கொண்டாடுவோம் குரு பௌர்ணமியை!
ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமி, குருபௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்நாள், நம் மரபில் பன்னெடுங்காலமாய் வாழ்ந்து வரும் ஞானோதயமடைந்த மனிதர்களை கொண்டாடுவதாய் அமைந்துள்ளது. இவர்கள்தம் இருப்பும் அருளும், அவர்களது அறிவும் "தன்னை" உணர்வதற்கான வழியை நமக்கு காட்டி வந்திருக்கிறது. இவ்வருடம், இந்நாள் ஜுலை 9ம் தேதி வருகிறது.
ஜுலை மாதத்தில் வரும் பௌர்ணமி, குருபௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்நாள், நம் மரபில் பன்னெடுங்காலமாய் வாழ்ந்து வரும் ஞானோதயமடைந்த மனிதர்களை கொண்டாடுவதாய் அமைந்துள்ளது. இவர்கள்தம் இருப்பும் அருளும், அவர்களது அறிவும் "தன்னை" உணர்வதற்கான வழியை நமக்கு காட்டி வந்திருக்கிறது. இவ்வருடம், இந்நாள் ஜுலை 9ம் தேதி வருகிறது.
சத்குரு:
15,000 ஆண்டுகளுக்கு முன்பு இமயமலைப் பகுதிக்கு ஒரு யோகி வந்தார். கண்மூடி அமர்ந்தால் அசைவின்றி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். கண்கள் திறந்தால் ஆனந்தத் தாண்டவம் ஆடினார். அவரின் பரவசநிலையைக் கண்டு அனைவரும் அவரை சூழ்ந்தார்கள். ஆனால் சுற்றியிருந்த எதன் மீதும், எவர் மீதும் நாட்டமின்றி, தனக்குள் முழுமைநிலையில் இருந்த அவரோ, வாய்திறந்து எவரிடமும் பேசவுமில்லை, எவரையும் ஏறெடுத்தும் பார்க்கவுமில்லை. கூடிய கூட்டம் பொருமையின்றி கலையத் துவங்கியது. கூட்டம் கலைந்தபின் எஞ்சியிருந்தவர் ஏழ்வர் மட்டுமே.
இப்பரவசத்தின் இரகசியத்தை எப்படியாவது அறிந்திட ஆவலாய் அவர்கள் காத்திருந்தனர். அந்த முதலாவது யோகியான ஆதியோகி கண்திறந்தபோது அவர்கள் மன்றாடிக் கேட்கவே, சில எளிய தயார்செய்யும் பயிற்சிகளை வழங்கிவிட்டு சென்றுவிட்டார்.
பிற்காலத்தில் சப்தரிஷிகளாய் பிரசித்தி பெற்ற இந்த ஏழ்வரும், தங்களை தயார் செய்வதே நோக்கமென தீவிர ஆன்ம சாதனையில் ஈடுபட்டனர். அவர் மீண்டும் வருவாரா மாட்டாரா, அவர் கருணைக்கண் திறப்பாரா மாட்டாரா என்ற சிந்தனை கூட அவர்களுக்குள் எழவில்லை, அக்கருவிகள் மட்டுமே கருத்தென தீவிரமாய் இருந்தனர். 84 வருடங்கள் இப்படியே கடந்தோடியது. சூரியனின் ஓட்டம் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி மாறும் வேளையில், பூமியிலும், மனித உடலமைப்பிலும், அது தொடர்பான மாற்றங்கள் ஏற்படும். 84 வருடங்கள் கடந்த அந்த சமயத்தில், கதிர்த்திருப்பத்திற்கு ஏற்ப தன் உடலமைப்பிலும் சில மாற்றங்கள் செய்திட பிரயத்தனமானார் ஆதியோகி.
Subscribe
மனிதனின் சாத்தியகூறையே மாற்றியமைத்த அத்தருணத்தில், ஆதியோகியின் கவனம் அந்த ஏழ்வர் மீது திரும்பியது. அவர்கள் செய்திருந்த தீவிர சாதனையால் அவர்கள் தகதகவென ஜொலித்துக்கொண்டிருந்தனர். அதற்குமேல் தனக்குள் இருந்த பொக்கிஷத்தை புதைத்து வைத்திர முடியாமல் அவற்றை ஏழ்வருக்கும் வழங்கலானார்.
புதியதோர் புரிதலையும் சாத்தியத்தையும் அவர்களுக்கு வழங்கிட விழைந்து தென்திசை நோக்கி அமர்ந்த காரணத்தால் ஆதியோகியாம் சிவன் தட்சிணாமூர்த்தியானார், முதலாம் குருவான காரணத்தால் ஆதிகுருவும் ஆனார். ஒருவர் தன் உச்சபட்ச தன்மையை உணர்ந்திட 112 வழிகள் இருந்தும், அவை அனைத்தையும் இந்த ஏழ்வரும் உணர்ந்திடும் ஆற்றல் இல்லாததால், ஒவ்வொருவருக்கும் 16 வழிகளென ஏழு பாகமாய்ப் பிரித்து வழங்கினார். மனிதகுலம் அதுவரை உணர்ந்திராத ஞானத்தின் ஊற்றாய் உருமாறி அவர் பொழிந்த அருள்மழை பல ஆண்டுகளாய், நூற்றாண்டுகாளாய்த் தொடர்ந்தது எனும் கதைகள் உண்டு.
