சத்குரு:

களரி உலகின் மிகத் தொன்மையான தற்காப்புக் கலை. இதனை உருவாக்கி, கற்பித்தவர் அகஸ்திய முனிவர். தற்காப்புக் கலை என்று பார்த்தால் அது ஏதோ உதைப்பதும், குத்துவதும் அல்ல. எப்படியெல்லாம் சாத்தியமோ, அப்படியெல்லாம் உடலைப் பயன்படுத்தும் முறைகளை கற்றுக்கொள்வதுதான் களரி. எனவே உங்கள் சக்திநிலை தொடர்பாகவும் கற்றுக்கொள்ள உதவுவதால், களரி என்பது, உடற்பயிற்சி உள்ளிட்ட நிலைகளைக் கடந்ததாகவே திகழ்கிறது.

தொடுவதன் மூலம் ஒருவரைக் கொல்வதொன்றும் பெரிய விஷயமில்லை. தொடுவதன் மூலம் ஒருவரை விழிப்படையச் செய்வதும், உயிர்த்தெழச் செய்வதும்தான் உண்மையிலேயே மகத்தான விஷயங்கள். மற்றவர்களை விடுங்கள், உங்களை நீங்களே ஒருவிதமாகத் தொடுவதன் மூலம் மிகப்பெரிய விழிப்பு நிலையை அடைய முடியும்.

உடலின் ரகசியங்களைத் தெரிந்துகொள்வதற்கும், மறுஉருவாக்க நிலையில் உடலை விரைவில் குணப்படுத்துவதற்கும் வழிவகுக்கும் முறையில் களரி சிகிச்சை மற்றும் களரி வர்மம் ஆகிய முறைகள் உள்ளன. இன்றைய சூழலில், இதற்குப் போதிய நேரம், கவனம், வேண்டிய அளவு சக்தி ஆகியவற்றை ஒதுக்கக்கூடிய களரி வீரர்கள் மிகக் குறைவாகவே இருக்கக்கூடும். ஆனால் இதற்குள் நீங்கள் ஆழமாக சென்றால், இயல்பாகவே யோகாவை நோக்கித்தான் செல்வீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஏனென்றால் அகஸ்திய முனியிடமிருந்து வந்த எதுவும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் அமைய முடியும். மனிதர்களுக்கு தெரிந்ததெல்லாம் உணவு, உறக்கம் மற்றும் உடல் சார்ந்த சிற்றின்பங்கள்தான். அவர்கள் சற்றும் அறிந்திராத வகையில் உடல் சார்ந்த பிற பரிமாணங்களும் உண்டு. கராத்தே வீரர்கள் சிலர் வெறுமனே தொடுவதன் மூலம் ஒருவரைக் கொல்லக் கூடிய திறன் பெற்றுள்ளார்கள்.

தொடுவதன் மூலம் ஒருவரைக் கொல்வதொன்றும் பெரிய விஷயமில்லை. தொடுவதன் மூலம் ஒருவரை விழிப்படையச் செய்வதும், உயிர்த்தெழச் செய்வதும்தான் உண்மையிலேயே மகத்தான விஷயங்கள். மற்றவர்களை விடுங்கள், உங்களை நீங்களே ஒருவிதமாகத் தொடுவதன் மூலம் மிகப்பெரிய விழிப்பு நிலையை அடைய முடியும். என்னைப் பொறுத்தவரை, மனிதர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கு மட்டும் நான் செயல் செய்வதென்றால் அது மிகவும் எளிது. அதை ஒரு சவாலான விஷயமாகக்கூட நான் பார்க்கவில்லை. ஆனால் மனித வாழ்வின் சூட்சுமமான அம்சங்களை உணரச் செய்ய நான் விரும்புகிறேன். அதற்கு முற்றிலும் வேறுவிதமான பணியும், அர்ப்பணிப்பும், கவனமும் தேவைப்படுகின்றன.

மனிதனுக்கென்றே சில பணிகளை இயற்கை நிர்ணயித்திருக்கிறது. உங்கள் எல்லையைக் கடந்து செல்லும் விதங்களை உங்களுக்கு உணர்த்த வேறுவிதமான மனிதர்கள் தேவைப்படுகின்றனர். அப்படிப்பட்ட மனிதர்களின் சதவிகிதத்தை அதிகப்படுத்துவதே என் விருப்பம். ஏனென்றால், மனித உடல் என்னும் எந்திரத்தின் அதிஅற்புதமான அம்சங்கள், எத்தனையோ இருக்கின்றன. தங்கள் உடலைக் கூட முழுமையாக உணராமல் 99.99% மனிதர்கள் வாழ்வு முடிந்துபோகிறது. சில சின்னச் சின்ன இன்பங்களையே அவர்கள் பெரிதாக எண்ணுகிறார்கள். உண்மையில் இந்த உடலின் தன்மைகளை நீங்கள் உணரத் தெரிந்திருந்தால், அது தன்னளவிலேயே ஒரு பிரபஞ்சம் என்பதை உணர்வீர்கள். இங்கே அமர்ந்தபடியே உடலைக் கொண்டு பல மகத்தான விஷயங்களைச் செய்ய முடியும். இதுதான் யோக நெறி. களரி அதன் மற்றுமொரு செயல்துடிப்பான அம்சம்.

