ஈஷாவில் நடந்தவை…
சத்குருவின் அமெரிக்கப் பயணங்களிலிருந்து சில துளிகள், தியான அன்பர்களுக்கான சாதனா பிரபா, மங்கள் மஞ்சன் - உங்கள் இல்லம் தேடி வரும் ஈஷா வெளியீடுகள் எனச் சில புது செய்திகளுடன் வந்திருக்கிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...
சத்குருவின் உரைகள்...
மே 10ம் தேதியன்று, டொரொன்டொ நகரில், மார்க்கம் நிகழ்ச்சி மையத்தில், "சத்குருவுடன் உரையாடல்" என்ற பெயரில் சத்குரு தமிழில் உரை நிகழ்த்தினார்.
"ஞானியுடன் ஒரு சந்திப்பு" என்ற தலைப்பில், அமெரிக்காவின் பிரபல முன்னணி மருத்துவரான டாக்டர். டிரேசி காடெட் உடன் சத்குரு கலந்துரையாடினார். இதில் பங்குகொண்டவர்கள், சத்குரு அளித்த "ஈஷா கிரியா" தியானத்தையும் செய்து பரவசமடைந்தனர்.
"ஞானியுடன் ஒரு சந்திப்பு" என்ற தலைப்பில், பிரபல தொழிலதிபரும், முதலீட்டாளருமான திரு. BV ஜெகதீஷ் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடினார். மே 11ம் தேதியன்று, அமெரிக்காவின் பால் ஆல்டோ நகரில் இது நடைபெற்றது.
Subscribe
மே 17ம் தேதி, மாலை 6.30 மணிக்கு அமெரிக்காவின் சீயாட்டில் நகரில், சத்குரு உரை நிகழ்த்தினார். இதில் கலந்துகொண்ட மக்கள் அவரின் பேச்சில் மெய்மறந்ததோடு மட்டுமல்லாமல், அவர் வழங்கிய தியானத்திலும் மெய்சிலிர்த்தனர்.
துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு ஈஷா கிரியா முகாம்
ஈஷா யோகா மையம் மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் கோவை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மேயர் செ.ம. வேலுசாமி இந்த முகாமை துவக்கி வைத்தார். இம்முகாம் துப்புரவு பணியாளர்களின் ஆரோக்கியம் காத்து, பராமரிப்பதை நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டது. இதன் மூலம் 3000 தொழிலாளர்கள் இலவசமாக யோகா கற்றுக்கொண்டனர்.
ஈஷா வித்யாவில் ஆசிரியர்களுக்கான சிறப்புப் பயிற்சி
கூடலூர் ஈஷா வித்யாவில், குழந்தையோடு குழந்தையாக மாறி குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதற்கு அப்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
வலம் வருகிறது 'மங்கள் மஞ்சன்'
ஈஷாவின் அனைத்துப் புத்தகங்களையும் சிடி மற்றும் டிவிடி'க்களையும் ஏந்தியபடி, உங்கள் ஊரைத் தேடி வலம் வரத் துவங்கியுள்ளது, ஈஷாவின் நடமாடும் புத்தக நிலையம் 'மங்கள் மஞ்சன்'. உங்கள் ஊரில் நடைபெறும் விசேஷங்கள், ஊர்த் திருவிழாக்கள் போன்ற நிகழ்வுகளின்போது, கீழ்க்காணும் எண்ணில் தொடர்புகொண்டு 'மங்கள் மஞ்சனை' உங்கள் ஊருக்கே வரவழைக்க முடியும்.
தொடர்புக்கு: 94878 95100
மரக்கன்றுகள் நடும் விழா
வடக்கு கலிஃபோர்னியாவில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஈஷா மையத்தில், மே 12ம் தேதியன்று 300க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள், சத்குருவுடன் சேர்ந்து 1008 ஆலிவ் மரக்கன்றுகளை நட்டனர். காலை 7 மணிமுதல் மாலை 3 மணிவரை இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈஷாவில் 'சாதனா பிரபா'
தனி மனிதர்களின் சாதனாவிற்கு உயிர்பூட்டும் விதமாக அமைகின்ற 'சாதனா பிரபா' மூன்று நாட்கள் நிகழ்ச்சி, மே 16ம் தேதி அன்று மையத்தில் துவங்கியது. இதில் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலங்களிலிருந்து சுமார் 50 தியான அன்பர்கள் கலந்துகொண்டனர்.