துள்ளது என்றும் சொல்வார்கள்.
-ஸ்ரீதரன், நண்பர்கள் கலைக் குழு, தர்மபுரி
லிங்க பைரவி ஊர்வலம்...
நவராத்திரியின் எட்டாம் நாளான இன்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொருநாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கொலு...
நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.
இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.
நாளை (09-10-2016)
ஒன்பதாம்நாள் விழாவான நாளை திரு.ஜெயராமன் வில்லிசைக் குழுவினர் வழங்கும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.