அரை ஏக்கர்... 160 நாட்கள்... ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்... நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டு வெண்டை!

  • அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம்.
  • ஆண்டு முழுவதும் பயிரிடலாம்...
  • ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்தால், அதிக விலை.
  • நாட்டு வெண்டை 120 நாள் மகசூல் கொடுக்கும்.
  • சராசரி 6 ஆயிரம் கிலோ மகசூல்.

"நெல், வாழை, சிறுதானியங்கள் போன்ற பயிர்களுக்கு வேண்டுமானால், இயற்கை விவசாயம் சாத்தியப்படும்... வெண்டி (வெண்டை) மாதிரியான காய்கறிகளை ரசாயனம் இல்லாமல் சாகுபடி செய்யவே முடியாது. பூச்சி, நோய்த் தாக்குதல்களைச் சமாளிப்பது சாதாரண காரியமில்லை. தொடர்ச்சியா பூச்சிக்கொல்லி அடிச்சிக்கிட்டே இருந்தாதான் பயிரைக் காப்பாத்தி ஓரளவுக்காவது வருமானம் பார்க்க முடியும்’’ என்ற பரவலான கருத்து பெரும்பாலான விவசாயிகளிடம் நிலவுகிறது. இயற்கை விவசாயத்தை நேசிப்பவர்களிலும் கூட, சிலருக்கு இத்தகைய அச்சம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது தவறான கருத்து. இயற்கை வழி விவசாயத்தில் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இயற்கை முறையில் வெற்றிகரமாக வெண்டை சாகுபடி செய்து, நிறைவான லாபம் பார்த்து வருகிறார் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்தழகன். ஒரு பகல்பொழுதில் இவரை நாம் சந்திக்கச் சென்றபோது, குடும்பத்தோடு வெண்டைக்காய் பறித்துக் கொண்டிருந்தார் முத்தழகன்.

சீக்கிரம் வதங்காது!

‘‘எனக்கு வெண்டி சாகுபடியில 20 வருஷ அனுபவம் உண்டு. முன்னாடி ரசாயன முறையில வீரிய ரக வெண்டி சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன். அதுல எல்லாம் பெருசா சொல்லிக்கிற மாதிரி சுவை இருக்காது. ஆனா, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச நாட்டு ரக வெண்டி அற்புதமான சுவையோட இருக்கு. நீங்களே சாப்பிட்டுப் பாருங்க’’ என நம்மிடம் வெண்டைக்காயைக் கொடுத்தார். சாப்பிட்டப்போது இனிப்புச் சுவையுடன் தனித்துவமாக இருந்தது.

முன்னாடி ரசாயன முறையில வீரிய ரக வெண்டி சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன். அதுல எல்லாம் பெருசா சொல்லிக்கிற மாதிரி சுவை இருக்காது. ஆனா, இயற்கை விவசாயத்துல விளைஞ்ச நாட்டு ரக வெண்டி அற்புதமான சுவையோட இருக்கு. நீங்களே சாப்பிட்டுப் பாருங்க’’ என நம்மிடம் வெண்டைக்காயைக் கொடுத்தார். சாப்பிட்டப்போது இனிப்புச் சுவையுடன் தனித்துவமாக இருந்தது.

