சென்னையில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டத்தில் ஈஷாவின் துறவிகள் சிலர் கலந்துகொண்டனர். அதைப் பற்றி சில தகவல்கள்...

சென்னையில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் கடந்த சில வருடங்களாகவே ஈஷா வித்யா பள்ளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்கள் ஓடிவருகிறார்கள். ஆனால் இம்முறை நடந்த விப்ரோ மாரத்தானில் முதன்முறையாக கோவை ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 20 துறவிகளும் மற்றும் ஆசிரமவாசிகளும் கலந்துகொண்டுள்ளனர். பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு தரமான ஆங்கிலக் கல்வியையும் கணினி அறிவையும் வழங்கும் முயற்சியில் ஈஷா அறக்கட்டளை நிறுவியுள்ள ஈஷா வித்யா பள்ளிகளுக்கு, நன்கொடையும் ஆதரவும் திரட்டும் வகையில் இவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற மாரத்தானில் ஈஷா வித்யா சார்பாக 600 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

மாரத்தானில் பங்கேற்க வந்திருந்த ஈஷா துறவிகளையும், ஆசிரமவாசிகளையும் திரைப்பட நகைச்சுவை நட்சத்திரம் திரு.விவேக் அவர்கள் ஜனவரி 30 அன்று மைலாப்பூர் ஈஷா லைஃபில் சந்தித்து கலந்துரையாடினார், அப்போது, "ஈஷாவில் இருவேளை மட்டும் உணவு உட்கொண்டாலும், அவர்கள் தினமும் செய்யும் தியானப் பயிற்சிகள் நாள் முழுவதும் அவர்களை அதே உற்சாகத்துடன் வைத்துள்ளது. இத்தனை சமூக நலத்திட்டங்களை ஈஷா செயல்படுத்துவதும், அது தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்க இவர்கள் மாரத்தானில் ஓடுவதும் பாராட்டிற்குரிய விஷயம்" என்றார்.

21 கிமீ மற்றும் 10 கிமீ பிரிவுகளில் கலந்துகொண்ட நம் துறவிகள் எல்லோரும் வியக்கும் வண்ணம் விரைவாக ஓடிமுடித்தனர். இது பலருக்கும் ஊக்கமாக அமைந்தது. இந்த மாரத்தானில் கலந்துகொள்ளும் நிமித்தம், கடந்த சில மாதங்களாகவே இவர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர்.

செப்டம்பர் 2015 இறுதியில் பிரபல தடகள மற்றும் ஓட்டப்பந்தய வீர்ர் திரு.அஜித் சிங், ஈஷா யோகா மையத்தை பார்வையிட வந்திருந்தார். அவரே இவர்களுக்கு மாரத்தான் ஓட்டப் பயிற்சி வழங்கினார். அதுமட்டுமல்லாமல், டிசம்பரில் பெங்களூருவைச் சேர்ந்த 5 பேர்கொண்ட குழு, இவர்களுக்கு மலையில் ஓடுவது, தடைதாண்டி ஓடுவது, அதிவேக ஓட்டம், குறுகிய நேர ஓட்டத்தில் எதிர்வரும் சவால்களை சமாளிப்பது குறித்த பயிற்சிகளையும் வழங்கினார்கள்.

ஆசிரமத்தில் பெரும்பாலானவர்கள் காலணிகள் அணியாது நடந்தே பழக்கப்பட்டவர்கள். அவர்கள் வைத்திருந்த பழைய ஷூக்கள் சரியாகப் பொருந்தாமல், காலில் எரிச்சல் உண்டாக்குவதாகவும் இருந்த நிலையில், மும்பை மற்றும் பெங்களூரு சாலை ஓட்டப்பயிற்சி வீரர்களிடமிருந்து காலணிகள் நன்கொடையாக வந்தது. இது இவர்களுக்கு எதிர்பாராத ஒரு உதவியாக அமைந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.