Question: மேற்கத்தியக் கலாச்சாரம் பெருமளவில் நம் நாட்டுக்கு வந்துவிட்டது. அதை முற்றிலும் தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம். அந்தக் கலாச்சாரத்தில் இருந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்ல விஷயங்கள் ஒன்றிரண்டாவது இருக்கின்றனவா?

சத்குரு:

இந்தியாவில் இன்றைக்கு நம் குழந்தைகளுக்கு அறிமுகமாகி இருப்பது ஒழுங்கான மேற்கத்தியக் கலாச்சாரம் அல்ல. எப்படி இந்தியாவின் அழுக்கும் குப்பையும் அமெரிக்காவுக்குப் போய்க்கொண்டு இருக்கின்றனவோ, அப்படியே அங்கே இருந்து அவர்களுடைய குப்பைகள் இங்கே வந்து இறங்கிக் கொண்டு இருக்கின்றன.

உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் படிப்பறிவு எதுவாக இருந்தாலும் அது நம் முக்திக்கு இசைந்து வருவதுபோல்தான் கலாச்சாரத்தை உருவாக்கினார்கள்.

எதையும் அலசி ஆராயும் தன்மை, மற்றவருக்கு மரியாதை தரும் அடிப்படைப் பண்பு இவையெல்லாம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் சிறப்பம்சங்கள். இவை இங்கு கடைப்பிடிக்கப்பட்டால் எவ்வளவோ நன்றாக இருக்குமே? அவற்றைக் கவனிக்காமல், கோக், பீர், போதைப்பொருட்கள், இசை என்ற பெயரில் காட்டு இரைச்சல்... இவைதானே இங்கே வந்து இறங்கி இருக்கின்றன?

மற்ற கலாச்சாரத்தில் என்றில்லை, நம் கலாச்சாரத்திலும் குப்பைகள் சேர்ந்துவிட்டன. இதைக் கவனிக்காமல் கண்களை மூடிக்கொள்வதால் லாபம் இல்லை. எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் காலப்போக்கில் பல குப்பைகள் அதில் சேர்ந்துவிடும். அவ்வப்போது குப்பைகளைக் களைந்து சுத்தம் செய்யாமல் விட்டால், தலைமுறை தலைமுறையாகக் குப்பைகள் பெருகத்தான் செய்யும்.

நம் நாடு என்பதே மிகப் பிரமாதமான ஒரு வண்ணமயமான குழப்பம். இதுபோல் உலகில் வேறெங்கும் காணமுடியாது. மாநிலம் விட்டு மாநிலம் போனால்தான் எல்லாம் மாறுபடும் என்றுகூட இல்லை. ஒரு காலனியில் பக்கத்து வீட்டிற்குப் போனால்கூட அவர் பேசும் மொழி வேறு. வணங்கும் கடவுள் வேறு. அவர் சாப்பிடும் உணவு வேறு. அவர் துணிமணிகள் அணியும் விதம் வேறு. அவர் கடைப்பிடிக்கும் ஆசார விசாரங்கள் வேறு.

ஆனாலும் நம் கலாச்சாரத்தின் பொதுவான இழைதான் நம் எல்லோரையும் ஒன்றாகப் பிணைத்துக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. அந்த இழையை அறுத்துவிட்டால், இதை ஒற்றை நாடாக உணர்வதற்கு வேறு எதுவும் இங்கே பொதுவாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நம் கலாச்சாரம் ஏதோ தற்செயலாக உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. பெரும் விழிப்புணர்வுடன் உருவாக்கப்பட்டது. சும்மா நிற்பதானாலும், உட்கார்வதானாலும், சாப்பிடுவதானாலும், எதையாவது கொடுப்பதானாலும், வாங்குவதானாலும் எல்லாவற்றுக்கும் ஏற்ற சில முறைகளை இங்கே உருவாக்கினார்கள். ஒவ்வொரு செயலுக்கும் நம் உடல், நம் மனம், நம் உணர்வு, நம் சக்தி எல்லாம் எப்படி இயங்குகின்றன என்பதை உணர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு கலாச்சாரம் இது.

காலப்போக்கில் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி வருகையில் அதை முறையாகப் பராமரித்து வழங்கும் சரியான தலைவர்கள் இல்லாமல் போனார்கள். அதனால், அதன் முறைகளும் நோக்கமும் சில சிதைவுகளைச் சந்தித்து பலவிதமான மாறுதல்களுக்கு உள்ளாகிவிட்டன.

சிசிலி (Sicily) நாட்டைச் சேர்ந்த ஒரு கொடூரமான மாஃபியா தலைவன் அமெரிக்காவின் குற்ற உலகில் கோலாச்சிக்கொண்டு இருந்தான். ஒரு கட்டத்தில் அவன் குழுவைச் சேர்ந்தவர்களில் யாரோ அவனுக்கு வந்து சேரவேண்டிய பணத்தை ரகசியமாகக் கையாடல் செய்துகொண்டு இருப்பதாக அவனுக்குச் சந்தேகம் வந்தது.

அதைப்பற்றி நேரடியாக விசாரிக்க அவன் அமெரிக்காவுக்குப் பறந்து வந்தான். ஆனால் ஆங்கிலம் தெரியாததால், மொழிபெயர்ப்பாளன் ஒருவனைத் தன் அருகில் வைத்துக்கொண்டான். சந்தேகப்பட்டியலில் இருந்த 15 ஆட்களை அவன் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து, துப்பாக்கியை முகத்துக்கு நேராக ஆட்டி, 'என் பணத்தை நீ கையாடல் செய்தாயா?' என்று மிரட்டிக் கேட்டான்.

