"இன்சோம்னியா" - தூக்கமின்மையை இப்படி குறிப்பிடுவர். இதற்கு காரணங்கள் பல... ஆனால் தீர்வு மருந்து மட்டும்தானா? இல்லை. இதற்கு சத்குரு என்ன தீர்வு தருகிறார் பார்க்கலாம்...

Question: எனக்குத் திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். என் வருமானத்தின் பாதியை தர்மகாரியங்களுக்குச் செலவு செய்கிறேன். ஆனால் எனக்கு உறக்கமே வருவதில்லை. அதற்காகத்தான் இந்த யோகா வகுப்பிலேயே சேர்ந்திருக்கிறேன். நான் பல மருத்துவர்களைப் பார்த்து பல சிகிச்சைகளை எடுத்திருக்கிறேன். இருந்தாலும் பயனில்லை. நான் நிறைய நேரத்தையும், சக்தியையும் தர்மகாரியங்களுக்குச் செலவிட்டும் தூக்கம் வருவதில்லை. நல்ல தூக்கம் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு வேறு செல்வங்களோ, வசதிகளோ வேண்டாம். தூக்கம் மட்டும்தான் வேண்டும், சுவாமி! தயவுசெய்து இதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள்.

சத்குரு:

நீங்கள் உங்களுக்கு எந்த செல்வமும் வேண்டாம். தூக்கம் மட்டும்தான் வேண்டும் என்றால், தூக்கம்தான் உங்கள் வாழ்க்கையில் ரொம்பப் பெரிய செல்வம் ஆகிவிட்டது என்று பொருள். சில காலங்களுக்கு முன்பு ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டார். "நீங்கள் ஒன்று கேட்டு உங்களுக்கு அது கிடைக்குமென்றால் என்ன கேட்பீர்கள்?" என்று. சில மாணவர்கள் சொன்னார்கள் "ஒரு கார் வேண்டுமென்று கேட்போம்." சில பேர், "ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும். ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று கேட்பேன்" என்றார்கள். ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கு ஏற்ப சொன்னார்கள். அதற்கு ஆசிரியர் பதில் சொன்னார். "அட முட்டாள்களே, இதையெல்லாம் எதற்குக் கேட்கிறீர்கள்? நிறைய மூளை வேண்டும். அறிவு வேண்டும் என்று கேளுங்கள்" என்று. அதற்கு ஒரு மாணவன் எழுந்து நின்று பதில் சொன்னார், "யார் யாருக்கு என்னென்ன இல்லையோ அதைத்தான் அவர்கள் கேட்கமுடியும்" (சிரிக்கிறார்). இப்போது உங்கள் வாழ்க்கையில் எது இல்லையோ, அது தான் மிகப்பெரிய செல்வமாக உங்களுக்குத் தெரிகின்றது இல்லையா? இப்பொழுது உங்களைப் பொறுத்தவரையில் தூக்கம்தான் பெரிய செல்வமாகவும், வசதியாகவும் இருக்கின்றது. தியானத்தின் பாதையில் இருக்கிறவர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. தினமும் தியானம் செய்யுங்கள். தூக்கம் தானாக வரும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.