உயிரை விட்ட காதலர்களை கண்டிருப்போம், கூடிப் பிரிந்த காதலர்களை பார்த்திருப்போம், கூடாமலே பிரிந்த காதலர்களையும் பார்த்திருக்கிறோம்தானே? படித்துவிட்டு சொல்லுங்கள் இந்த காதலர்கள் எந்த வகையென்று?


ஒரு நாள் அக்கா மஹாதேவியைக் காண நேர்ந்த அரசர் ஒருவர், அக்காவின் பேரழகைக் கண்டு, கதிகலங்கிப்போய் அவரை தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார். அக்காவோ அந்த அரசரை மணமுடிக்க மறுத்தார். "என்னை மணக்காவிட்டால், உன் பெற்றோரைக் கொன்று விடுவேன்", என அரசன் மிரட்ட, இருவருக்கும் கட்டாயத்தின் பெயரில் திருமணம் நடந்தது.

திருமணம்தான் நடந்தது, ஆனால் அக்காவோ அரசரை உடலளவில் தொலைவிலேயே வைத்திருந்தார். அரசர் அக்கா மஹாதேவியை தன்பால் கவர்ந்திட பல முயற்சிகள் செய்தும், மஹாதேவி "நான் உனக்கு மணமுடிக்கப்படவில்லை. என் திருமணம் சிவனோடு எப்பொழுதோ நடந்துவிட்டது, அவர் வந்து என்னை சந்தித்து கொண்டிருக்கிறார், நான் அவரோடுதான் இருக்கிறேன். நான் உன்னோடு வாழ முடியாது," என்றே சொல்லி வந்தார்.

கொதித்திடும் கோபத்தில் கொந்தளித்த அரசன், "நீ யாருடனோ மணமுடித்திருந்தால், என்னோடு உனக்கென்ன வேலை? நீ அணிந்திருக்கும் அத்தனையும் என்னுடையது. உன் உடைகள், நகைகள், எல்லாமே என்னுடையது. எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு போய்விடு," என்று குமுறினார்.

நாட்கள் செல்லச் செல்ல, அரசரால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் முடிவு செய்தார். "இதுபோன்ற ஒரு மனைவியுடன் இருப்பதன் அர்த்தம்தான் என்ன? பார்த்திராத யாரோ ஒருவனை, தன் கணவனாக நினைத்து வாழும் ஒரு கிறுக்கியை, எப்படி மனைவியாகக் கொண்டு வாழ்வது?"

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அந்த காலத்தில் முறையான விவாகரத்தும் இருந்திருக்கவில்லை. என்ன செய்வதென்றே புரியாத அரசர் மனஉளைச்சலால் நொறுங்கிப் போயிருந்தார். அதனால் அக்கா மஹாதேவியை அரசவைக்கு வரவழைத்து, என்ன செய்வதென்று சபையை முடிவெடுக்க சொன்னார். அவையினர் தன்னை விசாரித்தபோது, அக்கா தன் கணவர் வேறெங்கோ இருப்பதாகவே சொல்லிக் கொண்டிருந்தார்.

அக்கா சொன்ன வார்த்தைகளெல்லாம் பிரம்மையிலிருந்து உதித்தவை அல்ல. அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவருடைய அனுபவத்தில் 100% உண்மையாகவே இருந்தது.

சபையில் இவ்வளவு பேருக்கு முன்னால், தன் மனைவி வேறெங்கோ இருக்கும் ஒருவனைப் பற்றி பேசியபடியே இருப்பதைக் கண்ட அரசருக்கு கோபம் வராமல் போகுமா? 800 வருடங்களுக்கு முன் இருந்த சமூக சூழலில், ஓர் அரசனால் தாங்கிக் கொள்ளக்கூடிய சாதாரண விஷயமாக அது இருந்திருக்குமா என்ன?

கொதித்திடும் கோபத்தில் கொந்தளித்த அரசன், "நீ யாருடனோ மணமுடித்திருந்தால், என்னோடு உனக்கென்ன வேலை? நீ அணிந்திருக்கும் அத்தனையும் என்னுடையது. உன் உடைகள், நகைகள், எல்லாமே என்னுடையது. எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு போய்விடு," என்று குமுறினார்.

சில நூறு வருடங்களுக்கு முன்னால், இந்நாட்டில், எந்த ஒரு பெண்ணின் மனத்திலும், 'தன் கணவன் வீட்டை விட்டு வெளியேருவது' என்ற எண்ணம்கூட வந்திருக்க வாய்ப்பில்லை, அப்படிதான் வாழ்ந்தார்கள், வளர்க்கப்பட்டார்கள்.

18 வயதே நிரம்பியிருந்த இந்த இளம்பெண், முழுமையாக நிரம்பியிருந்த அரச சபையில், தான் உடுத்தியிருந்த உடைகள் அனைத்தையும், அங்கேயே உதறிவிட்டு சென்று விட்டாள். அன்று முதல், அவர் ஆடையுடுத்தவில்லை.

அன்றிலிருந்து சிவனைப் பற்றியும். அவர்மேல் தான் பூண்டிருந்த பக்தியை வெளிப்படுத்தியும், நூற்றுக்கணக்கான பாடல்களை பாடினார் அக்கா மஹாதேவி. அவருடைய அளப்பரிய பக்தியின் ஆழத்தை உணர்ந்திட இங்கே கீழே நாம் கொடுத்திருக்கும் அவரின் பாடல் ஒரு சிறு உதாரணம்:

 

"ஷிவனே! தயவு செய்து எனக்கு எந்த உணவும் வந்து சேராமல் பார்த்துக்கொள்!
நான் உன்னில் ஒரு பாகமாய் வந்தடைந்திட ஏங்கித் தவிக்கிறேனே,
இந்த உடலும்தான் அந்த தவிப்பை வெளிப்படுத்தட்டுமே!
நான் உண்டுவிட்டால் இந்த உடல் திருப்தி அடைந்திடுமன்றோ?
பிறகு என் தவிப்பின் வலியை இந்த உடல் எப்படி உணர்ந்திடும்?
ஆகையால் உணவெதுவும் எனக்கு கிட்டாதிருக்க அருள்செய்!
அப்படியே தவறி எனக்கு உணவு கிடைத்தால்,
அது என் வாய்க்குள் செல்வதற்கு முன் மண்ணில் விழுந்திட அருள்செய்!
என் அறிவீனத்தால் அந்த மண்சோற்றையும் நான் அள்ளினால்,
அதற்குமுன் ஒரு நாய் வந்து அதை கவ்விச் செல்ல அருள்செய்!"

 

- தினமும் இதுவே அக்காவின் வேண்டுகோளாக இருந்தது.

பக்தர்கள் என்பவர்கள் முற்றிலும் மாறுபட்ட தன்மையில் இருப்பவர்கள். அவர்கள் தன் ஒற்றைக் காலினைதான் இந்த உலகில் ஊன்றி இருக்கிறார்கள். அவர்கள் வாழும் விதமும், அவர்கள் இருப்பிற்குரிய சக்தியும், முற்றிலும் வேறொரு உலகத்தைச் சேர்ந்தது.

இது தெய்வீகக் காதல் அல்லவா?