IYO-Blog-Mid-Banner
நம்மில் அத்தனை பேருக்கும் முதுகுவலி வரும், போகும். ஆனால், 30 முதல் 40 சதவிகித மக்களுக்கு முதுகு வலி வரும்... ஆனால், போகாது. நம் வாழ்க்கை முறையால் முதுகு வலியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு இந்த பிரச்சனையின் மூலமும் தெரியாது, அதை கையாளும் திறனும் கிடையாது. அதனால் முதுகு வலி நம்மை பாடாய் படுத்த விடலாமா? இங்கே, முதுகு வலி சில தீர்வுகள், சில முன் எச்சரிக்கைகள் உங்களுக்காக...


டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:

ம்மில் அத்தனை பேருக்கும் முதுகுவலி வரும், போகும். ஆனால், 30 முதல் 40 சதவிகித மக்களுக்கு முதுகு வலி வரும்... ஆனால், போகாது.

இன்றைக்கு நேற்றல்ல... 2,000 ஆண்டுகளுக்கு முன்பே, முதுகுவலியின் பல்வேறு வகைகள் பற்றியும், காரணம் மற்றும் சிகிச்சைகள் பற்றியும் ஆயுர்வேத நூல்களில் விவரிக்கப்பட்ட பெருமை கொண்ட வியாதி இது!

தவறான முறையில் அமர்ந்திருப்பது, அதிகப்படியான பணிச்சுமை, முதுமையின் தள்ளாமை, ஒரே மாதிரி வேலையைத் தொடர்ந்து செய்வது என முதுகுவலிக்குப் பல காரணங்கள்!

முதுகுவலிக்கான பொதுவான காரணங்கள்:

  • தொற்றுநோய்க் கிருமிகள், காயங்கள் மற்றும் கட்டிகள் ஆகியவற்றால் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்புகள்.
  • வாழ்க்கை முறை, உடல் அமர்ந்திருக்கும் முறை அல்லது மன அழுத்தம் காரணமாகவும் வருகிறது.

தற்போது மனிதனுக்கு ஏன் முதுகுவலி வருகிறது?

இதற்கு 4 முக்கியக் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நவீன வாழ்க்கை முறை தொடர்பானவை.

  • பல வேலைகளுக்கு இயந்திரங்களை உபயோகிக்கப் பழகிக்கொண்டோம். அதனால் நம் உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது. முதுகெலும்பு தசைநார்கள் சரியாக உபயோகிக்கப்படாததால், நம் தசைநார்கள் பலவீனமடைந்துவிட்டன.
  • தவறான முறையில் நிற்பது, உட்கார்வது அல்லது தூங்குவது போன்றவற்றால் தவறான தசைநார்களுக்கு அதிக வேலைப்பளு கொடுக்கிறோம்.
  • திடீரென உடற்பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் உடல் சேதங்கள்
  • அதிக மன அழுத்தம்

எப்படி மன அழுத்தம் முதுகெலும்புக்குச் சேதத்தை உண்டாக்குகிறது?

உணர்ச்சிவசப்படுவது, மனஅழுத்தம், பரபரப்பு, பயம், கோபம், சோர்வு போன்ற காரணங்களால் மனதளவில் பதற்றம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் நமது முதுகு மற்றும் கழுத்திலுள்ள தசைநார்கள் விரைப்பாகிவிடுகின்றன. அப்படி அந்த தசைநார்கள் விரைப்பாகும்போது, முதுகுத்தண்டில் அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும் இறுகிய தசைநார்களால் ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் ஏற்படும் மாற்றத்தால் தசைநார்கள் வழக்கமற்ற முறையில் சுருங்குகிறது. இதனால் முதுகெலும்பு இணைப்புகளுக்கும் மற்றும் மென்மையான திசுக்களுக்கும் மேலும் சேதம் ஏற்படுகிறது. இப்படி தசைநார்கள் தொடர்ந்து இறுகும்போது மிகவும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

இந்தத் தசை நார்களின் இறுக்கம் சில நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் பொறுத்து நாட்கள், மாதங்கள் என்று நீடிக்கும். மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடும்போது தசை இறுக்கமும் சிறிது சிறிதாக நின்றுவிடும். ஆனால் முதுகெலும்புக்கு ஏற்பட்ட சேதம் நிரந்தரமாக இருந்து வலி கொடுக்கும்.

