நான் இளைஞனாக இருந்தபோது, ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதினேன். ஏனென்றால் அப்போது நான் ஒதுக்குப்புறமான ஒரு பண்ணையில் வசித்து வந்தேன்.

நான் அப்போது ஹேங் கிளைடர்களில் பறக்கும் வழக்கம் கொண்டிருந்ததால், அதற்காக எனக்கு ஒரு மலைச்சரிவு தேவைப்பட்டது. எனவே அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

அந்த இடத்தில் ஒரு ஏரியும் இருந்தது. அந்த ஏரியில் செல்வதற்காக நானே ஒரு சொந்த கட்டுமரத்தை உருவாக்கினேன்.

ஏரியும், மலையும் என்னை ஈர்த்தாலும், அந்த இடம் மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்தது. யாரும் ஒருபோதும் அங்கு என்னைப் பார்க்க வரவில்லை.

நான் தனியாக இருந்தேன், எனவே கவிதைதான் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் வழியாக எனக்கு ஆனது. அந்த காலகட்டத்தில் நான் நிறைய எழுதினேன். இன்றும் கூட எழுதுகிறேன். நான் எழுதிய கவிதைகளை ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் பணியில் இப்போது ஈடுபட்டிருக்கிறோம்.

 

உப்பு பொம்மை

உண்மையைத் தேடி
எங்கெங்கோ அலைந்து

மலைகளில் திரிந்து
புனித நதிகளில் நீராடினேன், பக்தர்களுடன்

குருடர்கள் சுட்டிய இடமெல்லாம்
நம்பிக்கையும் உற்சாகமுமாய் பயணித்தேன்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒவ்வொரு வழியிலும் வாசனையை நுகர்ந்தேன்
ஆனால் போனதெல்லாம் சுற்றிச் சுற்றித்தான்

இல்லாத ஒருவரை அறிய வீணடித்தேன் பல பிறவிகளை
ஆனால் தேடலின் தீவிரம் மட்டும் குறையவேயில்லை

மீனும் திமிங்கலமும் கூட அறியா அந்த
சமுத்திரத்தின் ஆழம் அறிய என்னதான் தேவை?

உப்பு மட்டுமே சமுத்திரமாய் மாறும்
உப்பு பொம்மையானேன், ஒரேயொரு முழுக்கு, நான் சமுத்திரமானேன்

 

"நான் ஏன் கலக்க வேண்டும்?" இது ஒரு எண்ணம் அல்ல; பிரபஞ்சத்தின் இயல்பே அதுதான்.

இதை இப்போதே நீங்கள் புரிந்து கொள்ளலாம், அல்லது நாங்கள் உங்களை புதைக்கும் தினத்தன்று, அதாவது நீங்கள் பிரபஞ்சத்துடன் கலக்கும் அன்று, புரிந்து கொள்வீர்கள்.

இப்போதே நீங்கள் புரிந்து கொள்வது நல்லது. இப்போதே புரிந்து கொண்டால், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நீங்கள் அனுபவிக்கலாம்.

இப்போது நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் புரிந்து கொண்ட அன்று, நாங்கள் எங்கள் வாழ்க்கைகளை மகிழ்ச்சியாக அனுபவிப்போம்.

'நான்' என்கிற தன்மை உங்களுக்குள் நிரம்பியிருந்தால், உங்களைப் புதைத்த பிறகுதான், உங்களைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் தங்கள் வாழ்க்கைகளை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள்.

அனைத்திலும் தானும் ஒரு பகுதிதான் என்பதை அப்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

ஆனால் இப்போதே அதை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள், சுற்றியுள்ள மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள், வாழ்க்கையும் அற்புதமாக இருக்கும்.

"எதனுடன் நான் கலக்க வேண்டும்?" நாம் படிப்படியாகச் செல்வோம்.

நேரடியாக பிரபஞ்சத்துடன் கலப்பது என்பது மிகப் பெரிய ஒரு விஷயம்.

"நான் எங்கு செல்வேன், எனக்கு என்ன ஆகும்?"

நீங்கள் எங்கும் போக மாட்டீர்கள், நீங்கள் இல்லாமல் போய்விடுவீர்கள்.

ஒரு உப்பு பொம்மை கடலுக்குள் விழுந்துவிட்டால், அது எங்கும் போகாது, அது இல்லாமல் ஆகிவிடும்.

இது மிகப் பெரிய ஒரு படியாகத் தெரிந்தால், உங்கள் குருவுடன் கலந்து விடுங்கள். ஏனென்றால் நீங்களாக கடலில் குதிக்க மாட்டீர்கள். குருவுடன் கலந்து விட்டால் எப்படி இருந்தாலும் அவர் உங்களை கடலுக்குள் தூக்கிப் போட்டுவிடுவார்.

Love & Grace