ஈஷாவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வருடம் நடக்கவிருக்கும் நவராத்திரி கொண்டாட்டங்களைப் பற்றிய ஒரு முன்னோட்டம் இங்கே...

கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவியில், வரும் அக்டோபர் 2 முதல் 10 வரை நவராத்திரி திருவிழா 9 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படவிருக்கிறது. இந்த 9 நாட்களில் பக்தர்கள் தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலையிலும் நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உச்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும்.

நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அத்தனை நற்பலன்களையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் தேவியின் அருள் கிடைக்கும். நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள். ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்காக உயர்ந்து வருகிறது.

நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, இங்கே தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. மேலும், ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைசிறந்த கலைஞர்கள் நிகழ்த்தும் இசைக் கச்சேரி, பரத நாட்டியம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

மஹாளய அமாவாசை-செப்டெம்பர் 30

மாலை 6 மணி -அக்னித் தீயில் எள் அர்ப்பணம்
இரவு 8:00 மணி -மஹாளய அமாவாசை பற்றிய சத்குரு அவர்களின் வீடியோ
இரவு 11.15 மணி -காலபைரவ சாந்தி

நவராத்திரி- (அக்டோபர் 2-அக்டோபர் 10)

அக்டோபர் 2-4 துர்காவின் நாட்கள் -குங்கும அபிஷேகம்
அக்டோபர் 5-7 லக்ஷ்மியின் நாட்கள் -மஞ்சள் அபிஷேகம்
அக்டோபர் 8-10 சரஸ்வதியின் நாட்கள் -சந்தன அபிஷேகம்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலை:

காலை 7:00-7:30: குங்குமம்/மஞ்சள்/சந்தன அர்ப்பணிப்பு (அக்டோபர் 2, 5, அக்டோபர் 8 ஆகிய தேதிகளில்)

காலை 7:40: அபிஷேகம்

மாலை:

மதியம் 1:20-மாலை 4:20 -LingaBhairavi Closing Time

மாலை 4:20 -லிங்கபைரவி திறக்கப்படும் நேரம்
மாலை 5:30-6:10 -லிங்கபைரவியில் நவராத்திரி பூஜை
மாலை 6:20-6:45 ​-சூரியகுண்ட மண்டபத்தில் தரிசன நேரம்
மாலை 6:45-7:45 -சூரியகுண்ட மண்டபத்தில் கலைநிகழ்ச்சிகள்
மாலை 7:45-8:45 -லிங்கபைரவி ஊர்வலம் மற்றும் மஹா ஆரத்தி
இரவு 8:45-9:10 -லிங்கபைரவியில் நவராத்திரி சாதனா
இரவு 8:45-9:30 -கர்பா நடனம்: ஆண்களுக்கு - சூரியகுண்டம்; பெண்களுக்கு - பிக்ஷா ஹால் மேல்
இரவு 9:20 -லிங்கபைரவி சாத்தப்படும்

கலைநிகழ்ச்சிகள்

அக்டோபர் 2-ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் (பரதநாட்டியம்)
அக்டோபர் 3-திரு. மஞ்சுநாத் & திரு. பிரசாந்த் (ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு)
அக்டோபர் 4-திரு. பிரவீண் குமார் (பரதநாட்டியம்)
அக்டோபர் 5-திரு. ஸ்ருதிசாகர் & கீர்த்தனா (வாய்ப்பாட்டு & புல்லாங்குழல்)
அக்டோபர் 6-திரு. கே.எஸ். ரகுநாத் (புல்லாங்குழல் & வயலினிசை)
அக்டோபர் 7-திரு. சூரியபிரகாஷ் (வாய்ப்பாட்டு)
அக்டோபர் 8-தெருக்கூத்து (முத்தமிழ் கலை மன்றம்)
அக்டோபர் 9-பம்பை ஆட்டம் (நண்பர்கள் பம்பைச் சிலம்பு குழுவினர்)
அக்டோபர் 10-வில்லுப்பாட்டு (திரு. ஜெயராமன் - வில்லிசை குழுவினர்)

தினமும் மாலை 6.45 மணி முதல் 7.45 வரை சூரியகுண்ட மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.

