மனிதன் விட்டுச் செல்லும் கார்பன் கால்தடங்கள்... தீர்வு என்ன?
இன்று பலரும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் பற்றி பேசினாலும், அதனை தனிமனிதனுக்கான பிரச்சனையாக யாரும் பார்ப்பதில்லை! இந்த பதிவு சுற்றுச்சூழல் மாசுபாட்டில் தனிமனிதனுக்கு இருக்கும் பங்களிப்பையும், அதற்குத் தீர்வுகாண ஒவ்வொரு மனிதனும் ஆற்றவேண்டிய செயல் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது!
இன்று பலரும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் பற்றி பேசினாலும், அதனை தனிமனிதனுக்கான பிரச்சனையாக யாரும் பார்ப்பதில்லை! இந்த பதிவு சுற்றுச்சூழல் மாசுபாட்டில் தனிமனிதனுக்கு இருக்கும் பங்களிப்பையும், அதற்குத் தீர்வுகாண ஒவ்வொரு மனிதனும் ஆற்றவேண்டிய செயல் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது!
மரங்கள், மலையுச்சி, மர நிழல், நீர் வீழ்ச்சி, குளிர்ந்த தென்றல், இதுபோன்ற வார்த்தைகளை எல்லாம் இப்போது உச்சரித்தால் ஏதோ கனவு உலகம் போல்தான் இருக்கிறது.
இந்த வார்த்தைகள் எல்லாம் ஏதோ அகராதியிலிருந்தே எடுக்கப்பட வேண்டிய வார்த்தைகளோ என்னும் சந்தேகம் தற்போது வந்துவிட்டது. நமது தற்போதைய செயல்களினால், வரும் தலைமுறையினர் குடிநீரைக் கூட காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்று சென்ற தலைமுறையினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதேபோல், தாங்கள் செய்துவரும் செயல்களினால், வரும் தலைமுறையினர், சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனைக் கூட ஏதோ ஒரு வகையில் காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் என்று இன்றைய தலைமுறையினர் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால் மனிதர்களின் தொடர்ந்த பொறுப்பற்ற செயல்களால் எதிர்பார்க்காதவை நடந்தேதான் வருகிறது.
உலக வெப்பமயமாதல் என்றும் எங்கோ இருக்கும் பனி படலங்கள் உருகுகிறது என்றும் பல்வேறு வழிகளிலும் மனிதனுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டும், எங்கோ இருக்கும் உலகத்துப் பிரச்சனைக்கு நான் என்ன செய்ய முடியும் என்று மனிதன், தான் அன்றாடம் செய்யும் அதே செயல்களையே மீண்டும் மீண்டும் செய்வதால் உலக வெப்பமயமாதலை தவிர்க்க முடியாத சூழ்நிலையாக உருவாக்கியுள்ளோம்.
இது உலகத்து பிரச்சனை என்று ஏதோ மிகப் பெரிய செயலாக சித்தரிக்கப்பட்டாலும் இது நம் சுவாசத்தை பற்றியது. நமது ஒவ்வொரு மூச்சையும் பற்றியது. தொழிற்சாலைகளும் வாகனங்களும் நமது சுற்றுச்சூழல் கேட்டிற்கு காரணம் என்று யாரோ கவனிக்க வேண்டிய பிரச்சனையாக கடந்த 10 ஆண்டுகளாக சித்தரிக்கப்பட்டுவிட்டது.
தற்போது விஞ்ஞானிகள் ஒரு தனிமனிதன் இந்த சூழ்நிலை கேட்டிற்கு எந்த அளவிற்கு காரணமாக இருக்கிறான் என்பதை அளப்பதற்கு கார்பன் கால்தடம் என்ற அளவு கோலை பயன்படுத்துகிறார்கள்.
Subscribe
ஒரு தனிமனிதனே தனது வெளிமூச்சின் காரணமாக ஒரு கார்பன் தொழிற்சாலையாக இருக்கிறான். மேலும் தான் உண்ணும் உணவு, பயன்படுத்தும் மின்சாரம், தொழிற்சாலைப் பொருட்கள் மற்றும் வாகனம் ஆகியவற்றால் இந்த பூமியின் பரப்பில் கார்பன் டை ஆக்சைடின் அளவை அதிகரிக்கிறான்.
இதை உலகத்துப் பிரச்சனையாக இல்லாமல் ஒரு தனிமனித பிரச்சனையாக பார்க்கும்போது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இதற்கான செயல்பாட்டில் பொறுப்பு இருக்கிறது.
