இரவு கவிஞனையும் விடுவதில்லை, யோகிகளையும் தொடாமல் போவதில்லை. இதோ நிலவில்லா இந்த இரவில் சத்குருவிற்கு ஏற்பட்ட சில அனுபவங்களையும், இந்த மகத்தான இரவில் தான் வழங்கிய தீட்சை பற்றியும் அதன் தனித்துவத்தையும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் வடித்துள்ளார்.

வசந்த காலத்தின் தெளிவான வானத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். நட்சத்திரங்கள் நிறைந்த அந்த வானம் மிதமான தென்றலை வீசிக் கொண்டிருக்கிறது. மனதை மயக்கும் மலர்களின் நறுமணத்தை ஏந்தி சில்லென்ற காற்று அவ்வப்போது வீசிக் கொண்டிருக்கிறது. என் முன் குவிந்திருக்கும் ஆவணங்கள், காகிதங்கள்,முடிவில்லாமல் வந்து கொண்டிருக்கும் மின்னஞ்சல்கள், இதற்கிடையில் நூறாயிரம் கோடி பால்வெளிமண்டலத்தை ஏந்திய இந்தப் பிரபஞ்சம்! பிழைப்பிற்கான தேடுதல், இந்த அற்புதமான பிரபஞ்சத்தின் காட்சியை எப்படி பெரும்பாலான மனிதர்களின் கண்களிலிருந்து மறைத்துவிடுகிறது என்பது எனக்கு விந்தையாகவே இருக்கிறது. பூச்சிகளின் ரீங்காரத்தில் இங்கே ஒரு சங்கீத நிகழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. தனித்துவிடப் பட்டிருக்கும் யானை ஒன்று அதற்கு கிடைக்காத ஏதோ ஒன்றை எண்ணி சஞ்சலத்தில் பிளிறிக் கொண்டிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷாவில் செயல்களோ அடுக்கடுக்காய் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஆந்திர பிரதேசத்தில் ஈஷா வித்யா 6000 பள்ளிகளை தன் கையில் எடுக்கவிருக்கிறது. பசுமைக் கரங்களோ மாபெரும் பசுமை இயக்கத்தினை நிகழ்த்த பிரம்மாண்ட திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது. சர்வதேச யோகா தினம் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், செயல்களுக்கு முடிவுண்டா என்ன? இதற்கிடையில் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி மாபெரும் இயக்கமாக உள்நிலை அறிவியலில் ஒரு பிரம்மாண்ட புரட்சியாக வடிவம் பெற்றிருக்கிறது. முழுநேர ஈஷா யோகா ஆசிரியர்கள் நூறு பேர் இந்த அற்புதமான கொடையை மனிதகுலத்திற்கு அளிக்கவிருக்கின்றனர். ஒருவரின் சுயமாற்றத்திற்கு உதவும் மிக நுட்பமான கருவியான இந்த யோகப் பயிற்சியை அதன் தரம் எந்த விதத்திலும் குறையாமல்,வழங்கிடும் விதத்தினை எளிமைப்படுத்தி அளிக்கவிருக்கிறோம். இதனை நிகழ்த்திட, அர்ப்பணிப்பும் அசைவில்லா நோக்கமும் தேவை. மனிதர்களை இந்நிலைக்கு உயர்த்த நாம் வழங்கும் இப்பயிற்சி மென்மையானது அல்ல.

இந்த சிவராத்திரி அன்று (18 மார்ச், 2015) இருபத்தி ஆறு இளைஞர்கள் பிரம்மச்சரிய தீட்சை பெற்றார்கள். பிரம்மச்சரிய தீட்சை என்றாலே மனதில் ஒரு எழுச்சி ஏற்படும். ஒரே நாளில் எத்தனை மாற்றம். இருபத்திநான்கு மணி நேரத்தில் வாழ்கை மாறிவிடுகிறது. முகத்தில் பிரகாசம் பிறக்கிறது. கட்டுப்பாடுகள் தளர்கிறது. கர்மவினையின் திசையில் ஏற்படும் மாற்றம் முக்தியை நோக்கிய பயணத்தில் அதிவேக முன்னேற்றம் என பிரம்மச்சரிய தீட்சைக்குப் பின் நிகழும் மாற்றத்தைக் காணும்போது அதில் பெரும் எழுச்சியும் மறை நுட்பங்களும் இருப்பது தெரியும். இந்த உயிர்கள் என்னுடைய உயிரின் இழைகளில் சேர்த்து பிணைக்கப்பட்டுவிட்டன. அவர்களது வளர்ச்சிக்கும் ஞானத்திற்கும் என்னுடைய உயிர் சக்தியை அவர்கள் அருந்திடுவார்கள் என நம்புகிறேன்.

உள்நிலையிலும் வெளிநிலையிலும் இவ்வளவு தூரம் பயணித்துவிட்ட பின் தற்போது என்னுடைய ஒரே கவலை - இருக்கும் நேரத்தில் இன்னும் எத்தனை பேரை அழைத்துச் செல்வேன்.

அவனைப் போலவே நான் அனைவரையும் பிரகாசமாக்கிவிடட்டுமா...

Love & Grace