முதுகுவலியை எந்த முறைகளில் தடுப்பது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
  • சரியான முறையில் நிற்பது, உட்கார்வது மற்றும் படுப்பது.
  • தொடர்ந்த உடற்பயிற்சிகள்
  • சரியான முறையில் மனஅழுத்தத்தை நிர்வாகம் செய்வது

நோய் மிகக் கடுமையாக இருக்கும்போது..!

வலிக்கும் பகுதிக்கு ஓய்வு கொடுக்கவும். அப்போதுதான் திசுக்கள் அல்லது எலும்பு ஆகியவற்றில் ஏற்பட்ட காயங்கள் வேகமாக ஆறும். அந்த நேரத்தில் வலி நிவாரணிகள், தசைகளுக்கு தளரச் செய்யும் மருந்துகள், ஒத்தடங்கள் மற்றும் ஓய்வாக இருப்பது ஆகியவை வலியிலிருந்து உங்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

முதுகு வலிக்கு யோகா எப்படி உதவுகிறது?

யோகாவில் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனியான சிகிச்சை என்பது கிடையாது. ஆனால் உள்நிலை வளர்ச்சிக்காக யோகாவைப் பின்பற்றும்போது, இயல்பாகவே உடல்நலமும் பெற முடிகிறது.

யோகா என்பது ஓர் உடற்பயிற்சியல்ல. ஆனால், யோகாவைப் பொறுத்தவரை, உடல், மனம் மற்றும் மூச்சு ஆகியவை ஒத்திசைவில் இருப்பது அவசியம். உடலின் பலம், வளையும்தன்மை, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை யோகா அதிகரிக்கிறது. மற்றும் யோகா மனத்துக்கு ஓய்வுநிலையை அளிப்பதுடன் உடலுக்கு உறுதியளிக்கிறது. யோக ஆசனங்கள் முதுகெலும்பை வலுப்படுத்துவதாலும் தசை நார்களை நீட்டித்து வளையும் தன்மையை அதிகரிப்பதாலும் முதுகு வலியால் அவதிப்படுபவர்களுக்கு நன்மையைத் தருகிறது. யோகாவின் ஒரு பகுதியான சுவாசப் பயிற்சியும் ஓய்வுத்தன்மையும், பதட்டத்தைக் குறைத்து தசைநார்கள் எளிதில் விரைப்படைவதைத் தடுக்கிறது.

ஷக்தி சலனக் கிரியை போன்ற சில கிரியைகள் முதுகுத்தண்டுக்கு உறுதியளிப்பதுடன் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது!

முதுகெலும்பு

நரம்பியல் விஞ்ஞானத்தில் மூளையை முக்கிய உறுப்பாகவும் முதுகுத்தண்டை மூளையின் உப உறுப்பாகவும் பார்க்கின்றனர். ஆனால், யோகாவில் நாம் எப்போதும் முதுகுத்தண்டை மரமாகவும், மூளையை அந்த மரத்தின் மலர் போன்றும் பார்க்கின்றோம். நீங்கள் எப்படி முதுகெலும்பைப் பராமரிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் மனம் மற்றும் உணர்ச்சிகளின் இயக்கம் இருக்கிறது. மனதின் இயக்கத்தைப் பொறுத்து உங்கள் மூளையின் திறன் அமைகிறது. ஆன்மிகத்தில் முதுகெலும்புக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் பரு உடலின் எல்லைக்கு அப்பால் உங்கள் அனுபவத்தை எடுத்துச்செல்ல நீங்கள் விரும்பினால், உங்கள் அனுபவத்தில், முதுகெலும்பை இந்த முழுப் பிரபஞ்சத்தின் அச்சாணியாக உணர முடியும். யோகாவில் நாம் தெய்வீகத் தன்மை அடைவதற்கான ஏணியாக முதுகெலும்பைப் பார்க்கிறோம்.

முதுகெலும்புக்கு யோகா தரும் முக்கியத்துவத்தைத் துரதிர்ஷ்டவசமாக மருத்துவ விஞ்ஞானம் தருவதில்லை. பரிணாம வளர்ச்சியின்படி பார்த்தால்கூட, முதுகெலும்பின் உருவாக்கத்துக்குற்குப் பிறகுதான் மூளையின் உண்மையான வளர்ச்சி நடக்கத் துவங்கியது. பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியப்படி என்னவென்றால், முதுகெலும்பற்ற பிராணியிலிருந்து முதுகெலும்புள்ள உயிரினமாக மாறியதுதான். அடுத்த பெரிய படி முதுகெலும்பு கிடை நிலையிலிருந்து நேர் நிலைக்கு மாரியதுதான். முதுகெலும்பு நேராக மாறிய பிறகுதான் மூளை மிகப் பெரிய வளர்ச்சியை அடைகிறது.