‘‘நாட்டு ரக வெண்டியில சுனை அதிகமா இருக்கும். அதனாலதான் இதுல பூச்சித்தாக்குதல் குறைவா இருக்கு. வீரிய ரகங்கள்ல காய்கள் பெருசு பெருசா இருக்கும். ஆனா, திரட்சியா இருக்காது. நாட்டு ரக வெண்டிக்காய் சின்னதா இருந்தாலும், விதைகள் நெருக்கமா, அதிக எண்ணிக்கையில நல்லா திரட்சியா இருக்கிறதுனால, அதிகமா எடை நிக்கும். இதைப் பறிச்சி, மூணு நாள் கழிச்சிக்கூட விற்பனை பண்ணலாம். சீக்கிரத்துல வதங்காது’’ என நாட்டு வெண்டையின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போனவர், தன்னை பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘எங்க தாத்தா மெக்கானிக். அப்பா மளிகைக் கடை வெச்சிருந்தார். நான் ஐ.டி.ஐ.யில டீசல் மெக்கானிக் படிச்சிட்டு, கார் மெக்கானிக்கா சில வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, ஒரு கட்டத்துல விவசாயத்து மேல ஈர்ப்பு இருந்ததுனால, முழுமையா விவசாயத்துல இறங்கிட்டேன். ஆரம்பத்துல குத்தகைக்குதான் சாகுபடி செஞ்சேன். படிப்படியா முன்னேறி இப்ப பத்து ஏக்கர் நிலம் வாங்கி, விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். ரசாயன விவசாயத்தோட பாதிப்புகளை ஏற்கெனவே நான் உணர்ந்திருந்தாலும் கூட, இயற்கை விவசாய வழிமுறைகள் தெரியாததுனால, அதையே தொடர்ந்துகிட்டு இருந்தேன். ‘பசுமை விகடன்’ படிக்க ஆரம்பிச்ச பிறகுதான் எனக்கு தெளிவான வழிகாட்டல் கிடைச்சுது. ஆறு வருஷமா, மூணு ஏக்கர்ல மட்டும் இயற்கை விவசாயம் செஞ்சிக்கிட்டு இருக்கேன். சம்பாவுல 3 ஏக்கர்ல நெல் சாகுபடி, கோடையில அரை ஏக்கர்ல வெண்டி சாகுபடி செஞ்சிக்கிட்டு இருக்கோம். இது வண்டலும் மணலும் கலந்த இருமண் பூமி.

எனக்கு என் மனைவியும் மகனும் உறுதுணையா இருக்காங்க. என்னோட மகனுக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். ஒன்பதாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருக்கான். பள்ளிக்கூட நேரம் போக, மத்த நேரங்கள்ல அவனும் நிலத்துல இறங்கி வேலை செய்வான். இயற்கை விவசாயத்துக்காக இரண்டு நாட்டு மாடுகள் வளர்க்கிறோம்’’ என்றவர், இயற்கை முறையில் நாட்டுரக வெண்டை சாகுபடி குறித்த தனது அனுபவங்களை விவரிக்கத் தொடங்கினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மொத்தம் 60 பறிப்பு!

‘‘வீரிய ரக வெண்டியைவிட, நாட்டுரக வெண்டி செடியின் உயரம் குறைவாகத்தான் இருக்கும். ஆனா, வீரியரக வெண்டியைவிட, இதுல கூடுதலா பக்கக் கிளைகள் உருவாகி, காய்ப்பு அதிகமாக இருக்கும். விதைப்பிலிருந்து 40 ம் நாள்ல காய் பறிப்புக்கு வரும். ஒரு நாள் விட்டு ஒருநாள் காய் பறிப்போம். அரை ஏக்கர் நிலத்துல இருந்து முதல் பறிப்புல 10 கிலோ, அடுத்த பறிப்புல 25 கிலோ, அதுக்கு அடுத்த பறிப்புல 60 கிலோனு மகசூல் அதிகரிச்சிக்கிட்டே போகும். 6-வது பறிப்புல இருந்து அடுத்த 25-30 பறிப்புகள்ல ஒவ்வொரு முறையும் 130-150 கிலோ காய்கள் கிடைக்கும். அதுக்குப் பிறகு படிபடியா மகசூல் குறையும்.

மொத்தம் 60 பறிப்பு பறிக்கலாம். காய் பறிப்புக்கு வந்ததுல இருந்து அடுத்த 120 நாள் வரைக்கும் காய்ப்பு இருக்கும். சராசரியா 6 ஆயிரம் கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ குறைந்தபட்சம் 15 ரூபாய்ல இருந்து அதிகபட்சம் 26 ரூபாய்க்கு விலை போகுது. சராசரியா கிலோவுக்கு 20 ரூபாய் விலை கிடைக்குது. இயற்கை முறையில விளைஞ்சதுனாலயும், சுவையா, தரமா இருக்கிறதுனாலயும் வீடு தேடி வந்து மக்கள் வாங்கிக்கிட்டுப் போறாங்க. இந்த அரை ஏக்கர் இயற்கை முறை நாட்டுரக வெண்டி சாகுபடி மூலமாக 160 நாள்ல ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல எல்லா செலவும் போக, 75 ஆயிரம் ரூபாய் லாபமாக மிஞ்சுது. 160 நாளுக்கு பிறகும் கூட செடிகள் உயிர்ப்போடு இருக்கு. செடியை கவாத்து பண்ணி, ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய்க் கரைசல் கொடுத்தோம்னா, அடுத்த 80 நாட்களுக்கு காய்கள் கிடைக்கும்.

