நம் தேசத்தின் அறிவுப் பொக்கிஷமாக இருந்த நளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் நம்மை வியக்க வைக்கும் அதே வேளையில், முகலாய மன்னர் பக்தியார் கில்ஜியால் அது அழிக்கப்பட்ட விதம் மிகவும் கொடுமையானது. நளந்தாவில் என்னென்ன துறைகள் இருந்தன? எத்தனை புத்தகங்கள் இருந்தன? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

காசி - உண்மையைத் தேடி... பகுதி 7

மஹேஷ்வரி:

நளந்தாவில் மிகப் பெரிய பல்கலைக்கழகத்தை பார்க்கப் போகிறோம் என்று நினைத்த எங்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. உடைந்து நொறுங்கிய நிலையில் இருந்த நம் தேசத்தின் பொக்கிஷம் கவலையளித்தது.

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த இடம், வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் பயிலும் வசதி கொண்ட உலகின் முதல் பல்கலைக்கழகமாகும் (world’s first residential international university). கி.பி 5ம் நூற்றாண்டில் சுமார் 10,000 மாணவர்களையும் 2000 ஆசிரியர்களையும் கொண்டிருந்தது.

புத்த மதத்தின் ஞானத்தினால் உருவான இந்த நளந்தா பல்கலைக்கழகத்தில் அந்தக் காலத்திலேயே வேத சாஸ்திரம், இலக்கணம், தர்க்கவியல், வானியல், உள்நிலை பற்றிய மெய்விளக்க இயல், மருத்துவம், தத்துவம் (theology, grammar, logic, astronomy, metaphysics, medicine, philosophy) போன்ற பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அதில் தீவிர ஆராய்ச்சிகளும் நடைபெற்றன. இந்த ஆராய்ச்சியின் முடிவில் நூல்கள் வெளியிடப்பட்டன. நளந்தா நூலகத்தில் சுமார் 25 லட்சம் புத்தகங்கள் இருந்தன என்பதை கேள்விப்படும்போது பிரமிப்பாக இருந்தது. யுவாங் சுவாங் உட்பட பல சீனர்கள் இங்கு வந்து கல்வி கற்றனர் என்ற தகவல் உள்ளது.

கி.பி. 12ம் நூற்றாண்டில் அந்த பகுதியை கைப்பற்றிய பக்தியார் கில்ஜி (Bakhtiyar Kilji) என்ற முகலாய மன்னர் நளந்தாவை அழிக்கக் கட்டளையிட்டார். நளந்தா நூலகம் முழுதும் எறிந்து முடிப்பதற்கு 3 மாதங்கள் பிடித்தது. மிகவும் சிரமப்பட்டு 3 மாதங்களாக தீ மூட்டி இந்த நூலகம் அழிக்கப் பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தீவிரமான சாதானாவில் இருக்கும் புத்ததுறவிகள் தங்களது கூர்மையான ஞாபகசக்தியினால் அழிந்த நூல்களிலிருந்த வார்த்தைகளை ஒன்று விடாமல் மீண்டும் எழுதி விடக்கூடும் என்பதை உணர்ந்த அரசன் சுமார் 2000 துறவிகளை உயிருடன் கொளுத்தினான். அதில் சில துறவிகள் தப்பித்து திபெத் சென்றார்கள். உலகிற்கே எடுத்துக்காட்டாய் இருந்திருக்க வேண்டிய நம் தேசத்தின் ஞானம், இப்படி அழிக்கப்பட்டு விட்டதே என்ற கவலையுடன் அங்கே நின்றிருந்த உடைந்து போன கல் சுவற்றைக் கண்டு திரும்பினோம்.

ஐந்தாம் நாள்

மீண்டும் காசி:

ஏதோ ஒரு காரணத்தால் 'பந்த்' அறிவிக்கப்பட்டதால், மீண்டும் காசிக்குச் சென்றோம். வெள்ளம் வற்றி விட்டதால் கங்கையில் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. மணிகர்ணிகா காட் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இது என் குருவின் கருணையால் என நினைத்து சிலிர்த்துப் போனேன், நான்! கங்கையில் ஆசை தீர குளித்தோம்! கங்கையின் வேகம், அதன் வீச்சு, உடல் முழுக்க புத்துணர்வை ஏற்படுத்தியது.

இறுதியாக நாங்கள் சென்ற இடம் மணிகர்ணிகா காட்...

மணிகர்ணிகா காட் பற்றி எப்படி எழுதினாலும் அது சரியான வார்த்தைகளாக அமையாது. "பிணங்கள் எரிக்கப்படும் இடம் அதோ மேலே" என்று கை காட்டினார்கள், அங்கிருந்த சிலர். கீழே சில பிணங்கள் எரிப்பதற்காக காத்துக் கொண்டிருந்தன. மேலே சில பிணங்கள் எரிந்து கொண்டிருந்தன. உடல் பாகங்கள் ஒன்று கூட தெரியாமல் முழுமையாக துணியால் கட்டி பிணங்கள் மேலே எடுத்து வரப் படுகின்றன.

(பயணிப்போம்...)

அடுத்த வாரம்...

இறுதிப் பகுதியான அடுத்த வாரம், மணிகர்ணிகா காட்டில் பிணங்கள் எரிக்கப்படும் விதத்தை வெகு சுவாரஸ்யமாக வர்ணிக்கிறது. மரணம் எனும் உண்மையை ஞாபகப்படுத்துவதாய் இருக்கும் 'மணிகர்ணிகா காட்' டில் கட்டுரையாளர் கண்ட அனுபத்தை படிப்பதற்கு அடுத்த வாரம் வரை காத்திருங்கள்!

காசி புனித பயணம்

ஒளியின் நகரம் என்றழைக்கப்படும் காசி, 15000 வருடங்கள் பழமையானது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும், இன்றளவும் இந்நகரம் உயிரோட்டமாகவும், அதிர்வுமிக்கதாகவும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. புனிதமான இந்நகரத்திற்கும், மேலும் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும், ஒவ்வொரு வருடமும் ஈஷாவிலிருந்து புனிதப் பயணம் மேற்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு: sacredwalks.org

srlasky2@flickr, Wonderlane@flickr, lakpuratravels@flickr, srlasky@flickr, Hyougushi@flickr