இலைகளால் மூடாக்கு... மண்ணிற்கு செல்வாக்கு!
பூமித்தாய்க்கு இலைகளால் மூடாக்கு போடுவதால் மண்வளம் அதிகரிக்கிறது! அதென்ன மண்ணிற்கு இலைகளால் மூடாக்கு? இதை எப்படி செய்வது? அதனால் என்ன நடக்கிறது? இந்த கேள்விகளுக்கு இங்கே விடை அறியுங்கள்!
பூமித்தாய்க்கு இலைகளால் மூடாக்கு போடுவதால் மண்வளம் அதிகரிக்கிறது! அதென்ன மண்ணிற்கு இலைகளால் மூடாக்கு? இதை எப்படி செய்வது? அதனால் என்ன நடக்கிறது? இந்த கேள்விகளுக்கு இங்கே விடை அறியுங்கள்!
சமீபத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பாக இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு வருகைதந்து, எட்டு நாட்கள் இயற்கை வேளாண்மை பயிற்றுநர் பயிற்சி வகுப்பை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தற்போது பாலேக்கர் அவர்களின் வழியில், ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மையை தங்கள் நிலங்களில் கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர்.
இயற்கை விவசாயம் என்பது எந்தவித இரசாயனமும் பயன்படுத்தப்படாமல் இயற்கையோடு இயைந்து விவசாயத்தை மேற்கொள்வதாகும். அந்த வகையில், இயற்கை விவசாயத்தின் முதற்படி மண்வளத்தை மேம்படுத்துதலில் துவங்குகிறது என்று சொல்லலாம்! இதில் முக்கிய பங்கு வகிப்பது மூடாக்கு!
Subscribe
மூடாக்கு என்றால்...
சுபாஷ் பாலேக்கர் அவர்கள் தாள் மூடாக்கு பற்றிச் சொல்லும்போது, அதனை தாயின் சேலைப் போர்வை எனக் குறிப்பிடுகிறார். பூமித் தாய்க்கு நாம் போடும் இந்த இலைகளால் ஆன மூடாக்கு, மண் வளத்தைப் பெருகச் செய்கிறது. தற்போது பின்பனிக் காலம் முடிவடைந்து, கோடைகாலம் துவங்க உள்ளது. மரஞ்செடிகளின் இலைகள் பழுத்து நிலமெங்கும் உதிர்ந்திருக்கும். காடுகளில் இப்போது நாம் நடந்தால் நாம் இலைக் குவியல்களில்தான் தடம்பதித்து நடந்து செல்லமுடியும். இந்த இலைகளை நாம் மூடாக்காக பயன்படுத்தமுடியும்.
பூமியில் விழுந்துள்ள விதைகளை கோடை காலத்தின் தாக்கத்திலிருந்து காப்பதற்கும், விலங்குகள் மற்றும் பறவைகளிலிருந்து காப்பதற்கும், இயற்கை தானே அமைத்துக்கொண்ட ஏற்பாடுதான் இது! இதனால் மண்வளமும் அதிகரிக்கிறது!
மூடாக்கினால் மண்வளம் அதிகரிப்பது எப்படி?
இலைகளால் போடப்படும் தாள்மூடாக்கினால் மண்ணில் உண்டாகும் பருவசூழல், நுண்ணுயிர்களையும் மண்புழுக்களையும் முனைப்புடன் செயல்பட ஊக்குவிக்கிறது. பழைய தாவர வேர்கள் சிதைந்து மட்கச் செய்கிறது. மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுகிறது. இது மரத்திற்கு நல்ல உரமாக இருப்பதோடு மரத்தின் வேர்ப்பகுதியில் 4 டிகிரி அளவிற்கு வெப்பத்தை குறைக்கிறது. வெப்பத்தையும் காற்றையும் மரத்தின் தரைப்பகுதியில் தடுப்பதால், மரத்திற்கு பாய்ச்சப்படும் நீர் ஆவியாகாமல் காக்கிறது.
மூடாக்கு போடுவது எப்படி?!
10 அடிக்கு 1 மரம் என்ற விகிதத்தில் டிம்பர் வேல்யூ உள்ள மரங்களை நட்டு வேளாண்காடுகளை உருவாக்கியுள்ளீர்கள் என்றாலும் சரி, அல்லது வீட்டின் கொல்லைப் புறத்திலோ அல்லது முன்புறத்திலோ ஓரிரு மரங்களை நட்டு வளர்க்கிறீர்கள் என்றாலும் சரி, இந்த மூடாக்கு முறையானது மிகவும் நல்ல பலனைத் தரும்.
மரத்தைச் சுற்றி தண்ணீர் தேங்குவதற்காக வட்டப் பாத்தி ஏற்கனவே நீங்கள் அமைத்திருப்பீர்கள். அதில் ஒரு ஜான் உயரத்திற்கு மரத்தைச் சுற்றி விழுந்து கிடக்கும் காய்ந்த இலைதளைகள் சருகுகளை நிரப்புவதுதான் மூடாக்கு. ஏனென்றால் வீணாக மண்ணோடு மண்ணாக மட்கும் இலைச் சருகுகளை மரத்தைச் சுற்றி நீங்கள் நிரப்பப் போகிறீர்கள், அவ்வளவுதான்! ஆனால், இலைகளைப் போட்டு அதன் மேலே மண்தூவுதல் கூடாது.
ஈஷா பசுமைக் கரங்கள்
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. தமிழகமெங்கும் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமை கரங்கள் திட்டம்' அமைத்துள்ளன.
இதன்மூலம் மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.7.00) வழங்கி வருகிறது. ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மரக்கன்றுகள் நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிப்பதோடு, மூடாக்கு போடுவதையும் வலியுறுத்துகிறார்கள்.
உருவாக்கப்படும் வேளாண் காடுகள்
நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.
தொ. பே. 94425 90062