ரசாயன முறையில சாகுபடி செய்ற வீரியரக வெண்டியோட மொத்த வயசே 120 நாட்கள்தான். விதைப்பிலிருந்து 40-ம் நாள் காய்ப்புக்கு வரும். அதுல இருந்து அடுத்த 80 நாள்தான் காய்ப்பு இருக்கும். அதுக்கு பிறகு கவாத்து பண்ணி ரசாயன உரங்களுக்கும், பூச்சிமருந்துக்கும் அதிகமா செலவு செஞ்சு, பச்சக் குழந்தையைக் கவனிக்கிற மாதிரி பராமரிச்சாகணும். அந்தளவுக்கு பூச்சி, நோய்த் தாக்குதல்களை எதிர்கொள்வது ரொம்பவே சவாலானது’’ என்றபடியே அறுவடையைத் தொடர்ந்தார் முத்தழகன்.

தொடர்புக்கு:
முத்தழகன்,
செல்போன்: 76395-08971

மிளகாய், இஞ்சி, பூண்டுக் கரைசல்!

ஒரு கிலோ பச்சைமிளகாய், அரை கிலோ இஞ்சி, கால் கிலோ பூண்டு, 100 கிராம் புகையிலை கலந்து மிக்ஸியில் அரைத்து, 4 லிட்டர் தண்ணீர் கலந்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

2 லிட்டர் அளவுக்கு கரைசல் சுண்டியதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். தனியாக வேறொரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 100 கிராம் காதி சோப்பு கலந்து ஊறவைத்து, தலா 50 மில்லி புங்கன், இலுப்பை மற்றும் வேப்பெண்ணெயைக் கலந்து நன்கு கரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, இரண்டு பாத்திரங்களில் உள்ள கரைசல்களையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி வடிகட்டினால், தெளிந்த கரைசல் கிடைக்கும். இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை இதுபோல் கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

வீரிய ரக வெண்டை சாகுபடி செய்தால், மறுசாகுபடிக்கு அதன் விதைகளைப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் கடையில்தான் விதை வாங்க வேண்டும். ஒரு கிலோ விதை 750 ரூபாய். நாட்டு வெண்டை சாகுபடி செய்தால், இதன் விதைகளை மறு சாகுபடிக்குப் பயன்படுத்தலாம்.

அரை ஏக்கர் நிலத்தில் நாட்டு வெண்டையை சாகுபடி செய்யும் விதம் குறித்து முத்தழகன் சொன்ன சாகுபடிப் பாடம் இங்கே...

சாகுபடி நிலத்தை நன்றாக உழவு செய்து மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு 3 அடி இடைவெளியில் வரிசை வரிசையாக வாய்க்கால் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு நிலத்தை ஈரப்படுத்தி, வாய்க்கால் உள்கரைகளில் செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி இருக்குமாறு ஒரு குச்சியால் ஓர் அங்குல ஆழத்துக்கு குழி பறிக்க வேண்டும். 100 கிராம் ஆட்டு எருவை மண்ணோடு கலந்து குழியில் போட்டு, தலா 2 விதைகள் போட வேண்டும். அரை ஏக்கரில் விதைப்பு செய்ய ஒன்றரை கிலோ நாட்டு வெண்டை தேவைப்படும். 3-ம் நாள் முளைப்புக்கு வரும். 7-ம் நாள் இலைகள் உருவாகும். 10-ம் நாள் பாசன நீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 13-ம் நாள் களை எடுக்க வேண்டும். 20-ம் நாள் பாசன நீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து விட வேண்டும். 25-ம் நாள் வெண்டை வரிசைகளுக்கு இடையே 2 அடி அகலம், முக்கால் அடி ஆழத்துக்கு வாய்க்கால் எடுத்து, அந்த மண்ணைக் கொண்டு வெண்டைச் செடிகளுக்கு மண் அணைக்க வேண்டும்.
30-ம் நாள் பூ பூக்கும் தருணத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து, வடிகட்டி, தெளிப்பான் மூலம் செடிகள் மீது தெளிக்க வேண்டும். இதனால், அடுத்த ஒரு வாரத்தில் செடி நன்கு ஊட்டமாக, செழிப்பாக வளரத் தொடங்கும். பூக்களும் அதிகமாக உருவாகும். 20 நாட்களுக்கு ஒருமுறை இதுபோல் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும்.