ஏழ்வரும் தங்கள் உச்ச நிலையை அடைந்தனர். தாகம் தணிந்து ஞானத்தில் திளைக்கத் துவங்கிய அக்கணமே, இந்த ஞானத்தை நீங்கள் உலகிற்குப் பரிமாறிடவேண்டும் என்று ஒவ்வொருவரையும் உலகின் ஒவ்வொரு பகுதிற்குச் செல்லச்சொல்லி பணித்தார். அவர்கள் கண்கள் பனித்தன, "உங்களை எப்படிப் பிரிவது? செல்லும் இடத்தில் அறிவீனர்களின் அறியாமையால் தீங்கு நேரிட்டால் என்ன செய்ய?" என்று பதறிக்கேட்ட அவர்களுக்கு, "பிரச்சனை வந்தால் நான் தூங்கிவிடுவேன்" என்றார். சிவன் செயலில் தீவிரமாய் இருப்பதைவிட செயலற்ற நிலையிலேயே அதிதீவிரமாய் இருப்பதை, அவரே குறிப்பால் உணர்த்தும் சம்பவமிது.
அவர்கள் ஏழுபேரும் கிளம்பத் தயாரான வேளையில் "என் குருதட்சிணை எங்கே?" என்று கேட்டார் ஆதியோகி. தாங்கள் உடுத்தியிருந்த கோவணத்துணியைத் தவிர அவர்களிடத்தில் எதுவுமில்லை. அப்படியே இருந்தாலும், ஆதியோகிக்கு கொடுப்பதற்குத் தகுதியான குருதட்சிணை ஏதாவது உண்டா? செய்வதறியாமல் தவித்திருந்தபோது, அகஸ்திய முனி முன்வந்து, "என்னிடம் இருக்கும் விலை மதிப்பில்லா சொத்து, மனிதன் தன் உச்சநிலையைத் தொட தாங்கள் வழங்கிய 16 வழிமுறைகளே. அவற்றை உங்கள் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன்" என்று சொல்லி அனைத்தையும் சிவனிற்கே மீண்டும் கொடுத்துவிட்டு வெறுமையாக நின்றார்.
அவருடைய உதாரணத்தைப் பின்தொடர்ந்து மீதி ஆறுபேரும் அதையே செய்தனர். அவர்கள் தங்களுக்கு மிக மதிப்பான அந்த ஞானத்தையே கொடுத்துவிட்டு வெறுமையாக நின்ற காரணத்தால், அந்த ஏழ்வருக்கும் 112 வழிமுறைகளையும் பரிமாறும் வாய்ப்பு கிடைத்தது, அவர்கள் எங்கு சென்றாலும் அவர்களும் சிவனாகவே இருந்தனர்.
ஆதியோகி, தன் முதல் ஏழு சீடர்களுக்கு இந்த ஞானத்தை பரிமாறத் தீர்மானித்த அந்த தினம், பல்லாயிரம் ஆண்டுகளாக நம்மால் குரு பௌர்ணமியாக மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. ஆங்கிலேயர்கள் நம்மை அடிமையாக்கிட படிப்படியாக நம் கலாச்சாரத்தை அழிப்பதற்கு செய்த பல விஷயங்களில், நம் கலாச்சாரத்தில் இருந்த பௌர்ணமி, அமாவாசை மற்றும் பிற விடுமுறைகளை எடுத்து ஞாயிறு விடுமுறையைக் கொண்டுவந்தது, மிக மோசமான ஒன்று. அதை நாம் இன்னும் மாற்றத் தயாராக இல்லை.
குரு பௌர்ணமி தினத்தில் நமக்கு விடுமுறை கொடுக்காவிட்டாலும், நாமே விடுமுறை எடுத்தாவது இந்நாளைக் கொண்டாடுவது மிகவும் முக்கியம். ஆதியோகி மனிதகுலத்திற்கு வழங்கிச்சென்ற சாத்தியங்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு முன் அவர் செய்த பணிக்குத் தகுதியான அங்கீகாரத்தை நாம் அவருக்குக் கொடுக்க வேண்டும். இது அவருக்கு நாம் எதையும் கொடுப்பது பற்றியன்று. அவரை அங்கீகரிப்பது மூலம் அவர் வழங்கிச்சென்ற சாத்தியங்களை நாம் அடையாளம் கண்டால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் எழும்.
"வாழ்வின் உண்மையான நோக்கத்தையும் அதன் ஆற்றலையும் நீங்கள் உணர்வீர்களாக. இந்த குரு பௌர்ணமி தினத்தில் என்னுடைய அருள் உங்களுடன் நிறைந்திருக்கும்."