மகனை நேசிக்கும் தாய்மை மருமகளையும் நேசிப்பதற்கு..
பொதுவாகவே ஒரு பெண் ஒரு தாயாக தன் மகனை நேசிக்கும் அதே வேளையில், தன் மருமகளிடம் போட்டி மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதை பார்க்க முடிகிறது! பெண்களின் இந்த உளவியலுக்கு பின்னால் உள்ள காரணத்தையும், அதற்கான தீர்வையும் சத்குரு இந்த கட்டுரையில் அலசுகிறார்.
ஒரு தாய் மற்றும் ஒரு பெண்
Subscribe
தாயைத் திருப்தி செய்வது பற்றிக் கூறவேண்டுமென்றால் – ஒரு தாய் என்று நீங்கள் கூறும்போது, முக்கியமாக அவர் ஒரு பெண். பிறகு அவர் ஒரு தாயாக மாறினார். ஒரு மனைவி என்று நீங்கள் கூறும்போது, முதலில் அவர் ஒரு பெண், பிறகு அவர் ஒரு மனைவியாக மாறினார். அது ஒரு இரண்டாம் நிலை பாத்திரம். ஒரு பெண்ணாக இருப்பது அவரது அடிப்படையான அடையாளம். அடுத்த அடையாளம் ஒரு வேளை ஒரு மனைவியாகவும், அதற்கும் அடுத்ததாக ஒரு தாயாகவும் இருக்கலாம். இந்த வரிசைப்படி இது நிகழ்கிறது.
ஒருமுறை அமெரிக்காவில் இது நிகழ்ந்தது. ஒரு இளைஞன் ஒரு பெண்ணை மணக்கவிருந்தான். தன் தாயிடம் இதைக் கூறிய அவன் அந்தப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வர விரும்பினான். தாயின் ஆசிகளைப் பெறுவதற்காகவும் அதே நேரத்தில் அவரது சம்மதத்தையும் பெறுவதற்காகவும் அப்படிச் செய்ய நினைத்தான். இப்படிச் செய்வதால் வீட்டில் சச்சரவுகள் ஏதும் பின்னர் நிகழாவண்ணம் தடுத்துவிட முடியும் என நினைத்தான். அதே தருணத்தில், அவன் தாயின் மீது மிகுந்த பாசம் கொண்டவனாக இருந்ததால், சிறிது சவாலும் வேடிக்கையும் கலந்து இதை நிகழ்த்த விரும்பினான்.
ஆகவே, அவனது சக அலுவலர்களாகிய மூன்று இளம் பெண்களுடன் தன் பெண் சினேகிதியையும் சேர்த்து வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து வந்தான். தான் விரும்பும் பெண் யார் என்பதை தாய் கண்டுபிடிக்கவேண்டும் என்பது அவனது நோக்கம். அவனது தாய் வித்தியாசம் காணமுடியாத அளவுக்கு அவன் அனைவரிடமும் ஒரே விதமாக நடந்துகொண்டான். அவர்கள் விருந்து முடிந்து சென்றபிறகு, “அம்மா, நான் விரும்பும் பெண் யார் என்பது உங்களுக்குத் தெரிந்ததா?” என்று கேட்டான். “எனக்குத் தெரியும். சிவப்பு மேற்சட்டை அணிந்திருந்தவள்தான்”, என்று தாய் கூறினார். ஆச்சரியமடைந்தவனாக, “ உங்களுக்கு எப்படித் தெரிந்தது? நான் அவளைப் பார்க்கக்கூட இல்லையே, உங்களுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்று நான் எப்போதும் மற்றவர்களைத்தானே பார்த்துக்கொண்டிருந்தேன்”, என்றான். அதற்கு அந்தத் தாய் கூறினார்,” அவள் உள்ளே நுழைந்தபோதே எனக்கு அவளைப் பிடிக்காமல் போனது. ஆகவே அது அவளாகத்தான் இருக்கவேண்டும்!”.
அது ஒரு விதமான உயிரியல் தன்மையைச் சேர்ந்தது. ஏனென்றால் இவையெல்லாமே இனப்பெருக்கம் மற்றும் பாதுகாத்தல் செயல்முறையுடன் தொடர்புடையது. தனக்குச் சொந்தமானதுடன் ஒரு பெண் உடைமைத்தன்மை இல்லாமல் இருந்தால், அவள் தனது குழந்தைகளைப் பராமரித்திருக்க மாட்டாள். குழந்தைகளைப் பிரசவித்ததும் கைவிட்டிருப்பாள். அந்த உயிரியல் தொடர்பு வாழ்க்கை முழுவதும் ஏதோ ஒரு வகையில் தன்னை நீட்டித்துக்கொள்கிறது. இருப்பினும், ஒரு பெண் போதுமான முதிர்ச்சியும் விழிப்புணர்வும் கொண்டால், அதிலிருந்து வெளிவந்து வளர்ச்சி அடைய முடியும்.