ஈஷா ருசி

கேரளத்தில் புட்டு பிரபலமான உணவாக இருந்தாலும், நம் தமிழர்களுக்கும் அதிலொரு அலாதியான பிரியம் உண்டு! இங்கே ஏலக்காய் மணக்க கோதுமையில் புட்டு செய்யும் செய்முறை உங்களுக்காக!

கோதுமை புட்டு

தேவையான பொருட்கள்:

கோதுமை - 500 கிராம்
தேங்காய் - 1 பெரிய மூடி
வெல்லம் - சுவைக்கேற்ப
ஏலக்காய் - 10
சுக்கு - 2 சிட்டிகை

கோதுமையை மாவு தயாரிக்கும் முறை:

கோதுமையை சுத்தம் செய்து குக்கரில் வேகவைக்கவும். (அரிசிக்கு ஊற்றுவது போல் தண்ணீர் ஊற்றினால் போதும்.) பிறகு அதை வெயிலில் 2 நாட்கள் நன்றாக காய வைக்க வேண்டும். பிறகு அதை மிக்ஸியிலோ அல்லது மெஷினிலோ கொடுத்து வெள்ளை ரவை பதத்தில் அரைக்க வேண்டும். 1 கிலோ அல்லது 2 கிலோ கோதுமையை இப்படி அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

செய்முறை:

500 கிராம் கோதுமை ரவையை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் விட்டு உதிரியாக இருக்குமாறு பிசைந்து, இட்லி தட்டில் ஆவியில் வேகவைக்க வேண்டும். (10 நிமிடம் வரை) தேங்காய் துருவிக்கொள்ள வேண்டும், வெல்லத்தை நைசாக பொடித்துக்கொள்ள வேண்டும். வெந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி அத்துடன் துருவிய தேங்காய், நன்கு பொடித்த வெல்லம், ஏலக்காய் பொடி, சுக்குப் பொடி சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.