நவராத்திரி நாட்களில், நிகழ்ச்சிகள் முடிந்து இரவு அன்னதானம் வழங்கப்படும். மேலும் ஈஷாவிலிருந்து கோவைக்கு சிறப்பு பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜயதசமி -அக்டோபர் 11 (சிறப்பு வித்யாரம்பம்)

நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியன்று, குழந்தைகளுக்கு கல்வியைத் துவக்கி வைக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. (2 முதல் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இதில் பங்குபெறலாம்)

நவராத்திரி சாதனா

இந்நேரத்தில் தேவியோடு, அவளின் அருட்கொடையில் வியாபித்திருக்க வேண்டுபவர்களுக்கு, மிக சாதாரணமான, ஆனால் அதேநேரத்தில், மிக சக்திவாய்ந்த நவராத்திரி சாதனாவை சத்குரு இங்கே வழங்குகிறார். இதை வீட்டில் இருந்தவாறே நீங்கள் பின்பற்றி, தேவியின் அருளை வீட்டிலேயே பெறலாம். இதை அக்டோபர் 2 அன்று ஆரம்பித்து, அக்டோபர் 10 வரை தினமும் பின்பற்ற வேண்டும்..

நவராத்திரி பற்றி சத்குரு

யோகக் கலாச்சாரத்தில், தட்சிணாயண காலத்தை (ஆடி முதல் மார்கழி வரை) சாதனா பாதை என்று அழைப்பார்கள். உத்தராயணத்தை (தை முதல் ஆனி வரை) ஞானப் பாதை என்று அழைப்பார்கள். அந்த 6 மாத சாதனா பாதையில் கடைசி மூன்று மாதங்கள் தேவியின் பாதையாக இருக்கிறது. சில சாதகர்கள் சில வகையான சாதனாக்களை அன்றைய தினத்திலிருந்து செய்யத் துவங்குவார்கள். அடிப்படையில் அந்த மூன்று மாதங்கள் பெண் தெய்வத்துக்கான காலகட்டம். இந்த காலகட்டம் தேவிக்கு உரியது. இந்த காலகட்டத்தில் பூமி கனிவாகிவிடுகிறது. பூமியின் வடக்கு அரைகோளப் பகுதி மென்மையாகிவிடுகிறது. ஏனென்றால் இச்சமயத்தில் பூமியின் வடக்குப் பகுதிக்கு சூரிய வெளிச்சம் மிகவும் குறைவாகக் கிடைக்கிறது. எனவே அனைத்துமே மென்மையாகி, பெண் தன்மை மிகுந்தவையாகிவிடுகின்றன. எதுவும் மிகத் துடிப்பாக இருப்பதில்லை. எனவே இது பெண்மையின் காலகட்டம் என்று அழைக்கப்படுகிறது. எனவே பெண்மை காலகட்டத்தின் துவக்கம்தான் நவராத்திரி அல்லது தசரா. இப்பண்டிகை முழுக்க முழுக்க தேவிக்கு உரியது.

நவராத்திரி, இருளிலிருந்து ஒளிக்குச் செல்லும் ஒரு பயணம். இந்த ஒன்பது நாட்களும் தமஸ், ரஜஸ் மற்றும் சத்வ என்னும் மூன்று அடிப்படை குணங்களுக்கு தக்கவாறு பிரிக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று நாட்கள் துர்கா, காளி போன்ற தீவிரத்தன்மையிலிருக்கும் தேவிகளுக்கு உரிய 'தமஸ்' என்று வகைப்படுத்தப்படுகின்றன. அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியோடு தொடர்புடையவை. மென்மையான ஆனால் உலகியல் சார்ந்த பெண்தெய்வங்களுக்கு (ரஜஸ்) உரியவை. கடைசி மூன்று நாட்கள் அறிவு, ஞானம் போன்ற மற்ற விஷயங்களோடு தொடர்புடைய சரஸ்வதி, அதாவது சத்வ குணத்தோடு தொடர்புடையவை. கடைசி நாள், அதாவது பத்தாம் நாள் விஜயதசமி. அதாவது நீங்கள் இந்த மூன்று குணங்களையும் வெற்றி கொள்கிறீர்கள் என்று பொருள்.

இந்த மூன்று குணங்களில் எந்த ஒன்றின் மீது நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களோ அது உங்கள் வாழ்க்கையை ஒரு குறிப்பிட்ட வழியில் அழைத்துச் செல்லும். நீங்கள் தமஸில் கவனம் செலுத்தினால் ஒருவகையில் சக்தி வாய்ந்தவராவீர்கள். ரஜஸில் கவனம் செலுத்தினால் மற்றொரு வழியில் பலம் பெற்றவராவீர்கள். சத்வத்தில் கவனம் செலுத்தினால் முற்றிலும் மாறுபட்ட ஒரு வழியில் வலிமை பெற்றவராவீர்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து நீங்கள் சென்றால் அது முழுமையான விடுதலை. இந்த மூன்றையும் நீங்கள் வென்றுவிட்டால், அன்றைய தினம்தான் விஜயதசமி-வெற்றியின் திருநாள்.

"நீங்கள் தேவியின் பக்தராக இருந்தால், உங்களால் புரிந்து கொள்ள முடியாத பல கோடி வழிகளில் அவள் உங்களுக்கு அருள் புரிவாள்." - சத்குரு