ஈஷா யோக மையத்தில் சப்தரிஷி ஆரத்தி
உத்தராயணத்தை வரவேற்கும்விதமாக ஆதியோகியின் முன்பாக யோகேஷ்வர லிங்கத்தில் காசியிலிருந்து வருகைதந்த உபாசகர்கள் நிகழ்த்திய சப்தரிஷி ஆரத்தி குறித்த சில பதிவுகள் உங்களுக்காக!
டிசம்பர் 21 அன்று காலை முதலே ஈஷா மையத்திற்கு மக்களின் வருகை அதிகரித்திருந்தது. சப்தரிஷி ஆரத்தி எங்கே வைத்து; எத்தனை மணிக்கு என்பன போன்ற விவரங்களை அன்பர்கள் விசாரித்து கேட்டறிந்து கொண்டிருந்தனர். சத்குருவும் நிகழ்வில் கலந்துகொள்கிறாரா என்பதைப் பலரும் ஆர்வத்துடன் கேட்டு, ஆம் என்ற பதில் வந்தவுடன் கூடுதல் மகிழ்ச்சியடைந்தனர்!
இரவு உணவிற்கு பிறகு ஆதியோகி திருவுருவச்சிலை முன்பாக இரவு 9 மணியளவில் மக்கள் அமரத்துவங்கினர். பிரபல பாடகர் மோஹித் சௌகான் அவர்கள் ஹிந்துஸ்தானியில் சில மெல்லிசைகளை வழங்க, நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சிக்கு வருகைதந்த சத்குரு, பாடகர் மோஹித் அவர்களுடன் இணைந்து ஒரு இந்தி பாடலை பாடி அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
சப்தரிஷி ஆரத்தி துவங்குவதற்கு முன்பாக பேசிய சத்குரு…
சப்தரிஷிகள் ஏழுபேரும் சிவனுக்கு குரு தட்சணையாக எதனை வழங்கலாம் என யோசித்தபோது, சப்தரிஷிகளில் தமிழரான அகஸ்திய முனி தனக்கு சிவன் வழங்கிய அந்த 16 வகையான முறைகளையும் அர்ப்பணிப்பாக வைத்தார்; அகஸ்தியரைப் பின்பற்றி மற்ற ஆறுபேரும் அதனையே செய்தனர்; தாங்கள் சிவனிடமிருந்து பெற்ற ஞானத்தையெல்லாம் அர்ப்பணித்துவிட்டு வெறுமையாக சென்றதால், முழுமையாக 112 யோக வழிமுறைகளுமே சப்தரிஷிகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துவிட்டன என்பதை சத்குரு குறிப்பிட்டார்!
Subscribe
சப்தரிஷிகள் ஏழுபேரும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று யோகத்தை பரப்பச் செல்வதற்கு முன், அவர்கள் சிவனை இனி நேரடியாக காணமுடியாதே என்ற ஏக்கத்தை சிவனிடம் தெரிவித்தனர்; எனவே சிவன் இந்த சப்தரிஷி ஆரத்தி எனும் செயல்முறையை வழங்கி, அதன்மூலம் தனது இருப்பை உணர்வதற்கு வழிவகுத்ததாக சத்குரு தெரிவித்தார்.
அகஸ்தியரை தான் தமிழர் என்று சொல்வது குறித்து பேசியபோது, அகஸ்திய முனி தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து ஆன்மீக ஞானத்தை வழங்கியுள்ளதால் அவர் தமிழராக இருக்கக்கூடும் என தான் நம்புவதாக சத்குரு தெரிவித்தார். மேலும், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு அவர் இங்கே இருந்துள்ளதால் இதை மறுப்பதற்கான ஆதாரமும் யாரிடமும் இருக்காது என்றும் சத்குரு நகைச்சுவையாக கூறினார்.
சப்தரிஷிகள் ஏழுபேரும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று யோகத்தை பரப்பச் செல்வதற்கு முன், அவர்கள் சிவனை இனி நேரடியாக காணமுடியாதே என்ற ஏக்கத்தை சிவனிடம் தெரிவித்தனர்; எனவே சிவன் இந்த சப்தரிஷி ஆரத்தி எனும் செயல்முறையை வழங்கி, அதன்மூலம் தனது இருப்பை உணர்வதற்கு வழிவகுத்ததாக சத்குரு தெரிவித்தார். இந்த செயல்முறையை அனைவரும் உணர்வுப்பூர்வமாக கவனித்து இதில் ஈடுபடவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்!
யோகேஷ்வர லிங்கத்தில் காசியின் உபாசகர்கள்…
பாரம்பரியமாக காசியில் நிகழும் அதே சப்தரிஷி ஆரத்தி செயல்முறையை நிகழ்த்திட காசி விஸ்வநாதர் கோயிலிலிருந்து வருகைதந்த ஏழு உபாசகர்களையும் ஈஷா மையம் சிறப்பாக வரவேற்றது. இரவு 11 மணிவாக்கில் யோகேஷ்வர லிங்கத்தை சுற்றியமர்ந்த ஏழு உபாசகர்களும் சந்தனம், புனித நீர், வில்வம், மலர்கள் போன்ற பல்வேறு மங்கள பொருட்களால் லிங்கத்தை அலங்கரித்து செயல்முறையை துவங்கினர். படிப்படியாக மந்திர உச்சாடனைகளுடன் அவர்கள் நிகழ்த்திய அந்த செயல்முறை சக்திநிலையில் பிரம்மாண்ட தன்மையை அந்த சூழலில் உருவாக்கியது!
செயல்முறையை நேரடியாக கண்டுகளித்த அன்பர்களும் நேரடி இணைய ஒளிபரப்பில் இணைந்த பல லட்சம் மக்களும் சிவனருளில் மூழ்கித்திளைத்தனர்.
கடந்த 2012ம் ஆண்டு காசி யாத்திரையில் காசி விஸ்வநாதர் கோயிலில் நிகழ்ந்த சப்தரிஷி ஆரத்தியில் கலந்துகொண்ட சத்குரு, அங்கே தான் கண்ட சக்திநிலையிலான பிரம்மாண்டத்தை வியந்து நம்முடன் பகிர்ந்துள்ளார். அதே செயல்முறை தற்போது ஈஷாவில் உத்தராயணம் துவங்கிய தினத்தில் நிகழ்ந்தேறியது தனிச்சிறப்புமிக்க ஒரு அம்சமாக விளங்கியது!