உருவத்தில் சிறியவராய் இருந்த அகத்திய முனிவர், தொடர்ந்து பயணங்கள் செய்து கொண்டிருந்தார். அந்தப் பயணங்கள் காரணமாகவே கொடிய மிருகங்களைக் கையாள்வதற்காக அவர் தற்காப்புக் கலையை உருவாக்கினார். இப்போது புலிகளின் எண்ணிக்கை சில நூறு மட்டுமே. ஆனால் அவை ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் இருந்தன. அவற்றுடன் இன்னும் பல கொடிய மிருகங்களும் இருந்தன. எனவே பயணங்களின்போது அவை தாக்க வந்தால் அவற்றைக் கையாள்வதற்காக தற்காப்புக் கலைகளை அகத்திய முனிவர் உருவாக்கினார். எனவே களரி மனிதர்களைத் தாக்குவதற்கானதல்ல. அதற்கான வீரக் கலைகள் பின்னர் உருவாயின.

களரியில் உங்களைவிட உயரம் குறைவான ஒன்றைத் தாக்குகிற முறையிலேயே அந்தக் கலை இருக்கும். எனவே களரி விலங்குகளிடமிருந்து தற்காப்பதற்காக உருவானது.

இமயமலையைக் கடந்து சீனா நோக்கிச் செல்கையில் சில காட்டுவாசிகள் தாக்கத் தொடங்கினர். மிருகங்களைக் கையாளக் கற்றுக்கொண்ட கலைகளையே அவர்கள் மீதும் பிரயோகிக்க தொடங்கினர். மனிதர்களைத் தாக்குவதற்கு தற்காப்புக் கலை பயன்படத் தொடங்கிய பிறகு ஒரு முக்கிய மாற்றம் நிகழ்ந்தது. இந்தியாவில் குனிந்தபடி தாக்கிய களரி, சீனாவிற்கும் தெற்காசிய நாடுகளுக்கு சென்றபோது நின்றபடி தாக்கும் தற்காப்புக் கலையாக மாறியது. காட்டுத்தனமான மனிதர்கள்மீது இந்தக் கலையைப் பிரயோகிக்கத் தொடங்கியதால் அவர்களைக் கொல்வது அவசியமாகிவிட்டது. ஏனென்றால், தாக்கத் தொடங்கினால் மனிதர்கள் சாகும்வரை மோதுவார்கள். மிருகங்களை அச்சுறுத்தி விரட்டிவிட முடியும். மிருகங்கள் ஏன் மனிதர்களை தாக்குகின்றன? நம்மை அவற்றிற்கான உணவு என்று கருதி வருகின்றன. நாம் அவ்வளவு எளிதாக பலியாகக் கூடிய உணவல்ல என்று தெரிந்தால் ஓடிவிடும்.

மனிதர்கள் அப்படியல்ல. எனவேதான் களரியிலிருந்து கராத்தே தோன்றியது. இந்தியாவிலும் மனிதர்களுக்கெதிராக தற்காப்புக் கலையை பயன்படுத்துகிறோம். ஏற்கனவே இங்கிருந்த கலையை வளர்க்காமல் நாமும் ஆயுதங்களை ஏந்தத் துவங்கிவிட்டோம். களரி என்பது மனிதர்களுடன் சண்டையிட உகந்த கலையல்ல. கராத்தே என்று வரும்போது இரண்டு கால்களில் நின்ற வண்ணம் தாக்குதல் நடக்கும். களரியில் உங்களைவிட உயரம் குறைவான ஒன்றைத் தாக்குகிற முறையிலேயே அந்தக் கலை இருக்கும். எனவே களரி விலங்குகளிடமிருந்து தற்காப்பதற்காக உருவானது.

பரசுராமரும் மகத்தான களரி ஆசானாகத் திகழ்ந்தார். கைகளைக் கொண்டே தன்னை எதிர்த்த உயிரினங்களை அவர் கொன்றழித்தார். அந்த அளவு தற்காப்புக் கலையில் கைதேர்ந்தவராக விளங்கினார். அவரது பயிற்சிகள் மலபாருக்கு வடக்கே புகழ்பெற்றன. அகத்தியருடைய பாணி தெற்கே புகழ்பெற்றது. பரசுராமரின் தற்காப்பு பாணியில் கையில் வைத்து சண்டையிடக்கூடிய ஆயுதம், எய்யக்கூடிய ஆயுதம் மற்றும் பலவகையான ஆயுதங்கள் பயன்பட்டன. ஆனால் அகத்திய முனிவரின் பாணியில் ஆயுதங்கள் கிடையாது. கைகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

தற்போது, அகத்திய முனிவரின் பாணியில் நமக்குப் போதிய ஆசிரியர்கள் கிடைக்காததால் பரசுராமர் பாணியையே பயிற்றுவிக்கிறோம். எதிர்காலத்தில் அகத்திய முனிவரின் பாணியை மீண்டும் வழக்கிற்கு கொண்டுவரவிருக்கிறோம். ஒவ்வொரு வீட்டிற்கும் ஆன்மீகத்தைக் கொண்டு சேர்த்த அகத்தியர்போல் அவருக்கு முன்யாரும் செயல்பட்டதில்லை. அவருக்கு செலுத்தும் மரியாதையாக நன்றியறிதலாக அவரது தற்காப்பு பாணியை புதுப்பிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.