"என்னப்பா செய்யறது பழக்கமாயிருச்சு!" எனச் சொல்லியவாறு பலர் பல செயல்களைச் செய்வதைக் காண்கிறோம். சரி, அதையாவது ரசித்து அனுபவித்து செய்கிறார்களா என்றால், ஒரு எந்திரம் போல் செய்துவிட்டு செல்கிறார்கள். இதுபோன்ற பழக்கங்கள் சரியா? எது நல்ல பழக்கம், எது கெட்ட பழக்கம் என்பதற்கு அளவுகோல் எது? வாருங்கள் சத்குருவிடம் கேட்போம்!

சத்குரு:

நீங்கள் பிறந்த தினத்திலிருந்தே, 'கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆகாதே, நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்' என்று அடிக்கடி போதனை செய்திருப்பார்கள். என்னைக் கேட்டால், அனுபவித்துச் செய்யாமல் பழக்கத்தினால் எதைச் செய்தாலும் அது கெட்டதுதான்!

எது வாழ்க்கை?

காலை அலாரம் வைத்து எழுந்திருப்பீர்கள். பரபரவென்று தினப்படி வேலைகளைச் செய்வீர்கள். குளித்து முடித்து டிபனைத் திணித்துக் கொண்டு, ஸ்கூட்டரிலோ, காரிலோ, பஸ்ஸிலோ அலுவலகம் போய்ச் சேர்வீர்கள். மாலை வரை அங்கேயும் பழகிப்போன விஷயங்கள். வேலை முடிந்து வீடு திரும்பி, சாப்பிட்டு, தூங்கி, மறுபடி எழுந்து...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
வாயில் போட்ட உணவு எப்படி மெல்லப்பட்டு உணவுக் குழாயின் வழியே இறங்கி, வயிற்றுக்குப் போகிறது என்பதை ஒரு தடவையாவது முழுமையாகக் கவனித்திருக்கிறீர்களா?

பூட்டப்பட்ட மாடு, வண்டியை இழுத்துக் கொண்டு தினமும் ஒரே இடத்துக்குப் போய் திரும்புவது போல், நாற்பது ஐம்பது வருடங்களை இப்படியே தேய்த்துவிட்டு, பின்னர் அடங்கிப் போவதற்குப் பெயர் வாழ்க்கையா? ஒரு பெரிய எந்திரத்தில் பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பல்சக்கரங்களில் ஒன்றுபோல் ஆவீர்கள். பக்கத்தில் இருக்கும் சக்கரம் உங்களைக் கொஞ்சம் நகர்த்தும். அதன்படி உங்களை அடுத்துள்ள சக்கரத்தை நீங்கள் நகர்த்துவீர்கள். ஆக, மற்ற சக்கரங்கள் சுழல்வதைப் பொறுத்துத்தான், உங்கள் இயக்கமே தீர்மானிக்கப்படும் என்ற பரிதாப நிலைக்கு வந்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளியாகக்கூட இருக்கலாம். ஆனாலும் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், உங்கள் சுதந்திரம் பறிபோய் விடுகிறதல்லவா?

எலியா? ஆணா?

சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டு 'பாரை' விட்டுப் புறப்பட வெகு நேரமாகிவிட்டது. 'எட்டு மணிக்குள் வீட்டில் இருந்தாக வேண்டும் என்ற உன் மனைவியின் நிபந்தனை என்னவாயிற்று?' என்று நண்பர்கள் கிண்டலடித்தார்கள். சங்கரன்பிள்ளை ஜம்பமாக 'நோ, நோ! என் வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது' என்று தலைநிமிர்த்திச் சொல்லிவிட்டு, கம்பீரமாக வீட்டிற்கு நடை போட்டார்.

வாசலிலேயே அவர் மனைவி காத்துக் கொண்டிருந்ததை பார்த்தவுடன், தனக்கு நிகழவிருக்கும் ஆபத்தை அவர் புரிந்து கொண்டார். மனைவியின் பலவீனம் அவருக்குத் தெரியும். சரேலென அவரைக் கடந்து உள்ளே ஓடினார். பருமனாக இருந்த மனைவியால் அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்துத் துரத்த முடியவில்லை. என்றாலும் மனைவி அவரை விட்டபாடில்லை. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் மனைவியின் கையில் சிக்காமல் ஓடி, கடைசியாக கட்டிலுக்கு அடியில் போய்ப் படுத்துக் கொண்டார் சங்கரன்பிள்ளை.

