பீஹாரில் பாட்னா நகர வீதியில் நின்று அப்பளம் விற்றுக் கொண்டிருக்கும் இந்த சிறுவனின் கனவோ கணித மேதை ராமானுஜம் போல ஆக வேண்டும் என்பது தான்! அந்தக் கனவு நனவானதா? வாருங்கள் தெரிந்துகொள்வோம் நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த ஆனந்த்குமாரைப் பற்றி..

சிறுவயதிலிருந்தே கணிதத்தின் மீது தணியாத ஆர்வமும் திறமையும் கொண்ட ஆனந்த் குமார் தனது பட்டப் படிப்பின் போது “எண்ணியல்” பற்றி தனது ஆய்வறிக்கையை வெளியிட்ட போது ‘மேத்தமேட்டிகல் ஸ்பெக்ட்ரம்’ மற்றும் ‘மேத்தமேட்டிகல் கேஜட்’ போன்ற கணித பத்திரிகைகளில் பிரசுரிக்கப் பட்டது. சாதாரண குடும்பத்திலிருந்து வந்த ஆனந்த் குமாரின் இந்த திறமை பலரையும் ஆச்சர்யப் படுத்தியது.

உலகத்தின் சிறந்த பல்கலைக் கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தான் உயர்கல்வி படிக்க செல்ல வேண்டும் என்று மிகவும் ஆசை கொண்டார். இதற்காக கடின உழைப்பும் செய்தார்.

கடின உழைப்புக்கு முன்னே யார் தான் என்ன செய்ய முடியும்? அட அவர் விரும்பியபடியே அவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் அனுமதி கிடைத்தது. ஆனால் அவரது தந்தையால் இந்த செலவை ஏற்க முடியாது என்ற சூழ்நிலையை உணர்ந்த குமார் பலரிடம் சென்று இதற்கான நிதி உதவியை கேட்டார். எந்த பக்கத்திலிருந்தும் உதவி வராத நிலையில் தனது தந்தையின் தீடீர் மரணம் அவரது குடும்பத்தை மேலும் வறுமையில் தள்ளியது.

வேறு வழியில்லாமல் தனது கேம்ப்ரிட்ஜ் கனவை காற்றில் பறக்க விட்ட குமார் ‘சுட சுட அப்பளம்’ என்ற சுலோகத்துடன் பாட்னாவை வலம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது நம் நாட்டின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம் தான்!

ஆனாலும் கணிதத்தின் மீது குமாருக்கு தணியாத காதல் இருந்ததாலோ என்னவோ அவர் மனம் புத்தக வாசனை நோக்கியே ஈர்க்கப் பட்டது. நூல்கள் தேடியே அவரது கால்கள் சென்றாலும் பாட்னாவிலிருந்த நூலகங்களில் வெளிநாட்டு கணித பத்திரிக்கைகள் இல்லாததனால் அவர் மனம் திருப்தி அடையவில்லை.

இதனால் வாரணாசி நோக்கி பயணம் செய்ய முடிவு செய்தார். இந்த பயணம் மட்டுமே 6 மணி நேரம் ஆகும். ஒவ்வொரு வாரமும் வாரணாசி. வாரணாசி இந்து பல்கலைக்கழக நூலகம் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இவரது வசிப்பிடமாகியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலையில் அல்ஜீப்ரா மாலையில் அப்பளம்!, Kalaiyil algebra malaiyil appalam

பின்னர் மாதம் ரூபாய் 500க்கு ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கே தனது சொந்த இன்ஸ்டிடூட் ஆரம்பித்த அவர், அதற்கு “ராமானுஜம் ஸ்கூல் ஆப் மேத்தமேட்டிக்ஸ்” என்ற பெயரையும் வைத்தார். தனது உயிரில் கலந்து விட்ட கணிதத்தை ஆசையாய் பகிர்ந்து கொள்ள இந்த ஆசிரியர் தயாராய் இருந்தாலும் அதில் சேர்ந்த மாணவர்கள் என்னவோ இரண்டே பேர் தான்! இப்படி நகர்ந்து கொண்டிருந்த இந்த இன்ஸ்டிடூட்டில் மூன்றே ஆண்டுகளில் 500 மாணவர்களுக்கு மேல் சேர்ந்தனர்.

இதற்கிடையே ஏழை மாணவர் ஒருவர் ஐஐடி தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொள்ள குமாரை அணுகினார். கட்டணம் கட்ட முடியாத மாணவரின் நிலையை கண்டதும் குமாரின் மனதில் ஒரு எண்ணம் உதித்தது.

