இயேசு ஏன் மறுபிறப்பு பற்றி பேசவில்லை?
இயேசு ஏன் மறுபிறப்புபற்றி பேசவில்லை? , புத்தமதம் வெளிநாடுகளில் உயிருடன் இருக்கும்போது இந்தியாவில் மட்டும் ஏன் மறைந்து விட்டது? இந்த இரு கேள்விகளுக்கும் சத்குருவின் பதில் இங்கே...
இயேசு ஏன் மறுபிறப்பு பற்றி பேசவில்லை? , புத்தமதம் வெளிநாடுகளில் உயிருடன் இருக்கும்போது இந்தியாவில் மட்டும் ஏன் மறைந்து விட்டது? இந்த இரு கேள்விகளுக்கும் சத்குருவின் பதில் இங்கே...
Subscribe
சத்குரு:
இயேசுகிறிஸ்துவிற்கு தன் கருத்துக்களை முழுமையாக தெரிவிப்பதற்கான கால அவகாசம் இருந்திருக்கவில்லை. நீங்கள் யார் என்பதை மக்களுக்கு ஓரளவு எடுத்துச் சொல்வதிலும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலுமே சில வருடங்கள் சென்றன. அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்கள் கைக்கு கை, கண்ணிற்கு கண் என்ற மனோபாவம் கொண்டவர்கள். மாற்றுக் கருத்துக்களை யாரும் தெரிவிக்க முடியாது. எனவே ஆன்மீகத்தில் மிகவும் ஆழமான கருத்துக்களை அவரால் அப்போது சொல்ல முடியவில்லை. என்னைப் பின்பற்றுங்கள் என்பதுதான் அவருடைய அடிப்படையான போதனையாக இருந்தது. அதிக காலமோ அல்லது போதுமான அறிவு கொண்ட சமூகமோ இருந்திருந்தால் நிச்சயமாக மறுபிறவி குறித்து பேசியிருப்பார். கடவுளின் ராஜ்ஜியம் உனக்குள் இருக்கிறது என்று பேசியவர் இயேசு. கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கும்போது, நீங்கள் இறந்தால் உங்கள் உடலுடன் அந்த இராஜ்ஜியமும் இறந்துவிடுமா என்ன?
முகமது பலவருடங்களை போரிலேயே செலவழித்தார். மேலும் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மக்கள் நாடோடிகளாக இருந்தனர். எனவே முகம்மது சுகாதாரம், பராமரிப்பு போன்ற சமூக விஷயங்களைக் குறித்தே அவர்களிடம் பேசினார். ஆழமான ஆன்மீக விஷயங்கள் குறித்து பேசுவதற்கான சூழ்நிலையும் அதற்கான கால அவகாசமும் அவருக்கு கிடைக்கவில்லை.
சத்குரு:
இந்தியக் கலாச்சாரத்தில் இருந்த மக்களுக்கு புத்தர் சொன்னவை எதுவும் மிகவும் புதிதாகத் தெரியவில்லை. உபநிஷதத்தின் சாரத்தைத்தான் புத்தர் நவீன முறையில் சொல்லியிருந்தார். மேலும் அவர் அதைக் கொடுத்த முறை மக்களுக்கு மிகவும் கவர்ச்சியற்றதாக இருந்தது. அனைத்தையும் சூத்திரமாகத்தான் தந்தார். இது செய், அது செய், உனக்கு இது நடக்கும் என்பதாக குறிப்புகள் போல இருந்தது. கீதை போல ஒரு கவர்ச்சியாக இல்லை. இங்குள்ள மக்களின் கலாச்சாரம் மிகவும் வண்ணமயமானது, உற்சாகமானது. எனவே ஆன்மீகம் கூட அப்படி இருப்பதைத்தான் மக்கள் விரும்பினர். ஆனால் புத்தரோ சடங்குகளை அறவே ஒதுக்கியிருந்தார்.
மேலும் கீழ்ஜாதியினர் எனப்படும் மக்கள் பெருவாரியாக புத்தரிடம் சேர்ந்தனர். ஆன்மீகரீதியாக இதுவரை கலப்படமற்று இருந்ததால் பெருவாரியாக ஞானமும் அடைந்தனர். ஆனாலும் அவர்களுடன் இணைந்து ஆன்மீகத்தில் முயற்சிக்க மற்ற ஜாதியினர் பெருமளவில் வரவில்லை. எனவே புத்தர் இயல்பாகவே நல்ல சீடர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஆரம்பித்தார். பேரரசர் அசோகர் புத்தமதத்தில் இணைந்தபோது ஒருமாற்றம் தெரிந்தாலும் பொதுமக்களிடம் இன்னமும் தயக்கம் இருந்தது. புத்தரை தொழுதனர், ஆனால் அவர் கருத்துக்களை பின்பற்றவில்லை.