Question: தினம்தோறும் சிறிது மது அருந்தி வந்தால், இதய நோய் வராது என்று டாக்டர்கள் சொல்லி இருப்பதாகப் படித்தேன். மது அருந்தும்போது படபடப்பு குறைந்து, கவலைகள் மறந்து அமைதியாகத் தூங்குகிறேனே, அதனால்தானா?

சத்குரு:

தினம் ஓர் ஆப்பிள் என்று சொன்னவர்கள், இப்போது அதை மது என்று மாற்றி விட்டார்களா?

மது அருந்தும் போது என்ன நடக்கிறது? உங்களுக்குள் ஒருவித ரசாயன மாற்றம் நிகழ்ந்து, உங்களின் பரபரப்பைக் குறைக்கிறது. அதை அமைதி என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். ஒரு கோப்பை மது அருந்துவதால் இவ்வளவு அமைதி வந்தால், ஒரு பீப்பாய் குடித்தால், பன்மடங்கு அமைதி வரவேண்டும் அல்லவா? வருகிறதா?

உண்மையில் மது உங்களை மந்தமாக்குகிறது. அதை அமைதி என்று தவறாக நினைத்துவிட்டீர்கள். மற்ற நேரத்தில் அமைதியாக, கண்ணியமாக இருக்கும் பல மனிதர்கள் மது அருந்தியவுடன் செய்யும் ஆர்ப்பாட்டத்தை நீங்கள் கவனித்தது இல்லையா? மது உள்ளே போனதால், கட்டுப்பாடு இழந்து செய்யப்பட்ட குற்றங்கள் பற்றி சிறைத் தண்டனை பெற்றவர்களிடம் கேளுங்கள். சொல்வார்கள்.
Imagens-Evangellicas-@-flickr

Question: மது அருந்தினால், என் ஆயுளில் ஐந்து வருடங்கள் குறையலாம். ஆனால் ஐந்து வருடங்கள் கூடுதலாக வாழ்வதற்காக, இப்போது கிடைக்கும் சந்தோஷத்தை நான் விட்டுக் கொடுக்க வேண்டுமா?

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மரணம் என்பது எல்லோருக்கும் நிச்சயிக்கப்பட்டதுதான். ஐந்து வருடங்கள் முன்னதாக அது வருவதால், பெரிய பாதிப்பு என்று நான் சொல்லவில்லை. ஆனால் வாழ்வது என்று எதைச் சொல்கிறீர்கள்? நினைவற்றுக் கிடப்பவர்கள் வாழ்வதாக உணர்கிறார்களா?

உங்களைப் பற்றிய கவனம் உங்களுக்கு இருப்பதால்தானே வாழ்வதை உணர்கிறீர்கள்? நீங்கள் ஆழ்ந்து உறங்கும்போது உயிரோடு இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை மற்றவர்கள் வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாமே தவிர, உறக்கத்தில் இருக்கும் உங்களால் புரிந்து கொள்ள முடியுமா? விழிப்பு வரும் வரை, உங்கள் அனுபவத்தில் அது மரணத்துக்கு இணையானதுதானே? எனவே, வாழ்க்கை என்பது விழிப்போடு இருப்பது! வாழ்வதைத் தீவிரமாக்க வேண்டுமென்றால், அது பற்றிய விழிப்புணர்வைத் தீவிரமாக்க வேண்டும்.

மது அருந்தினால், தூக்கம் நன்றாக வருகிறது என்கிறீர்கள். உண்மையில், ஒரு நாளைக்கு 12 மணி நேரம் தூங்கினால், 60 வயதில், 30 வருடங்கள் உயிரோடு இருந்தீர்கள். 30 வருடங்கள் உயிரற்று இருந்தீர்கள் என்றுதானே அர்த்தம்?
3

Question: ஜாலிக்காகக் குடிப்பது தப்பா? உடலுக்கு ஓய்வு அவசியம் அல்லவா?

சத்குரு:

பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.

"நிறுத்தாமல் அடுத்தடுத்துப் பத்து பாட்டில் குடிப்பவர்களுக்கு 200 டாலர் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு 200 டாலர் தர வேண்டும். சவாலுக்கு தயாரா?" என்று அறிவித்தார்.

யாரும் அசையவில்லை. ஒருவர் மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார். இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.

"பந்தயத்திற்கு நான் தயார்," என்றார்.

அடுத்தடுத்து பத்து பாட்டில் பீர்களை அவர் காலி செய்து முடித்ததைப் பார்த்து, அமெரிக்கர் வியந்து போனார். சொன்னபடி பரிசுத் தொகையைக் கொடுத்துவிட்டு, "ஆமாம், எதற்காக முதலில் எழுந்து வெளியே போனீர்கள்?" என்று கேட்டார்.

"பந்தயத்தில் என்னால் ஜெயிக்க முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள வெறோரு பாருக்குச் சென்று பத்து பாட்டில் பீர் குடித்துப் பார்த்தேன்," என்றார் அவர்.

இதைப்போன்ற குடிகாரர்கள் ஓய்வுக்காகவா குடிக்கிறார்கள்?

மது அருந்துபவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா என்று நான் எந்தத் தீர்ப்பும் சொல்லவில்லை. ஆனால், மது உங்களுக்கு நல்லது செய்கிறதா, கெட்டது செய்கிறதா என்றுதான் கவனிக்கச் சொல்கிறேன்.

இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள். உடலுக்கு ஓய்வு அவசியம்தான்; ஆனால், உறக்கம் அவசியமில்லை. நான் ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரத்துக்கு மேல் உறங்குவதில்லை. ஆனால், என் உடல் முழுமையான ஓய்வு கிடைக்க திருப்தியுடன், முழு விழிப்புணர்வுடன்தான் எப்போதும் இயங்குகிறது.

உடல் என்பது உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட மிக அற்புதமான இயந்திரம். அதை எப்போதும் அமைதியாக வைத்திருந்தால்தான் அதிக திறனுடன் இயக்க முடியும். அதற்கு முழுமையான விழிப்புணர்வு தேவை.

நீங்கள் கொஞ்சம் இன்பத்தை நாடித்தான் குடித்தீர்கள் என்றால், அந்த இன்பம் உங்களை மந்தமாக்காமல், அதேசமயம் அளவில்லாமல் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளதே... அதைக் கவனியுங்கள் என்றுதான் சொல்கிறேன். சதா எந்நேரமும் விழிப்புணர்வுடன், அதே சமயம் முழுமையான இன்பத்துடன் உங்களை வைத்திருக்கும் அமுதத்தை அருந்தலாம்; ஈஷாவுக்கு வாருங்கள்!

Imagens Evangellicas @ flickr