கர்நாடகத்தின் புரட்சியாளர் ! பகுதி 8

மல்லாடிஹள்ளி ஊரிலிருந்து புறப்பட முயன்ற ஸ்வாமிகள், ஏன் மீண்டும் அந்த ஊரிலேயே தங்கினார்? தனது 70வது வயதில் எதற்காக ரயிலின் பின்னால் 90 கி.மீ. ஓடினார்? சத்குருவை எந்த வயதில் ஸ்வாமிகள் சந்தித்தார்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாய் இந்த வாரப் பகுதி உள்ளது.

தன் குரு ஸ்வாமி சிவானந்தாவின் கனவை நனவாக்கும்விதமாக தன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் யோகப் பயிற்சிகளும் ஆயுர்வேத மருத்துவமும் செய்ய ஆரம்பித்தார்.

ஸ்வாமிகள் மீது மாறாத அன்புகொண்ட கிராம மக்கள் இன்னும் ஒரு வருடம் மல்லாடிஹள்ளியில் இருக்குமாறு அவரைக் கெஞ்சினர். அவர்களின் வேண்டுகோளைத் தட்ட முடியாமல் மேலும் ஒரு வருடம் தங்கினார். இப்படியே ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. அதற்குள் அவர் பல பணிகளைத் துவக்கிவிட்டிருந்தார். இறுதியில் அந்தக் கிராமத்திலேயே தொடர்ந்து தங்கியிருக்கச் சம்மதித்தார்.

அதன் பிறகு அந்தப் பகுதிகளின் மொத்த முன்னேற்றத்துக்குமான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார். தன் குரு ஸ்வாமி சிவானந்தாவின் கனவை நனவாக்கும் விதமாக தன்னை நாடி வருபவர்கள் அனைவருக்கும் யோகப் பயிற்சிகளும் ஆயுர்வேத மருத்துவமும் செய்ய ஆரம்பித்தார். யோகப் பயிற்சிக்காக மாநிலம் முழுவதிலும் இருந்து இளைஞர்கள் அந்தச் சிறு கிராமத்தைத் தேடி வர ஆரம்பித்தனர். சுதந்திரப் போராட்டத்திலும் மறைமுகமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முதல் சில வருடங்களிலேயே ஏழை மக்களுக்காக 10க்கும் மேம்பட்ட கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார். தங்குமிடம் இணைந்திருந்த இந்தக் கல்வி நிறுவனங்களில் அனைவருக்கும் கல்வி இலவசமாக அளிக்கப்பட்டது. அதேபோல முழு வசதிகள் கொண்ட ஓர் ஆயுர்வேத மருத்துவமனையையும் நடத்தி வந்தார். அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்தனர். எங்கும் குணமாகாத நோய்களைக்கூட மல்லாடிஹள்ளி ஸ்வாமிகள் குணப்படுத்தினார். சிகிச்சை மற்றும் மருந்துகள் முழுவதும் இலவசம். அனாதைச் சிறுவர்களுக்கான ஒரு விடுதியும் நடத்தினார். ஒருமுறை அந்த விடுதியில் 3000 மாணவர்கள் வரை இருந்தனர்.

இவருடைய பொது நலத் திட்டங்களுக்கு அரசு அல்லது தொழில் நிறுவனங்கள் போன்றவற்றின் உதவிகள் இல்லை. எனவே, இவரேதான் மக்களிடம் நேரில் சென்று பணம் திரட்ட வேண்டியிருந்தது. எனவே, திங்கட்கிழமை மட்டும் காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் மருத்துவமனையை திறந்துவைத்துவிட்டு மற்ற நாட்களில் பணம் திரட்டுவதற்காக மாநிலம் முழுவதும் பயணம் செய்வார். எப்போதும் தன்னை ‘திருகா’ என்றே குறிப்பிட்டுக்கொள்வார். திருகா என்றால் பிச்சைக்காரன் என்று பொருள்.

தொடர்ந்து நன்கொடை கொடுப்பவர்களிடம் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் நன்கொடை பெறுவார். அவர்களுக்கு முன்னமே அறிவித்துவிடுவார்.

