ஈஷா ருசி

பருத்திப்பால்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 100 கிராம்
கருப்பு பருத்தி விதை - 50 கிராம்
தேங்காய் பெரிய மூடி - 1
முந்திரி - சிறிதளவு
சுக்கு - சிறிதளவு
ஏலக்காய் - 3
கருப்பட்டி - 1 வட்டு (பெரியது)

செய்முறை:

பருத்திவிதையை தண்ணீரில் 6 மணிநேரம் ஊற வைக்கவேண்டும். பச்சரிசியை மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும். ஊறிய பருத்தி விதையை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும். கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் முழுவதையும் துருவி, அதில் முக்கால் பங்கு எடுத்து தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் 6 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும். கொதி வந்தவுடன் தீயை குறைத்துக்கொண்டு, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். பருத்திப்பால் பச்சை வாசனை போனவுடன் கருப்பட்டி பாகை சேர்க்கவும். பின்னர் சுக்கு, ஏலக்காய், மீதமுள்ள தேங்காய் துருவல், வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து கிளறவும். தேங்காய் பாலை கடைசியாக ஊற்றவேண்டும். அதன் பிறகு கொதிக்கவிட வேண்டாம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.