மரணம்! மனித வாழ்வில் மிகவும் உண்மையான ஒன்று. ஆனால், எவராலும் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று! இறந்தவரை இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் ஒரே ஆறுதல் இறந்தவர் நல்ல நிலையை அடைந்தார் என்பதுதான்.

சத்குருவின் வழிகாட்டுதல்படி சில அறிவியல்பூர்வமான சடங்குகளை அந்த உயிருக்கு நன்மை அளிக்கும் வண்ணம் செய்வதற்காகவே ஈஷா காயந்த ஸ்தானம் உருவாக்கப்பட்டது.

"மரணத்திற்குப் பின் இறந்தவர் எங்கு செல்கிறார்? மரணத்திற்குப் பின் என்ன நிகழும்?" என்கிற கேள்வி பலருக்குள்ளும் இருக்கிறது. ஆனால், மரணம் என்பது அனைத்திற்கும் ஒரு முடிவல்ல என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். இதைப் பற்றி சத்குரு கூறும்போது, "அவர் இன்னமும் இருக்கிறார். அவருடன் நமக்கு இருக்கும் தொடர்பு மட்டுமே முடிந்திருக்கிறது. மற்றபடி அவர் இன்னமும் இருக்கிறார். அப்படிப்பட்டவர்களை நாம் சில செயல்முறைகள் மூலம் தொட முடியும். அந்த உயிருக்கு தேவையான நன்மையை செய்ய முடியும்.

இதற்காகத்தான் இந்தக் கலாச்சாரத்தில் சில சடங்குகள் அறிவியல்பூர்வமாக செய்யப்பட்டு வந்தன. ஆனால், தற்போது அறிவியல் போய் வெறும் வியாபாரம் மட்டுமே இருக்கிறது," என்கிறார். அதனால் சத்குருவின் வழிகாட்டுதல்படி சில அறிவியல்பூர்வமான சடங்குகளை அந்த உயிருக்கு நன்மை அளிக்கும் வண்ணம் செய்வதற்காகவே ஈஷா காயந்த ஸ்தானம் உருவாக்கப்பட்டது.

சுடுகாடு தானே என நினைத்து உள்ளே வரும் ஒருவர் அங்கிருக்கும் சூழலைப் பார்த்து வியந்து போகிறார். பச்சைப் பசேலென ஒரு பூங்காவைப் போல அந்த இடம் ஈஷா தன்னார்வத் தொண்டர்களால் பராமரிக்கப்படுகிறது. செழிப்பான மரங்கள், பசுமையான சூழல், சுத்தமான நடைப்பாதை என அந்த சூழல் அங்கே ஒரு அமைதியை உருவாக்குகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆதிசங்கரர் அருளிய நிர்வாண ஷடகம் ஒலிக்க அங்கே இறந்தவர் உடலை காலபைரவர் முன் கிடத்திடச் செய்து சில சடங்குகள் செய்து பின்னர், உடல் தகனம் செய்யப்படுகிறது. இறந்தவரின் உறவினர்களை சில நிமிடங்கள் கண்மூடி அமர்ந்து செல்லச் செய்கின்றனர்.

அங்கு வந்திருந்த 65 வயது பெண்மணி ஒருவர் தன் பேரனைப் பார்த்து, "நான் இறந்தால் என்னை இங்குதான் தகனம் செய்ய வேண்டும்," என்றுக் கூறிச் சென்றார். "இது போன்றதொரு பொறுப்பைத் தன் கையில் எடுத்து செய்திடும் சத்குருவிற்கு நான் நன்றி கூறினேன் என்று சொல்லுங்கள்," என்றும் நெகிழ்ந்து போய் கூறினார்.
இலாப நோக்கத்திற்காக அல்லாமல் இறந்தவர் நல்ல நிலையை அடைய வேண்டும் என்று ஒரு புனிதமான நோக்கத்திற்காக ஈஷா மயானங்களில் செய்யப்படும் இந்த செயல்முறைகளைக் கண்டு பொது மக்கள் மிகுந்த மனத் திருப்தியுடன் செல்கிறார்கள்.