ஆனால், திங்கள்கிழமை காலை 4 மணிக்கு நோயாளிகளைப் பார்க்க ஆரம்பித்தால், நோயாளிகளைப் பார்த்து முடிக்கும் வரை அந்த இடத்தில் இருந்து எழ மாட்டார். உணவு, தண்ணீர், ஓய்வு என்று எதற்கும் எழ மாட்டார். ஒரு ஞாயிற்றுக்கிழமை பணம் திரட்டுவதற்காக தாவன்கரே சென்றிருந்தார். தாவன்கரேயில் இருந்து இரவு ஒன்பது மணிக்குக் கிளம்பும் கடைசி ரயிலைப் பிடித்து 90 கி.மீ தொலைவில் உள்ள ஹோலல்கரே சென்று, பிறகு அங்கே இருந்து மல்லாடிஹள்ளி கிராமத்துக்கு நடந்து செல்ல வேண்டும். ஏற்கெனவே மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டு இருந்தது. எனவே, வேகவேகமாக ரயில் நிலையத்துக்குச் சென்று குறிப்பிட்ட பிளாட்பாரத்தில் கால் வைப்பதற்கும் ரயில் கிளம்பவும் சரியாக இருந்தது.

ரயிலைத் துரத்திக்கொண்டு பிளாட்பாரத்திலும் பிறகு ரயில் பாதையிலும் ஸ்வாமிகள் சிறிது தூரம் ஓடினார். எப்படியும் ரயிலைப் பிடித்துவிட வேண்டும் என்று ஒரு வேகம். ஏனெனில், அடுத்த நாள் திங்கள்கிழமை. காலை நான்கு மணிக்கெல்லாம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். எனவே, அந்த இருட்டிலும் சிறிது தூரம் துரத்தியும் ரயிலைப் பிடிக்க முடியவில்லை. இருப்புப் பாதையில் தொடர்ந்து ஓடினார். அப்போது அவருக்கு வயது 70. ரயில் பாதையிலேயே 90 கி.மீ. ஹோலல்கரே வரை ஓடி, பிறகு அங்கே இருந்து சாலை வழியாக மல்லாடிஹள்ளி கிராமத்தை அடைந்து சரியாக நான்கு மணிக்கு மருத்துவப் பணியைத் துவக்கிவிட்டார். அவர் அந்த மருத்துவமனையை இலவசமாகத்தான் நடத்தி வந்தார். எனினும் எந்தக் காரணத்துக்காகவும் தன்னால் மக்கள் சிறிது நேரமும் காத்திருப்பதை அவர் விரும்பவில்லை.

நன்கொடை திரட்டுவதிலும் அவரது பாணி தனி. தொடர்ந்து நன்கொடை கொடுப்பவர்களிடம் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் நன்கொடை பெறுவார். அவர்களுக்கு முன்னமே அறிவித்துவிடுவார். இன்ன தேதியில் பிச்சைக்காக வருவேன் என்று முன்னரே தகவல் கொடுத்துவிடுவார். சிலர் துலாபார முறையில் அவரது எடைக்கு எடை தானியம் அல்லது துணிகள் அல்லது வேறு பொருட்கள் கொடுப்பார்கள். வேறு சில பக்தர்களோ ஸ்வாமிகள் தங்கள் வீட்டுக்கு வந்தவுடன் பாதபூஜை செய்துவிட்டு பணப் பெட்டியின் சாவியை அவரிடமே கொடுத்துவிடுவார்கள். ஸ்வாமிகளும் பணப் பெட்டியைத் திறந்து அந்தக் குடும்பம் எவ்வளவு கொடுக்க முடியும் என்று நிர்ணயித்து, அந்தத் தொகையை பெட்டியில் இருந்து எடுத்துக்கொள்வார். துலாபாரம், பாதபூஜை ஆகியவற்றை ஸ்வாமிகள் ஆதரிக்கவில்லை என்றாலும், பணம் கிடைக்கிறது என்னும் திருப்திக்காக அவற்றை ஏற்றுக்கொள்வார்.

இப்படி நன்கொடைக்காக ஸ்வாமிகள் ஓர் ஊருக்குச் சென்றிருந்தபோதுதான், ஸ்வாமிகளை சத்குரு சந்திக்க நேர்ந்தது.

சத்குருவுக்கு அப்போது 11 வயது. ஸ்வாமிகளுக்கு 78 வயது!


அடுத்த வாரம்...

தனது தாத்தாவின் வீட்டில் ஸ்வாமிகளைச் சந்திக்கும் சத்குரு, ஸ்வாமிகளிடம் யோகா கற்றுக்கொள்ள விரும்பியதற்கான காரணத்தை விளக்குவதாக அமைகிறது வரும்வாரப் பகுதி!


கர்நாடகத்தின் புரட்சியாளர்! தொடரின் பிற பதிவுகள்