தன் இரண்டு வார பயண அனுபவத்தை நம்முடன் இங்கு பகிர்ந்து கொள்ளும் சத்குரு, கடந்த ஆறு வருடங்களில், நம் தியான அன்பர்களின் தியான தன்மையாலும், செயல்களாலும் டென்னிஸி மாகாணம் கண்டுள்ள மாற்றத்தை கண்டு நெகிழ்கிறார். வலியும் வேதனையும் ஓர் இடத்தின் மேல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று விவரிப்பவர், நாம் செய்யக் கூடிய சில செயல்களைக் குறித்தும் இந்த வார சத்குரு ஸ்பாட்டில் பேசுகிறார். படித்து மகிழுங்கள்!

கடந்த இரு வாரமாக, சனி ஞாயிற்றுக்கிழமைகளில், இங்கு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன. ஒன்று நம் அமெரிக்க ஈஷா யோகா மையத்தில், மற்றொன்று சான் பிரான்ஸிஸ்கோவில். இந்நிகழ்ச்சியில் 800 பேர் கலந்து கொண்டனர். இரண்டுமே தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்த நிகழ்ச்சிகளை நம் தன்னார்வத் தொண்டர்கள் அற்புதமாக ஒருங்கிணைத்திருந்தனர்.

இதற்க்கிடையே பல சந்திப்புகளும் நிகழ்ந்தன. எத்தனை என்று என்னால் நினைவு கொள்ளக்கூட இயலவில்லை. "ஈஷா நேச்சுரல்" என்னும் நம் புதிய வியாபார திட்டத்திற்கு ஒரு நல்ல குழு அமைந்துவிட்டது. இது அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும். சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற தீட்சையையும், நள்ளிரவில் நடைபெற்ற லிங்கபைரவி யந்திரா வைபவத்தையும் முடித்துக் கொண்டு, நம் அமெரிக்க ஈஷா மையம் செல்வதற்காக SFO ஏர்போர்டில் இருக்கிறேன். அமெரிக்க மையத்தில் ஒரு யந்திரா வைபவமும் அதைத் தொடர்ந்து நியூயார்க், வாஷிங்டன் டிசி, பால்டிமோர், லண்டன் போன்ற நகரங்களுக்கும் அடுத்த 5 நாட்களில் பயணம் செய்ய இருக்கிறேன்.

டென்னிஸியில் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே செலவு செய்யப் போகிறேன். இது ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக மாறி வருகிறது. டிரெயில் ஆப் டியர்ஸ் என்னும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருப்பதாலும் இனிமையற்ற சம்பவங்களை தன் நினைவில் வடுவாய் பதித்து வைத்திருப்பதாலும், நாம் 6 வருடங்களுக்கு முன் இங்கு குடி பெயர்ந்தபோது ஆரோக்கியமற்ற மனநிலையுடனேயே இங்குள்ளவர்கள் நம்மை எதிர்கொண்டனர். ஆனால் அன்றிலிருந்து, நாம் அங்கு செய்த செயல்களும், நம் தியானத் தன்மையும் இணைந்து இவ்விடத்தை உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்ட இடமாக மாற்றி இருக்கிறது. ஆதியோகியும் இங்கு உயிர்பெறப் போவதால், இவ்விடம், ஒருவர் வாழ்வதற்கு ஆசைப்படும் இடமாகவும், இந்த சக்தி பல உயிர்களுக்கு மருந்தாகவும், அவ்வுயிர் தன் எல்லையைக் கடந்து செல்லவும் செய்யும்.

ஓர் இடம் வளர்ச்சியற்று முடங்கிப்போவதற்கும், காயங்களுடன் ரணமாய் இருப்பதற்கும், அவ்விடத்தில் வலியும் வேதனையும் வேரூன்றி இருப்பதே காரணம். தகுந்த வளங்கள் இருந்தால், தானாகவே நெடு நாட்களுக்கு வாழும் திறனை அவ்விடம் பெறும். இந்த பூமியை இதுபோன்ற முடங்கச் செய்யும் சக்திகளிடமிருந்து காப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தச் செயல், தீயகுணங்களைக் கொண்ட மக்களை உருவாக்கக் காரணமாக இருக்கும் உந்து சக்தியை அழிப்பதைப் போன்றது. நாம் செய்ய விரும்பும் அத்தனை செயல்களையும் செய்ய நமக்கு சக்தியும் நேரமும் இருக்கிறதா என்று பார்ப்போம். இதை நிகழச் செய்ய உற்சாகமான, உறுதியான இளைஞர்கள் தேவை. இதுவே அடுத்த 10 ஆண்டுகளுக்கு நம்முடைய நோக்கமாக இருக்கும். நேர்மையும், உத்வேகமும், உள்நோக்குப் பார்வையும் கொண்ட இளைஞர்களை வருங்காலத்திற்காக உருவாக்க வேண்டும். இந்த மூன்று குணங்களும் நம் அமெரிக்க ஈஷா மையத்தின் நோக்கங்களாக விளங்க வேண்டும்.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.