LPG வாயுவைக் கொண்டு இங்கே உடல்கள் எரிக்கப்படுவதால் அங்கிருந்து வெளியேறும் கார்பன் அளவு மிக மிக குறைவானதாக இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் நமது பழம் பாரம்பரியம் மாறாமல் உடலைத் தகனம் செய்யும் முறையாகவும் இது இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் பல இடுகாடுகள் சரியான பராமரிப்பு இல்லாமலும் சரியான கட்டிட வசதி இல்லாமலும் அசுத்தமாகவும் இருக்கின்றன. இதனை நெறிப்படுத்தும் வகையில் ஈஷா தற்போது 8 காயந்த ஸ்தானங்களை தன் பராமரிப்பில் எடுத்திருக்கிறது. இது போன்றதொரு பொறுப்பை தன் கைகளில் எடுத்திருப்பதாலும், அதனை திறனாய் நிர்வகிப்பதாலும் பாராட்டுக்களும், நன்றிகளும் குவிகின்றன. அதுமட்டுமல்லாமல் இச்செயலை ஊக்குவிக்கும் வகையில் நன்கொடையும் அளிக்கிறார்கள்.

HPCL நிறுவனம் நீட்டிய உதவிக்கரம்

கட்டிட வசதிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், நம் தேசத்தின் பழம்பாரம்பரியத்தை உயிர்ப்பித்தல் போன்ற காரணங்களுக்காக HPCL நிறுவனம் ஈஷாவின் இந்த செயலுக்கு கைக்கொடுத்தது.

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஈஷாவின் இந்தச் செயலுக்கு உதவ முன்வந்தது. கட்டிட வசதிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், நம் தேசத்தின் பழம்பாரம்பரியத்தை உயிர்ப்பித்தல் போன்ற காரணங்களுக்காக HPCL நிறுவனம் ஈஷாவின் இந்த செயலுக்கு கைக்கொடுத்தது.
இதன்மூலம், கோவை வெள்ளலூர் காயந்த ஸ்தானத்திற்கு சுற்றுப்புறச் சீர்கேட்டை தவிர்க்கும் வகையில் வாயு வெளியேறும் வசதி செய்து தரப்பட்டது மட்டுமல்லாமல் நஞ்சுண்டாபுரம் காயந்த ஸ்தானத்திற்கு கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டன.

HPCL நிறுவனத்தைச் சேர்ந்த திரு. பென்னி C. தாமஸ் அவர்கள் இந்த வசதிகளை துவக்கி வைத்ததோடு, ஒரு ஊர்தியையும் ஈஷாவிற்கு நன்கொடையாக அளித்தார். இதைப் போலவே வெள்ளலூர் காயந்த ஸ்தானத்திற்கும் ஒரு ஊர்தியை நன்கொடையாக அளித்தார். இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

இதைப் போலவே பல கார்பரேட் நிறுவனங்களும் ஈஷாவின் இந்தச் செயலுக்கு உதவ முன்வந்தால் மேலும் பல காயந்த ஸ்தானங்களை ஈஷா அறக்கட்டளையால் நிர்வகிக்க முடியும். பொதுமக்களுக்கும் மிகுந்த பயன் உண்டாகும்.

இங்கு உடலைத் தகனம் செய்ய என்ன செய்யவேண்டும்?

1. மருத்துவர் கையெழுத்திட்ட மரணச் சான்றிதழ்
2. இறந்தவரின் புகைப்படம் மற்றும் அரசாங்க உறுதிச்சான்றுடன் கூடிய, இறந்தவரின் அடையாளம் மற்றும் முகவரி அட்டை
3. இத்துடன் பதிவு அலுவலகத்தில் இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பதிவு செய்தால், அவர்கள் சொல்லும் நேரத்தில் அங்கு உடலை தகனம் செய்யலாம்.
4. தகனம் செய்யும் நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை.
5. தகனம் பற்றிய தொடர்புக்கு: 94425 66688, 94425 04646
6. ஈஷாவில் நடக்கும் காலபைரவ கர்மா பற்றிய விபரங்களுக்கு: 94433 65631, 94864 94865