Question: ஓரளவு நல்ல வருமானத்தில், குடும்பத்துடன் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து வந்தேன். இன்றைக்கு இளைஞர்கள் எடுத்த எடுப்பில் 20,000, 30,000 என்று சம்பாதிப்பதால், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள். இதனால், எனது வீட்டுக்காரர் திடீரென்று வீட்டு வாடகையை உயர்த்திவிட்டார். வாடகை மட்டுமல்ல. நுகர் பொருள்களின் விலை எல்லாமே இந்தப் பொறுப்பற்ற இளைஞர்களால் ஏறிவிட்டது. இதனால், என்னைப் போன்ற பலர் நசுக்கப்படுகிறோம். இதற்கு என்னதான் தீர்வு?

சத்குரு:

ஒரு சிறிய மரத்தில் குருவி ஒன்று கூடு கட்டியது. முட்டைகள் இட்டுக் குஞ்சு பொரித்தது. அடுத்த ஆண்டும் குருவி வந்தது. அதே வசதியான கூட்டில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தது. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இது தொடர்ந்தது. குட்டையாக இருந்த மரம் வளர வளர, குருவி கட்டி வைத்த கூடு உயரத்துக்குப் போய்விட்டது. குருவிக்குக் கோபமான கோபம்.

பொருளாதாரத்தில் நலிந்திருந்த நம் நாடு, குதியாட்டம் போட்டுக் கொண்டு முன்னேற்றத்துக்கான பாதையில் விரையும்போது, அதை இரு கரம் நீட்டி வரவேற்று மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

"ஏய், மூட மரமே... இப்படி நீ ஒட்டடைக்குச்சி போல் வளர்ந்து கொண்டே போனால், நான் எப்படி என் கூட்டைச் சென்றடைவது? எப்படி முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது? போதும் நீ வளர்ந்தது. இனி, வளர்வதை நிறுத்திக் கொள்!

மரம் அமைதியாகச் சொன்னது... 'உனக்குக் கூடு கட்டி, முட்டையிட இடம் கொடுத்தேன். உன் குஞ்சுகளுடன் பசியாறப் பழங்கள் கொடுத்தேன். குஞ்சு, குடும்பம் என்று நீ வளர்வதைப் போல, நானும் கிளை விரித்து வளர வேண்டாமா? உனக்கு வசதியான உயரத்தில், ஒரு தாழ்ந்த கிளையில் கூடு கட்டிக் கொள். அதை விட்டுவிட்டு ஏன் இப்படி ஆத்திரப்படுகிறாய்?"

அந்த முட்டாள் குருவி போல்தான் நீங்களும். உங்களுக்கு எல்லா வசதிகளையும் இதுவரை அளித்து உதவிய சமூகத்தை இன்றைக்குப் பழிக்கிறீர்கள். நீங்கள் வளர்ந்தது போல், உங்களைச் சுற்றியுள்ள சமூகமும் வளர வேண்டாமா?

மாற்றம் என்பது காலத்தின் இயல்பு. மக்கள் தொகை அதிகமாக உள்ள நம் நாட்டில், மிக அவசியமான ஒரு பொருளாதார மாற்றம்தான் இப்போது நிகழ்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தைத் தாழ்ந்த நிலையில் இருந்து சற்றே மேல்நிலைக்கு உயர்த்தும் புரட்சி நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நல்லதோ, கெட்டதோ மாற்றம் என்று வந்துவிட்டால், ஒருவரின் வசதிகள் கூடுவதும், மற்றவர் தாழ்த்தப்படுவதும் இயல்பாக நிகழக்கூடியவைதான். அதைத் தவிர்க்க இயலாது. அதற்காகப் பெரும்பான்மையோருக்கு நலம் விளைவிக்கும் மாற்றத்தை வேண்டாம் என்று நிராகரிக்க முடியுமா?

நேற்றுவரை உங்கள் ஊதியத்தில் நீங்கள் அனுபவித்துக் கொண்டு இருந்த வசதிகளில் பலவற்றை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிலையில்தானே எவ்வளவோ பேர் உங்களுக்குக் கீழே இருந்தார்கள்? அவர்களைப் பற்றி அப்போது கவலைப்பட்டீர்களா? இப்போது, அடுத்தவர் வருமானம் உங்களுடையதைவிடக் கூடுதலாகி விட்டவுடன் நீங்கள் நசுக்கப்படுவதாக உணர்கிறீர்களே, இது என்ன நியாயம்?

