கொல்லைப்புற இரகசியம் - பகுதி 26

பொதுவாக நாம் நம் ஊர் தோட்டப் பகுதிகளில் வயல்வெளிகளில் பல்வேறு தாவரங்கள் தானாக முளைத்துக் கிடப்பதைப் பார்த்திருப்போம்! இவைகளெல்லாம் களைகள் என விவசாயிகள் பிடுங்கி எறியக்கூடும். ஆனால், அந்த செடிகள் ஒவ்வொன்றிற்குள்ளும் ஒவ்வொரு விதமான தன்மை உண்டு! அவை ஒரு வேளை சிறந்த மூலிகையாகவும் கூட இருக்கலாம்!

இந்த நொச்சி இலை கபம், ஜலதோசம் மாதிரி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு! நொச்சி இலைய பையில போட்டு அடைச்சு தலையணை மாதிரி செஞ்சு பயன்படுத்தி வந்தா ஜலதோசம் தீரும். இலைச்சாற தலை, கழுத்து, கன்னம்... இங்கெல்லாம் வெளிப்புறமா தடவி வந்தா சைனஸ் வலி குறையும்.

அத்தகைய ஒரு செடிதான் இந்த நொச்சி! இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று நினைக்கிறீர்களா... நமது உமையாள் பாட்டி அன்றி வேறு யார் இதையெல்லாம் சொல்லப் போகிறார்கள்?!

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் மோரையும் தயிரையும் பிரசாதமாக கிருஷ்ண பக்தர்கள் வாரி வழங்க சற்று வரைமுறை தெரியாமல் சில பல குவளைகளை வாங்கி பருகிவிட்ட காரணத்தால், கபம் உடலில் கூடிக் கொண்டது.

வியாழக்கிழமை என்பதால் பாட்டி வழக்கம்போல தனது இலவச மருத்துவ முகாமை தொடங்கி இருந்தாள்; வழக்கம்போல வரிசை நீண்டிருந்தது. நான் பாட்டியின் செல்லப் பேரன் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் என்பதால், நான் வரிசையில் நிற்காமல் பாட்டியிடம் சென்றதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை!

நாடி பிடித்து பார்த்தே பித்தம், கபம், வாயு என உடலிலுள்ள குறைபாடுகளை சொல்லி வைத்தியம் செய்யும் உமையாள் பாட்டி, என்னை மட்டும் முகத்தைப் பார்த்தே சொல்லிவிடுவாள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

“என்னப்பா கபம் கூடிப்போச்சு போல...” பாட்டி கேட்டதும் ஆச்சர்யமடைந்தேன்.

“எப்படி பாட்டி கண்டுபிடிச்சீங்க?”

“அதான் வந்த பத்து நிமிசத்துல பதினஞ்சு தும்மல் போட்டுட்டியே?!”

“ஆமாம், பாட்டி! சைனஸ் மாதிரியும் தெரியுது!”

“சரி சரி... இந்தா எனக்கு நெறைய பேர் வெய்ட் பண்றாங்க, இந்தா இந்த பையில நொச்சி இலை இருக்கு இத எடுத்துட்டுப் போயி, பொடிசெஞ்சு புகைபிடி! கபம் சரியாயிடும்” அவசர அவசரமாக சொல்லிவிட்டு அடுத்த நோயாளியைப் பார்க்க சித்தமானாள் பாட்டி.

நொச்சி இலைகளைப் பத்தி தெரிஞ்சுக்காம எப்படி போறது?! பாட்டி பக்கத்துல உட்கார்ந்து பாட்டிக்கு அட்டெண்டர் வேலை பார்த்த படியே நொச்சி பற்றி கேட்கத் துவங்கினேன். பாட்டியும் வருபவர்களுக்கு வைத்தியம் சொன்னபடி எனக்கும் பதில் சொன்னாள்.

“இந்த நொச்சி இலை கபம், ஜலதோசம் மாதிரி பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு! நொச்சி இலைய பையில போட்டு அடைச்சு தலையணை மாதிரி செஞ்சு பயன்படுத்தி வந்தா ஜலதோசம் தீரும். இலைச்சாற தலை, கழுத்து, கன்னம்... இங்கெல்லாம் வெளிப்புறமா தடவி வந்தா சைனஸ் வலி குறையும். தலைவலி கூட நொச்சி இலையால குணமாகும்ப்பா... சின்ன அளவு சுக்கு துண்டுகூட சேத்து நொச்சி இலைய அரைச்சு நெற்றிப்பொட்டுல பூசினா, நான் சொன்ன மாதிரியே தலைவவலி தீரும். அதுமட்டுமில்ல, நொச்சி இலைய சுடுதண்ணியில போட்டு ஆவிபிடிக்க காய்ச்சல், தலைபாரம், கபக்கட்டு... இதல்லாம் குணமாகும்.

நொச்சி இலையோட வெல்லம் சேத்து கசாயம் செஞ்சு குடிச்சு வந்தா உடல் சூடு தணிஞ்சு, உடல் பலம் பெருகும். 1/2 ஸ்பூன் நொச்சி இலைச் சாறோட 1/2 ஸ்பூன் தேன் கலந்து குடிச்சு வந்தா காய்ச்சல் தீரும். கொஞ்சம் நொச்சி, மிளகு, பூண்டு, இலவங்கம் எல்லாம் சேத்து மென்னு தின்னா இரைப்பு நோய் தீவிரம் குறையும்.”

நொச்சியின் மருத்துவ குணங்களை பாட்டி மூச்சுவிடாமல் சொல்லி முடிக்க நோயாளிகளின் பார்வை நேரமும் சரியாக முடிவடைந்தது. வீட்டிற்கு சென்று முதல் வேலையாக பாட்டி கொடுத்த நொச்சி இலைகளை பொடி செய்யத் துவங்கினேன்.

சில குறிப்புகள்:

  • நொச்சி வேர் கசாயம் 30 மி.லி அளவுக்கு குடித்தால் வயிற்றுப்புழு அழியும்.
  • நொச்சி இலையை அரைத்து மூட்டு வலி உள்ள இடத்தின் மேல் கட்டி வந்தால் வீக்கமும் வலியும் குறையும்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்