ஒரு தனிமனிதன் தான் உண்ணும் உணவு, பயன்படுத்தும் மின்சாரம், தொழிற்சாலைப் பொருட்கள் ஆகியவற்றை குறைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறான். உதாரணமாக நடந்து செல்ல சாத்தியம் இருக்கும்போது, வாகனத்தில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்ல வேண்டும்.
இதுபோன்ற செயல்கள் சாத்தியப்படாதபோது மிகவும் எளிமையான இனிமையான இயற்கையான வழி, மரங்கள் நடுவதுதான். அவை நமது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுவதோடு நாம் சுவாசிக்க ஆக்சிஜனையும் வெளியிடுகிறது.
கோடையின் வெப்பம் சுட்டெரித்தாலும் ஒரு மர நிழலில் சென்று இளைப்பாறினால் அதன் குளிர்ச்சி அந்த சூழ்நிலையையே சுகமாக்குகிறது.
அறிவியலின் அற்புத வளர்ச்சியால் நமது வீட்டின் அறையின் தட்ப வெப்பத்தையே மாற்றிவிட முடிந்தாலும் இயற்கையின் மடியில் ஒரு சில நாட்களாவது இருந்து வர வேண்டும் என்று மக்கள் மலைப் பிரதேசங்களை நாடி செல்கின்றனர்.
வெட்டி சாய்த்தாலும் நாம் சாய்வதற்கு நாற்காலி தரும் இந்த மரங்களை அடுக்குமாடி கலாச்சாரம் என்று சொல்லி நம் வாழ்வில் இருந்து பிரிக்க முடியாது.
மேலும் மரங்கள் வளர்ப்பதால் மண் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்பு போன்றவை இயற்கையாகவே நடக்கும். ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்கள் மரங்கள் அடர்ந்திருக்கும் குளுமையான சூழ்நிலையில் தானாக குணமடைவதை பார்க்க முடியும்.
கோடைகாலத்தில் நகரத்தின் வெப்பத்தையே குறைத்திடும் இந்த மரங்கள், குளிர்பதனப் பெட்டி, மின்விசிறி மற்றும் காற்றுபதனாக்கி (Air conditioner) போன்றவற்றின் தேவையை குறைத்து மின் உபயோகத்தை பெரும் அளவில் குறைக்கிறது. இதனால் ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே உயர்த்த முடியும்.
சுற்றுச்சூழல் சிதைவினால் ஏற்படும் பேரழிவைத் தடுக்கவும், புவிவெப்பமயமாதலைத் தடுக்கவும் 2004ம் ஆண்டு ஈஷா அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட பசுமை கரங்கள் திட்டம், தமிழகத்தின் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் முழு முனைப்புடன் ஈடுபட்டுள்ளது.
தமிழகத்தின் பசுமைப் பரப்பை 33 சதவீதம் அதிகரிக்க 11.4 கோடி மரங்களை நட்டு வளர்ப்பதையே நோக்கமாக கொண்டு இதுவரையிலும் ஒரு கோடிக்கும் அதிகமான மரங்கள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இதற்காக நாட்டின் சுற்றுச்சூழலுக்கான மிக உயரிய விருதான இந்திரா காந்தி தேசிய சுற்றுச்சூழல் விருது 2010ம் ஆண்டு பசுமை கரங்கள் திட்டத்திற்கு வழங்கப்பட்டது.
ஆயிரக்கணக்கில் தன்னார்வத் தொண்டர்கள் இதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயல் புரிந்து வருகிறார்கள். மண்ணில் நாள் முழுக்க கைகளை வைத்திருப்பதே சுகமான அனுபவம் என்று சொல்லும் தன்னார்வ தொண்டர்கள், தங்கள் விரல்களால் விதைக்கப்படும் விதைகள் முளை விட்டு இதழ் பிரிக்கும் போது பிறந்த குழந்தை புன்னகைப்பது போல உணர்வதாகவும், அவை வளர்ந்து பலன் தரும்போது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஆனந்தத்தை உணர்வதாகவும் பகிர்ந்து கொள்கின்றனர்.
கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் மரம் வளர்ப்பதற்கு நேரமோ இடமோ இல்லை என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது. இதை மனதில் கொண்டுதான் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா பசுமைக் கரங்கள் ஒரு புதிய பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரம் மூலம் உங்களுடைய கார்பன் கால்தடம் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி உங்கள் சார்பாக மரங்கள் நட்டு, உங்கள் கார்பன் கால்தடத்தைக் குறைப்பதற்கு, பசுமைக் கரங்கள் திட்டம் முன் வந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு: www.giveisha.org/pgh