இன்றைக்கும் ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் அவதிப்பட்டு வாழ்பவர்கள் இருக்கிறார்களே, அவர்களைப் பற்றிச் சிந்தித்திருக்கிறீர்களா?

சங்கரன்பிள்ளை பிழைப்புக்காக அரேபிய நாட்டுக்குச் சென்றார். மன்னரின் தலைமுடியை மழிக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. நல்ல ஊதியம்.

சங்கரன்பிள்ளை தன் சேமிப்பைத் தங்கமாக்கினார். அது சாத்துக்குடி அளவிருந்தது. அதைத் தன் தொழிற் கருவிப் பெட்டியில் வைத்திருந்தார்.

ஒருமுறை முடி திருத்தும் நேரத்தில் மன்னர் கேட்டார்... "நமது ஆட்சியில் மக்கள் எப்படி இருக்கிறார்கள்?"

"பாதுஷா, உங்கள் ஆட்சிக்கு என்ன குறை? ஒவ்வொரு குடிமகனிடமும் சாத்துக்குடி அளவு தங்கமாவது இருக்கிறது" என்றார் சங்கரன்பிள்ளை, பூரிப்பாக.

மன்னர் இதைத் தன் அமைச்சரிடம் சொல்லி மகிழ்ந்தார்.

அமைச்சர் புன்னகைத்து, "இதே கேள்வியை நாளைக்கும் சங்கரன்பிள்ளையிடம் கேட்டுப் பாருங்கள்" என்றார்.

அன்றிரவே, சங்கரன்பிள்ளை வைத்திருந்த தங்கத்தைத் திருடி எடுத்து வர, அமைச்சர் ஏற்பாடு செய்தார்.

மறுநாள் சங்கரன்பிள்ளையிடம் சென்ற மன்னர் முந்தின நாள் கேட்ட அதே கேள்வியைக் கேட்டார்.

சங்கரன்பிள்ளையின் முகம் தொங்கிப் போனது. "சொன்னால் தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது, பாதுஷா! உங்கள் ஆட்சியில் எங்கு பார்த்தாலும் திருடு, கொள்ளை, வழிப்பறிதான்! கேவலம் சாத்துக்குடி அளவு தங்கம் கூட ஒருத்தரிடமும் நிலைப்பதில்லை" என்று புலம்பினார்.

சங்கரன்பிள்ளை தனது நிலைமையை அடிப்படையாக வைத்து, ஒரு ஆட்சியையே முடிவு செய்ததுபோலத்தான் நீங்களும் உங்களை வைத்து சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையும் நசுக்கப்பட்டு விட்டதாகத் தீர்வு எழுதுகிறீர்கள்.

பொருளாதாரத்தில் நலிந்திருந்த நம் நாடு, குதியாட்டம் போட்டுக் கொண்டு முன்னேற்றத்துக்கான பாதையில் விரையும்போது, அதை இரு கரம் நீட்டி வரவேற்று மகிழ்ச்சி கொள்ளுங்கள். இந்த வளர்ச்சிக்கு எதிரானதொரு எண்ணத்தை கருக்கொள்ளக்கூட அனுமதிக்காதீர்கள்.

உங்கள் வசதிகள் குறைந்துவிட்டதற்காக, மற்றவரைக் குறை சொல்வதை நிறுத்துங்கள். எதுவும் முடிந்துவிடவில்லை. உங்களது நிலையும் மேலும் உயர, வாழ்க்கை ஏராளமான வாய்ப்புகளை ஒளித்து வைத்திருக்கிறது.

மாற்றத்துக்கு ஏற்றபடி உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்களாலும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் கம்ப்யூட்டர் கல்வியைப் பயில முடியும். இன்னும் அதிக வருமானம் தரக்கூடிய வேலைகளைப் பெற முடியும்.

எந்தக் கணமும் அப்படியே நிலைத்து இருப்பது இல்லை என்பதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யம். மாற்றத்தை மனதார ஏற்கத் தயாராக இல்லையெனில், வலியும், வேதனையும்தான் மிஞ்சும்.