அது மொழிபெயர்க்கப்பட்டது. 'ஐயோ, இல்லை' என்று இலைபோல் நடுங்கிக்கொண்டே வந்தவர்கள் ஆங்கிலத்தில் சொல்லினர். அந்தப் பதில்களும் மொழிபெயர்க்கப்பட்டு மாஃபியா தலைவனிடம் சொல்லப்பட்டன.

கடைசி ஆள் வந்தான், 'ஆமாம் தலைவா! உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை நான் கையாடல் செய்தது உண்மை. ஆனால் அதில் ஒரு டாலர்கூடச் செலவு செய்யவில்லை. பணத்தை 10 பெட்டிகளில் அடைத்து, என் தாயின் கல்லறை அருகில் புதைத்து வைத்துள்ளேன், என்னை மன்னித்துவிடுங்கள்.

மொழிபெயர்ப்பாளன் மாஃபியா தலைவனிடம் இப்படி மொழிபெயர்த்தான். 'இந்த மாங்கா மடையனுக்கு என்னைச் சுட்டுத் தள்ளும் தைரியம் இருக்கிறதா?'

இப்படித்தான் தங்கள் ஆதாயங்களுக்காக இடையில் வந்த சிலர் கலாச்சாரத்தின் சில விஷயங்களைத் திரித்துவிட்டார்கள். அதை ஒழுங்குபடுத்தும் தேவை இந்தத் தலைமுறைக்கு மிக அவசியமாகிவிட்டது.

அடிப்படையாக எல்லாவற்றையும்விட மேலானதாக மனிதன் பார்ப்பது சுதந்திரத்தைத்தான். அதை விரும்பித்தான் மற்ற கலாச்சாரங்களில் சிலர் ஆர்வம் கொள்கின்றனர்.

இது எங்கோ மேற்கத்திய நாட்டில் இருந்து வந்த தத்துவம் இல்லை. அவர்கள் இதுபற்றி கற்பனை செய்வதற்கு முன்பே, பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பாகவே, முக்தி என்ற அறுதியான சுதந்திரம் பற்றி கவனம்கொண்டு உருவாக்கப்பட்டது இந்தக் கலாச்சாரம். இதைவிட உயர்ந்த கலாச்சாரம் வேறு கிடையாது.

உண்மையில், சுதந்திரம் என்றால், அரசியல் சுதந்திரம் அல்ல. பொருளாதாரச் சுதந்திரம் அல்ல, உள்சுதந்திரம். வேறு எந்தக் கலாச்சாரத்திலும் இந்த நோக்கம் கிடையாது. ஆனால் நம் கலாச்சாரத்தின் பிரதான நோக்கமே மனிதனுடைய அறுதியான சுதந்திரம்தான். பிறப்பு, இறப்பைக்கூடத் தாண்டிவிட்ட ஒரு சுதந்திர நிலை இது. அதைத்தான் முக்தியடைவது என்கிறோம். வேண்டுமானால், கடவுளை முன்வைத்து அடையலாம். வேண்டாமா, கடவுள் இல்லாமல்கூட அடையமுடியும். இரண்டுக்கும் வாய்ப்பு உருவாக்கிய கலாச்சாரம் உலகிலேயே இது ஒன்றுதான்.

உங்கள் குடும்பம், உங்கள் தொழில், உங்கள் படிப்பறிவு எதுவாக இருந்தாலும் அது நம் முக்திக்கு இசைந்து வருவதுபோல்தான் கலாச்சாரத்தை உருவாக்கினார்கள்.

சுதந்திர இந்தியாவாக அதற்கு 60 வருடப் பராம்பரியம்தான் இருக்கலாம். ஆனால், கலாச்சார ரீதியாக அது பல்லாயிர வருடங்களாகக் கட்டுக்கோப்புடன் இருக்கும் பழமை வாய்ந்தது, பாரம்பரியம் மிக்கது.

இன்றைக்கு இளைஞர்களிடம் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்தால், விசா கிடைத்தால் பாதிப்பேர் நீச்சல் அடித்தே அமெரிக்காவுக்குப் போய்விடுவார்கள். பாரதீயத்துவம் என்பதில் உள்ள மதிப்பை நம் இளைஞர்களுக்கு உணரவைக்கவில்லை என்பதால்தான், அவர்களுக்கு வேறு நாட்டம் வந்துவிட்டது.

முக்கியமாக, நம் கலாச்சாரத்தைப் பற்றி பெரியவர்கள், பெற்றோர்கள் ஆழமாக அறியவேண்டும். அதன் சிறப்பு அம்சங்களை உள்ளீர்த்துக்கொள்ள வேண்டும். பின் அவற்றை இன்றைய இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

வேறு கலாச்சாரத்தை நாடிப் போகாதே என்று இளைஞர்களிடம் கூவிக்கொண்டு இருப்பதை விடுத்து, நம் கலாச்சாரத்தின் மதிப்பையும் மகத்துவத்தையும் அவர்கள் உணரும் வண்ணம் நாம் கடைப்பிடித்துக்காட்ட வேண்டும்.