ஈஷா உதயமாகி 30 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களாக, தன்னை ஈஷாவுடன் இணைத்துக் கொண்ட சிலரில், சரஸ்வதி பாட்டிக்கு ஒரு முக்கிய இடமுண்டு. அவர் தொடங்கி வைத்த ஈஷா பிக்ஷாவைப் பற்றிய ஒரு முன்னோட்டம் இங்கே...

அவை ஈஷாவின் ஆரம்பகால வருடங்கள். அப்போது ஈஷா யோக மையத்தில் பெயருக்கு ஒன்றிரண்டு மரங்களும் ஒன்றிரண்டு குடிசைகள் மட்டுமே இருந்தன. பாம்பு, தேள், பூரான் என்று அனைத்தும் தாராளமாக நடமாடிக் கொண்டிருந்தன. மையத்திற்குள்ளேயே காலையில் மான்கள் உலா வரும், இரவு மையத்தின் அருகிலேயே யானைகள் பிளிறல் வயிற்றைக் கலக்கும். அந்த சூழ்நிலையில்தான் முதல் ஹோல்னஸ் வகுப்பு தொடங்கியது. ஈஷா மைய வளாகத்தில் நடந்த முதல் பயிற்சிவகுப்பு அதுதான். அந்த வகுப்பில் நாற்பது பேர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில் கையளவு தன்னார்வ தொண்டர்களே இருந்தனர். 90 நாள் நடந்த அந்த வகுப்பில், பங்கேற்ற அனைவருக்கும் ஒரே கை தன்னந்தனியாய் உணவு சமைத்தது. அவர், சரஸ்வதி பாட்டி - ஈஷாவின் ஆரம்ப காலம் முதல் உடனிருக்கும் முழு நேர தன்னார்வ தொண்டர்.

சரஸ்வதி பாட்டியின் அனுபவங்களை நாமும் கேட்போம்:

"ஒரு குடிசை, மேலே வெறும் தகரக் கொட்டகை மட்டுமே இருந்த காலம் அது. சமைப்பதற்கு பாத்திரங்கள் கூட இல்லை நம்மிடம். ஆடு மேய்ப்பவர் வைத்திருந்த சின்ன ஸ்டவ்வில் அத்தனை பேருக்கும் சமைத்தோம். அப்பொழுது எல்லாமே சிறிய அளவில்தான் நடந்தது. ஒருவர் மட்டுமே போய் காய்கறி வாங்கி வருவார். இங்கேயே பசலை கீரை வளர்த்தோம். இதை வைத்துக் கொண்டு உப்புமாவோ, கிச்சடியோ, ஒரு சாதமோ செய்வேன். நல்லா நினைவு இருக்கு. இருக்கும் பொருளை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் சமைக்க முடியுமோ, எல்லாமே செய்தோம்."

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
"சத்குரு அப்போதெல்லாம் அதிகம் ஆங்கிலத்தில்தான் பேசுவார், எனக்கு ஒன்றுமே புரியாது. 'என்னுடன் முழுமையாக இருங்கள், அப்போது மொழி தடையாக இருக்காது, தானாக எல்லாம் புரியும்' என்று ஒரு முறை சொன்னார்.”

இப்படி சொல்லும் சரஸ்வதி பாட்டி, ஹோல்னஸ் வகுப்பின் முதல் முப்பது நாட்களில் நடந்த ஆசனங்கள், அங்கமர்தனா, சக்தி சலனக் கிரியா போன்றவைகளிலும் பங்கேற்றிருக்கிறார். ஹோல்னஸ் வகுப்பின் அடுத்த 60 நாட்களில் நடந்த ஆசிரியர் பயிற்சியின்போது, ஒரு தன்னார்வ தொண்டராக, சமையலின் முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார். பாட்டியின் நினைவலைகள் சுமந்து வரும் நிகழ்வுகள் இன்னும் பல...

"அந்த சமயத்தில் மூன்று அறைகள்தான் இருந்தது. சிறிய கல் கட்டிடம் ரெண்டு, சின்ன குடிசை ஒன்னு. சமையல் அந்த குடிசையில்தான் செய்வோம். பயிற்சி வகுப்பு இல்லாத நாட்களில் சத்குரு எப்போதாவதுதான் இங்க சாப்பிடுவார். அப்போ கோயம்புத்தூர்ல இருந்தார். எப்போ வந்தாலும் ஒரு ரூம்ல இருப்பார். நான்தான் அவருக்கும் சமைப்பேன். அவருக்கு சாலட் செய்து தருவேன், சப்பாத்தி செய்து கொடுப்பேன். விஜியம்மா வந்த பிறகு ரசமும் செய்ய ஆரம்பிச்சேன். சத்குருவுக்கு பாலக் கீரை பிடிக்கும்னு நினைக்கிறேன். அதை அவருக்கு நிறைய செய்து கொடுத்திருக்கேன்."

