இலவச சிறப்பு மருத்துவ முகாம்!
ஈஷாவில் கடந்த சில வாரங்களாக நடந்து முடிந்த சுவாரஸ்யமான சில நிகழ்ச்சிகளை உங்களுக்காக இங்கே பதிவிக்கிறோம்...
ஈஷாவில் கடந்த சில வாரங்களாக நடந்து முடிந்த சுவாரஸ்யமான சில நிகழ்ச்சிகளை உங்களுக்காக இங்கே பதிவிக்கிறோம்...
ஈஷாவும் காளம்பாளையம் இளைஞர்களும் இணைந்து நடத்திய இலவச சிறப்பு மருத்துவ முகாம்!
இன்று, பிப்ரவரி 28, கோவை மாவட்டம் காளம்பாளையத்தில் ஈஷா கிராம மருத்துவமனை மற்றும் "கனவு இளைஞர்கள் நல்வாழ்வு கூட்டமைப்பு" (Dream Guy's Youth welfare association) இணைந்து, சிறப்பு இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். எலும்பு சிகிச்சை மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த முகாமில், சுமார் 500 பேர் கலந்துகொண்டு பலனடைந்தனர்.
முகாமில் பொது மருத்துவப் பிரச்சனைகளுக்கான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. பெண்களைப் பரிசோதிப்பதற்கென பெண் மருத்துவர்கள் பிரத்யேகமாக முகாமில் கலந்துகொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர். 40 வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்-பெண் இருபாலருக்கும் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. மேல் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு தகுந்த மருத்துவமனைக்கு உரியமுறையில் பரிந்துரைக்கப்பட்டது. காலை 9 மணி முதல் துவங்கி மதியம் 1 மணிவரை காளம்பாளையம் ஸ்ரீ காலகண்ட மாரியம்மன் கோயில் மைதானத்தில் மருத்துவ முகாம் சிறப்புற நிகழ்ந்தது.
Subscribe
சிவாங்கா விரதமிருந்து ஈஷாவிற்கு பாதயாத்திரை!
சென்னை, பெங்களூரூ மற்றும் நாகர்கோயில் ஆகிய நகரங்களிலிருந்து சிவாங்கா விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள் கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ஈஷாவிற்கு பாதயாத்திரை மேற்கொண்டுவருகின்றனர்.
பிப்ரவரி 17ல், சென்னையில் தங்களது பாதயாத்திரையைத் துவங்கிய சிவாங்கா சுவாமிகள் 14 பேருடன் இன்னும் சிலர் வழித்தடத்தில் இணைய உள்ளனர். பெங்களூரூ மற்றும் நாகர்கோவில் சுவாமிகள் பிப்ரவரி 22ஆம் தேதியன்று தங்கள் யாத்திரையைத் துவங்கியுள்ளார்கள்.
பரபரப்பான சென்னை மாநகரிலிருந்து கோவைக்கு (480 கி.மீ), ஐ.டி நகரான பெங்களூருவிலிருந்து எழில்கொஞ்சும் வெள்ளியங்கிரி மலைநோக்கி (350 கி.மீ), சேர மண்டலத்தைச் சேர்ந்த நாகர்கோவிலிலிருந்து ஈசனின் அருள்பெற தியானலிங்கம் நோக்கி (425 கி.மீ) கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு வரும் சிவாங்காக்களும் வழியில் பலதரப்பட்ட நிலப்பரப்புகள், கிராமங்கள், மனிதர்கள் என பல்வேறு சுவாரஸ்ய அனுபவங்களை பக்தியோடு எதிர்கொண்டு, வெள்ளியங்கிரி மலையேறி அந்த சிவனை தரிசிக்க ஆவலோடு வருகின்றனர்.
தியானலிங்கம் முன் நாதஸ்வர கச்சேரி!
பர்கூர் "நாத பிரம்மா" இசைக்குழுவினர் பிப்ரவரி 22, பௌர்ணமியன்று தியானலிங்கம் முன்பு தங்கள் இசைக் கச்சேரியை நிகழ்த்தினர். 5 பேர் கொண்ட இக்குழுவில் இரண்டு நாதஸ்வர கலைஞர்களும், 3 தவில் கலைஞர்களும் சேர்ந்து தங்கள் இசையை தியானலிங்கத்திற்கும் லிங்கபைரவிக்கும் அர்ப்பணித்தனர். தியானலிங்கத்தின் முன் 40 நிமிடங்களும், லிங்கபைரவி முன்பு 1 மணி நேரமும் இவர்களது இசை கச்சேரி நடந்தது.
பரிசுகள் வென்ற ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள்!
சண்முகானந்தா ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் சங்கீத சபா நிகழ்த்திய ஆண்டுவிழா போட்டிகள் மும்பையில் பிப்ரவரி 6, 7 தேதிகளில் வெகுசிறப்பாக நிகழ்ந்தேறின! இதில் பல்தரப்பட்ட இசைவகையில் குரலிசை, மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் என மொத்தம் 24 போட்டிகளில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
17 போட்டிகளில் கலந்துகொண்ட ஈஷா சம்ஸ்கிருதி மாணவர் அனுகிரகா லக்ஷ்மணன் 13 போட்டிகளில் பரிசினைத் தட்டிச்சென்றார். மிருதங்க வாத்திய இசைப் போட்டியில் மாணவர் அஸ்வின் மற்றும் வெங்கடரமணன்.P ஆகியோர் முறையே முதுநிலை மற்றும் இளநிலை பிரிவுகளில் முதற்பரிசினை வென்றனர். பரதநாட்டிய நிகழ்ச்சியில் மாணவி இராஜேஸ்வரி.R முதுநிலை பிரிவுவில் முதல் பரிசைப் பெற்றார். மஹாராஜா ஸ்வாதி திருனல் அவர்களின் கீர்த்தனையைப் பாடிய மாணவர்கள் நவநீத கிருஷ்ணன்.M மற்றும் ஸ்ரீமல்லி.A ஆகியோர் குரலிசைப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றனர்.
ஈஷா குடும்ப திருவிழா!
ஈஷா யோகா மையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஈஷா தியான அன்பர்களுக்கான ஈஷா குடும்பத் திருவிழா பிப்ரவரி 14ம் தேதியன்று நடைபெற்றது. கோவை சந்தேகவுண்டம்பாளையம் ஈஷா வித்யா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் 450 தியான அன்பர்கள் அவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.