நாடு முழுவதும் பட்டாசுகளுடன் கொண்டாடப்பட்ட தீபாவளி, ஈஷாவில் எப்படி கொண்டாடப்பட்டது என்பது இந்த வார ஈஷாவில் நடந்தவையில் உங்களுக்காக...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கிராமங்களில் தீபாவளி

ஈஷா யோகா மையத்தின் அருகில் உள்ள கிராம மக்களின் மேம்பாட்டிற்காக, ஈஷா சார்பில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்விதத்தில், தீபாவளியை முன்னிட்டு 937 கிராம மற்றும் பழங்குடியினர் இன குழந்தைகளுக்கு கடந்த வாரம் புத்தாடைகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கி விழாவினை சிறப்பான முறையில் துவங்கி வைத்தார் சத்குரு.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தமிழ் திரைப்பட நடிகர் திரு. படவா கோபி, முள்ளாங்காடு கிராம குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கினார். அவர் செய்து காண்பித்த மிமிக்ரி நிகழ்ச்சி, குழந்தைகளையும் கூடியிருந்த அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இனிப்புகளும் பட்டாசுகளும்

தீபாவளி நாளான நேற்று, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த 100க்கும் மேற்பட்ட ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், நம் பிரம்மச்சாரிகளுடன் இணைந்து, 21 கிராமங்களில் தீபாவளியைக் கொண்டாடினர். சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசை முழக்கங்களுடன், குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சி, இனிப்புகள் வழங்குதல் என கோலாகலப்பட்ட கொண்டாட்டங்களில் பட்டாசுகளும் சேர்ந்து விழாக்கோலம் பூண்டது இவ்வருட தீபாவளி.

மத்தாப்புகள் சிதற, பட்டாசுகள் வெடிக்க, உளத்தில் இனம் புரியாத துள்ளலுடன் தீபத்திருநாளை கிராம மக்கள் கொண்டாடினர்.

மையத்தில்...

மாலையில் குழு விளையாட்டு, இரவில் சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் இசைக் கச்சேரி, தீபங்களில் ஒளிர்ந்த தியானலிங்கம், லிங்கபைரவி என யோக மையத்தில் ஆராவாரமில்லாமல் அமைதியாக அரங்கேறியது தீபாவளி.