35-ம் நாள் மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்க வேண்டும். இதனால் இலைப்பேன் தாக்குதல் ஏற்படாமல் கட்டுப்படுத்தலாம். 40-ம் நாள் பாசனநீரில் 100 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து பாய்ச்ச வேண்டும். காய்ப்புழுத் தாக்குதல் வராமல் தடுக்க, 42-ம் நாள் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டுக் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி கலந்து தெளிக்க வேண்டும். 55-ம் நாள் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தை, வேப்பிலை மூலம், செடிகள் மீது தெளிக்க வேண்டும். இதனால் சப்பாத்திப் பூச்சிகள் வராமல் முழுமையாக தடுக்க முடியும். 15 நாட்களுக்கு ஒருமுறை இதுபோல் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். வெண்டைச் சாகுபடியில் சப்பாத்திப் பூச்சித் தாக்குதல் என்பது பெரும் சவாலானது. செடிகள் சுணங்கி கிறங்கிவிடும், இலைகள் சுருங்கிவிடும். எவ்வளவுதான் ரசாயன பூச்சிக்கொல்லிகள் அடித்தாலும், இதைக் கட்டுப்படுத்தவே முடியாது.

மூலிகைப் பூச்சிவிரட்டி!

தலா 5 கிலோ புங்கன், வேம்பு, ஆடாதொடை, நொச்சி, எருக்கன் இலை மற்றும் 5 லிட்டர் மாட்டுச் சிறுநீர் ஆகியவற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். இதன் பிறகு வடிகட்டி, அந்தக் கரைசலோடு, தலா 100 மில்லி புங்கன் மற்றும் வேப்பெண்ணெய், 100 கிராம் காதி சோப்பு கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

நானும் உதவியா இருக்கேன்

நம்மிடம் பேசிய முத்தழகனின் மகன் மாமலைவாசன், ‘‘நான் 9-ம் வகுப்பு படிக்கிறேன். சில வருஷத்துக்கு முன்னாடி, புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தோட டாக்டர்கள் குழு எங்க ஸ்கூல்ல வந்து பேசினாங்க. ‘ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் கேன்சர் வரும்’னு சொன்னாங்க. இதுக்கு முன்னாடியே எங்க அப்பா இயற்கை விவசாயம்தான் செய்துகிட்டு இருந்தார். இந்த சம்பவத்துக்குப் பிறகு எனக்கும் இயற்கை விவசாயத்துல ஆர்வம் வந்துடுச்சி. இப்போ நானும் அப்பாவுக்கு உதவியா இருக்கேன்” என்றார்.

நாமே விதை உற்பத்தி செய்யலாம்!

வீரிய ரக வெண்டை சாகுபடி செய்தால், மறுசாகுபடிக்கு அதன் விதைகளைப் பயன்படுத்த முடியாது. ஒவ்வொரு முறையும் கடையில்தான் விதை வாங்க வேண்டும். ஒரு கிலோ விதை 750 ரூபாய். நாட்டு வெண்டை சாகுபடி செய்தால், இதன் விதைகளை மறு சாகுபடிக்குப் பயன்படுத்தலாம். விதைத் தேவைக்கேற்ப செடிகளிலேயே காய்களை நன்கு முற்ற விட்டு, சிவந்த நிறத்துக்கு வந்ததும், அதன் விதைகளை எடுத்து அதனுடன் வறட்டி சாம்பல் கலந்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைத்து, ஓர் ஆண்டு வரை பயன்படுத்தலாம். மாதம் ஒருமுறை சாம்பலில் கலந்து வெயிலில் காய வைத்து எடுக்க வேண்டும்.

எந்த மண்ணில் விளையும்?

நாட்டு வெண்டை, வடிகால் வசதியுள்ள மண் வகையில் சிறப்பாக விளையும். ஆண்டு முழுவதும் வெண்டை சாகுபடி செய்யலாம். ஆனால் ஆடிப்பட்டத்தில் விதைப்பு செய்தால், ஆவணி, புரட்டாசி மாதங்களில் காய்ப்புக்கு வரும்போது பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் அதிகம். இதனால் விற்பனை வாய்ப்பு சிறப்பாக இருக்கும், அதிக விலையும் கிடைக்கும்.