"சத்குரு அப்போதெல்லாம் அதிகம் ஆங்கிலத்தில்தான் பேசுவார், எனக்கு ஒன்றுமே புரியாது. 'என்னுடன் முழுமையாக இருங்கள், அப்போது மொழி தடையாக இருக்காது, தானாக எல்லாம் புரியும்' என்று ஒரு முறை சொன்னார். உண்மைதான் அது. அதன்பிறகு சத்குரு பேசியது எல்லாமே எனக்குப் புரிந்தது."

அவர் அதோடு தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை. அறைகளை சுத்தம் செய்வது, நிகழ்ச்சி நடக்கும் இடத்தை சுத்தம் செய்வது, தோட்டத்தை பராமரிப்பது என நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருந்திருக்கிறார். செம்பருத்தி செடி ஏராளமாக இருந்தது, தண்ணீர் பாய்ச்சுவது, பரமாரிப்பது என நிறைய நேரம் செலவு செய்வேன் என்று நினைவு கூர்கிறார்.

ஈஷாவுடனான அவருடைய பந்தம் எப்படி தொடங்கியது?

"20 வருடங்களுக்கு முன்னால் என் மகன் இங்கே ஒரு தன்னார்வத் தொண்டர். அந்த சமயம் சமையல் செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லாமல் இருந்ததால் என்னை வர முடியுமா என்று கேட்டார். அன்றைக்கு சரி என்று சொன்ன சமயத்தில் இருந்து இதோ இன்று வரை இங்கேதான் இருக்கிறேன். 62 வயதில் வந்தேன்.

சில சமயம் ஆசிரமத்தை பார்த்தால் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி இவ்வளவு சீக்கிரம் இந்த இடம் இந்த அளவு வளர்ந்துவிட்டது. நான் இங்கே வந்த சமயத்தில் குளிப்பதற்கு ஒரு சரியான இடம் இல்லாமல் இருந்தது. இன்றைக்கு சூர்ய குண்டம், சந்திர குண்டம் அல்லாமல் சுத்தமான குளியல் அறைகள் எத்தனையோ வந்துவிட்டன. காய்கறி, பழங்கள் வெட்டுவதற்கு போதுமான கத்திகள் இல்லாததையும் பாத்திருக்கிறேன். இன்றைக்கு மெஷின்கள், கருவிகள், வெட்டுவதற்கு பெரிய ஒரு இடம். அன்றிலிருந்து இன்று வரை பார்த்தால் இது ஒரு பிரம்மிப்பான வளர்ச்சிதான்."

1994 ஆம் ஆண்டு 40 பேருக்கு சரஸ்வதி பாட்டி சமைத்த நாள் முதல் இன்றைக்கு ஈஷா பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. பிக்ஷா ஹால் (அவைரும் சேர்ந்து உண்ணும் ஹால்)ஒரு நாளைக்கு சராசரியாக 2000 பேருக்கு உணவளிக்கிறது. இந்த மஹாளய அமாவசை (செப் 23)அன்று, சரஸ்வதி பாட்டி முதன் முதலில் சமைத்த நாளில் இருந்து சரியாக 20 வருடங்கள் கழித்து ஈஷா பிக்ஷா (ஈஷா அன்னதானத் திட்டம்) துவங்கப்பட்டது.

ஈஷா பிக்ஷா அன்னதானத் திட்டத்திற்காக, நீங்கள் ஒருமுறை வழங்கும் நன்கொடை, நீங்கள் தேர்ந்தெடுக்கும் அந்த குறிப்பிட்ட நாளில் அடுத்த 20 வருடங்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். அதோடு, உங்களுக்கு ஈஷா மையம் சார்பில் அடுத்த 20 வருடங்களுக்கு, ஆண்டுதோறும் பிரசாதம் மற்றும் சத்குருவின் வாழ்த்து செய்தி அனுப்பி வைக்கப்படும்!

மஹாளய அமாவாசை நிகழ்ச்சிகளுக்கிடையில், ஆதியோகி ஆலயத்தில், கரகோஷம், கொண்டாட்டம் நடுவே சரஸ்வதி பாட்டி இந்த ஈஷா பிக்ஷா திட்டத்தை துவங்கி வைத்ததை விட பொருத்தமான நிகழ்வு இருக்க முடியுமா என்ன?!

ஈஷா பிக்ஷா பற்றிய விபரங்களுக்கு:
http://www.ishafoundation.org/Get-Involved/annadanam.isa
தொ.பே: 09442504672