வறுமையின் பிடியினால் கனவு நசுங்கிப் போகும் வலியை அனுபவித்த குமார் தன்னை போல ஏழை மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

2003 ஆம் ஆண்டு சூப்பர் 30 என்ற புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தியதோடு தனது ராமானுஜம் ஸ்கூல் ஆப் மேத்தமேட்டிக்ஸை ஒரு அறக்கட்டளையாக பதிவு செய்தார். சமூகத்தில் மிகவும் பின் தங்கியவர்களான பிச்சை எடுப்பவர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் போன்றவர்களின் வாரிசுகளுக்கு பணம் என்ற தடையையும் தாண்டி ஐ ஐ டி கனவை நிஜமாக்கினார் குமார். இது பிற்பாடு மிகவும் பிரபலமாகியது. சுமார் 5000 மாணவர்கள் இந்த பயிற்சிக்காக விண்ணப்பம் செய்தாலும் ஆர்வமுள்ள ஏழை மாணவர்களையே தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியளிக்கிறார் குமார்.

2010 ஆம் ஆண்டு குமார் பயிற்சியளித்த சூப்பர் 30 மாணவர்கள் 30 பேருமே ஐஐடி யில் தேர்வானது மிகப் பெரிய சாதனையாகும். இதனைத் தொடர்ந்து பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த சேவைக்கான நிதி உதவி தர முன் வந்தாலும் குமார் அதனை மறுத்துவிட்டார்.

குமார் அறிவு பரிமாற இவர்கள் பசியினால் கவனம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக அவரது தாய் அவர்களுக்கு தினமும் உணவும் பரிமாறுகிறார் என்பது மேலும் நம் உள்ளங்களை நெகிழ்விக்கிறது.

இந்த ஈடுபாடு 2008 முதல் 2010 வரை தொடர்ந்து மூன்று முறை 30/30 என்ற வெற்றியை கொடுத்தது.

2002 முதல் 2011 வரை குமார் பயிற்சியளித்த 270 மாணவர்களில் 236 பேர் ஐஐடியில் நுழைந்தனர். இவர்களின் பெற்றவர்களில் பலர் கூலி வேலை செய்பவர்கள் அல்லது ஆட்டோ ஓட்டுனர்கள் ஆவார்கள்.

தற்போது உலகம் முழுக்க குமார் பேசப்படுகிறார். அமெரிக்க ஜனாதிபதி TIME பத்திரிக்கையில் ஆனந்தைப் பற்றி படித்து விட்டு அவருக்கு எல்லா உதவியும் அளிப்பதாக கூறினாலும் ஆனந்த் அதை மறுத்துவிட்டார்.

டிஸ்கவரி சேனலில் அவரது சூப்பர் 30 திட்டத்தைப் பற்றி சுமார் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டது. குமார் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிலும் இடம் பெற்றார். ஜப்பானிய நடிகை நோரிக்க ஃபுஜிவாரா பாட்னா வந்து ஆனந்த் ஏழை மாணவர்களுக்காக செய்யும் இந்த செயலை டாக்குமென்டரி வீடியோவாக எடுத்தார்.

பிபிசி யும் அவரை விட்டு வைக்கவில்லை. அஹமதாபாத் ஐஐடி பற்றிய தனது அனுபவத்தை அவர் பி பி சி யில் பேசினார். லிம்கா புக் ஆப் ரிக்காட்ஸிலும் அவர் இடம் பெற்றார்.

ஆசியாவிலேயே மிகச் சிறந்ததென TIME பத்திரிகை வெளியிட்ட அட்டவணையில் இந்த சூப்பர் 30யும் இடம் பெற்றது. சமூகவியல் ஆராய்ச்சி மற்றும் பதிவு என்ற (IRDS) நிறுவனம் குமாருக்கு கணிதமேதை ராமானுஜம் விருதை வழங்கி கௌரவித்தது.

அதனைத் தொடர்ந்து பீஹார் அரசு வழங்கிய ‘மௌலானா அப்துல் கலாம் ஆசாத் சிக்ஷா புரஷ்கார்’ விருது, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வழங்கிய ‘பேராசிரியர் யஷ்வந்த் ராவ் கேல்கர் யுவ புரஷ்கார் விருது,’ என குமார் குமாரின் கடின உழைப்பு விருதுகளாய் குவிந்தது.

ஃபோக்கஸ் (focus) எனப்படும் ஐரோப்பிய பத்திரிகை திறமையானவர்களை வழிநடத்தும் வல்லமையுள்ள உலத்திலேயே மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவராக ஆனந்த் குமாரை தேர்வு செய்துள்ளது.

திறமைக்கு முன்னால் பணம் ஒரு தடையில்லை. எதையும் அடைய வேண்டும் என்ற தணியாத தாகம் கொண்டால் உலகில் அடைய முடியாதது ஒன்றும் இல்லை என்பதை குமாரின் வாழ்க்கை நிரூபித்து விட்டது.