Question: ஜோசியம் பார்த்து நல்ல நாள் மற்றும் நேரம் தெரிந்து கொண்டு, அதன்படி குழந்தையை சிசேரியன் செய்து வெளியே எடுக்கிறார்கள். இப்படி நல்லநேரம் பார்த்து குழந்தையை வெளியில் எடுப்பது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குழந்தை பிறக்கின்ற அந்த நேரம் மிகவும் முக்கியமானதுதான். ஆனால் சிலர் தாங்கள் வாழும்போதே உட்காருவதற்கு, நிற்பதற்குக் கூட ஜோசியம் பார்த்துதான் செய்வார்கள். நேரம் நன்றாக இல்லையென்றால், வேறெங்கும் நகராமல், எங்கே இருக்கிறார்களோ அங்கேயே உட்கார்ந்து கொள்வார்கள். எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வீட்டிலிருந்து ஒரு அடி கூட வெளியே எடுத்து வைக்க மாட்டார்கள்.

கூட்டிற்குள் இருந்து வெளியே வரப் போராடும் பட்டாம்பூச்சியால் மட்டுமே பறக்க முடியும், அந்த போராட்டத்தில்தான் அதற்கு சக்தி வரும். பறந்தால்தானே அது பட்டாம்பூச்சி!

ஓர் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தனக்கேற்ற பருவம் வருகிறபோது மரங்கள் பூ பூக்கின்றன. அவை நேரம் பார்த்து மலர்வதில்லை. அதைப் போலத்தான் நாமும். ஏதோ ஒரு செயல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறோம், அதை சூழ்நிலை சரியாக அமையும்போது செய்துகொள்ள வேண்டும்.

அவ்வளவு பக்குவம் போதாதவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் கலாச்சாரத்தில் வகுத்துக் கொடுத்தார்கள். எந்த நேரத்தில் தூங்கி எழவேண்டும் என்பதையெல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். சந்தியா காலத்தில் எழ வேண்டும் என்றார்கள், இல்லையென்றால் மதியம் வரை எழுந்திருக்கவே மாட்டீர்கள், அப்படித்தானே? இதையெல்லாம் உங்களுக்கு சாஸ்திரமாக எழுத வேண்டும், வேதமாக சொல்ல வேண்டும், அப்போதுதான் செய்வீர்கள்! அதனால்தான் அப்படிச் செய்தார்கள்.
நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் நம் வாழ்க்கை நன்றாக செல்வதற்கு எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதை நீங்களே புரிந்துகொள்ள முடியும்தானே?

தற்போது பிறப்பதற்குக்கூட ஜோசியம் பார்த்து நேரம் குறிக்கத் தொடங்கி விட்டீர்கள். நாளை 11.20 மிகவும் நல்ல நேரம், இறப்பதற்கு... அப்பொழுது இறந்தால் நேராக சொர்க்கம்தான். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்களா? ஆனால் அப்படிச் செய்யமாட்டீர்கள்.

ஒருவர் வீட்டில் பட்டாம்பூச்சி வளர்த்தார். பட்டாம்பூச்சி முதலில் புழுவாக இருக்கும், அதன்பின் அது தன்னை சுற்றி கூடு கட்டிக் கொள்ளும், அதற்கு இறக்கை முளைத்தபின் கூட்டை விட்டு வெளிவரப் போராடும் என்பதெல்லாம் நீங்கள் அறிந்ததே... நான் சிறுவயதில் பட்டாம்பூச்சி வளர்த்ததால், இதனை மிகவும் நெருக்கமாக இருந்து கவனித்திருக்கிறேன். இப்படி பட்டாம்பூச்சியை வளர்த்த ஒருவர், இந்த பட்டாம்பூச்சி இவ்வளவு சிரமப்படுகிறதே என்று பரிதாபப்பட்டு அதன் கூட்டை கீறிக் கிழித்து திறந்து விட்டார். அதுவும் வெளியே வந்துவிட்டது. ஆனால் மற்ற பட்டாம்பூச்சிகள் எல்லாம் பறக்கும்போது இதனால் மட்டும் பறக்க முடியவில்லை. கூட்டிற்குள் இருந்து வெளியே வரப் போராடும் பட்டாம்பூச்சியால் மட்டுமே பறக்க முடியும், அந்த போராட்டத்தில்தான் அதற்கு சக்தி வரும். பறந்தால்தானே அது பட்டாம்பூச்சி!

இதைபோலதான் ஒரு குழந்தையும். தன் தாயின் கருவில் அதற்கு எவ்வளவோ போராட்டங்கள் உள்ளன. அந்த போராட்டங்களை எல்லாம் அக்குழந்தை எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்கு தேவையான பரிபூரணமான வளர்ச்சி ஏற்படும். தாய்க்கோ அல்லது சேய்க்கோ ஏதோ ஒரு காரணத்தால் பிரச்சனை ஏற்படும்போது சிசேரியன் செய்வது முற்றிலும் வேறு விஷயம். ஆனால் தற்போது சிசேரியன் என்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இப்படி சிசேரியன் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதால் அந்தக் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவே செய்யும்.