ஒரு மாமரத்தின் அருகே சென்று நீங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு மாங்கனி கிடைக்கப் போவதில்லை. நீங்கள் மாமரத்தின் வேரை போஷிக்க வேண்டும். வேரை நல்லபடியாக பார்த்துக் கொண்டால், பழம் எப்படியும் உங்களுக்குக் கிடைக்கும். முதுகெலும்பின் அடிப்பாகத்தை நீங்கள் செயல்படுத்தினால் அதே போல் மெதுவாக மூளையின் செயல்படும் திறனும் அதிகமாகும்.

உங்கள் முதுகெலும்பின் அடிப்பகுதி இயங்குமாறு பார்த்துக்கொள்வது மிக முக்கியமானது. இவ்வாறு தொடர்ந்து இயங்குமாறு பார்த்துக்கொண்டால் முதுகெலும்பின் வேர்ப்பகுதி போஷிக்கப்படுகிறது. நீங்கள் உங்கள் உடலைச் சரியாகப் பயன்படுத்தாதபோது உங்கள் முதுகெலும்பு விரைப்பாக ஆகிவிடுகிறது.

தரையில் சம்மணமிட்டு உட்காரும்போது உங்கள் முதுகெலும்பின் அடிப்பகுதி நன்கு இயங்கத் தொடங்குகிறது. பதங்காசனா மற்றும் சிசுபாலாசனா போன்ற ஆசனங்கள் முதுகெலும்பின் வேர்ப்பகுதியை நன்கு
போஷிக்கிறது.

முதுகுவலி குறித்து சில குறிப்புகள்!

  • எப்போதும் உங்கள் இரண்டு கால்களும் உங்கள் உடல் எடையைச் சமமாகத் தாங்கும்படி நிற்க வேண்டும். ஏதாவது ஒரு கால் அதிக எடையைத் தாங்க வேண்டி வந்தால், நம் கழுத்தும் பின்புறமும் பாதிப்புக்குள்ளாகி நாளடைவில் முதுகெலும்பில் வலி உண்டாகலாம்.
  • சமமற்ற தரையில் நீண்ட நேரத்துக்கு நிற்கக் கூடாது. நிற்கும்போது இரு கால்களுக்கும் சிறிது இடைவெளி இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • நன்றாகப் பொருந்தும்படியான செருப்புகள் அணியவும்.

பைகளைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை...

  • உங்கள் இருபுறமும் பொருட்களின் எடை சமமாக இருக்கும்படி பொருட்களை பைகளில் வைத்து எடுத்துச் செல்லவும்.
  • ஒரே நேரத்தில் அதிக பொருட்கள் எடுத்துச் செல்வதைவிட இரண்டு மூன்று தடவைகளில் எடுத்துச் செல்லலாம்.
  • அதிகச் சுமையுள்ள பையை ஒரே தோளில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும்
  • ஒரே பட்டி உள்ள பையை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், அந்த பட்டி அகலமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.

உட்காரும்போது நீங்கள் கவனிக்க வேண்டியவை...

  • முதுகை நேராக சாய்மானத்தில் வைத்து நிமிர்ந்து உட்காருங்கள். அலங்கோலமாக உட்காராதீர்கள்.
  • உங்கள் தலையும், தோள்பட்டையும், இடுப்பும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
  • உங்கள் பாதம் தரையிலோ அல்லது மிதியடியிலோ நன்கு படிந்திருக்க வேண்டும்.
  • மிகவும் உயரம் குறைவான நாற்காலிகளைத் தவிர்க்கவும்
  • சாய்மானம் இல்லாத நாற்காலியாக இருந்தால் நிமிர்ந்த நிலையில் உட்காரவும்.

எடை தூக்கும்போது கவனிக்க வேண்டியவை...

எடை குறைவோ, அதிகமோ... ஒரு பொருளை எப்போதும், காலை நேராக வைத்த நிலையில் தூக்காதீர்கள். எதையாவது தூக்கும்போது, எப்போதும் உங்கள் முழங்கால்களை மடக்கிக் கொள்ளுங்கள். பொருளை உங்கள் உடலுக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படிச் செய்யும்போது, உங்கள் கால்களின் பெரிய தசைநார்கள் அந்த வேலையின் பளுவை எடுத்துக்கொள்கிறது. முதுகின் சிறிய தசைநார்கள் பாதிப்படைவதில்லை!

The Wedding Traveler @ flickr