மனைவியால் கட்டிலுக்குக் கீழே இருந்த இடைவெளிக்குள் நுழைய முடியவில்லை. "நீ என்ன எலியா? ஆண்மகனா? வெளியே வா!" என்று அவள் கத்தினாள். சங்கரன்பிள்ளை ஹாயாக பதில் சொன்னார்.. "நான்தான் இந்த வீட்டின் ராஜா. எங்கே படுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் முழு சுதந்திரம் எனக்கு இருக்கிறது" என்று.

கட்டிலுக்கு அடியில் இருக்கும் வரை தான் அவருக்கு நல்லநேரம். வேறெங்கும் அவருக்குப் பாதுகாப்பு கிடையாது. ஆனால் இதையே அவர் தன் சுதந்திரம் என்று அறிவித்துக் கொள்கிறார். சங்கரன் பிள்ளையைப் போல்தானே உங்களில் பலரும் சுதந்திரத்துடன் வாழ்வதாக நினைத்துக் கொண்டு, உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்?

நரகமாகிய வேலை!

வாழ்வில் முதன்முதலாக நீங்கள் வேலைக்குப் போனபோது, எந்த நாற்காலி உங்களுக்கு சொர்க்கத்துக்கு நிகராகத் தோன்றியதோ, இன்று அதே நாற்காலிதான் உங்களுக்கு ரத்த அழுத்தத்தையும், அல்சரையும், இதய வலியையும் உற்பத்தி செய்யும் நரகமாகிவிட்டது. சந்தோஷம் கொடுக்கும் என்றுதானே இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தீர்கள்? பழகிப்போன பின், சந்தோஷத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்?

படகில் பயணம் செய்வதற்காகத் துடுப்பை எடுத்தவன், படகை விட்டுவிட்டு துடுப்பை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் ஆகிவிட்டீர்களே! உங்கள் புத்திசாலித்தனத்தையும், விழிப்புணர்வையும் பயன்படுத்தாமல், செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வதற்கு நீங்கள் என்ன எந்திரமா?

ஒரே பக்கத்தைப் பல நூறு ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்து வைத்துக் கொண்டு, அடுத்தடுத்துப் படித்துக் கொண்டிருப்பதுபோல் உங்கள் தினங்களை காலண்டரில் கிழித்துக் கொண்டிருப்பதா வாழ்க்கை? முழுமையாக வாழ்வது என்றால் என்ன என்று நீங்கள் எப்போதேனும் யோசித்தது உண்டா? காலையில் பறவைகள் சந்தோஷமாகக் குரல் கொடுப்பதைக் கேட்டு என்றைக்காவது உற்சாகமாகி இருக்கிறீர்களா? தினம் தினம் தான் குளிக்கிறீர்கள். ஆனால் எத்தனை நாட்கள் உடலின் ஒவ்வொரு இடத்தையும் தண்ணீர் நனைத்து இறங்குவதை ரசித்திருக்கிறீர்கள்? எங்கு சென்றாலும் வண்டியில் தான் செல்கிறீர்கள். அந்த வண்டியை ஓட்டும்போது, சிந்தனையை வேறெங்கோ வைக்காமல், எத்தனை நாட்கள் அனுபவித்து ஓட்டியிருக்கிறீர்கள்?

மிக ருசியான உணவாக இருந்தாலும் முதல் கவளத்தைத்தான் அனுபவித்துச் சாப்பிடுவீர்கள். அடுத்தடுத்த கவளங்களை, கை தன் பழக்கப்படி வாயில் கொண்டு போடும். வாய் தன் பழக்கப்படி அதை அரைத்து உள்ளே தள்ளும். வாயில் போட்ட உணவு எப்படி மெல்லப்பட்டு உணவுக் குழாயின் வழியே இறங்கி, வயிற்றுக்குப் போகிறது என்பதை ஒரு தடவையாவது முழுமையாகக் கவனித்திருக்கிறீர்களா? ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையை மறந்துவிட்டு, வேலையில் சிக்கிக் கொண்டுவிட்டீர்கள். இப்போது இதையெல்லாம் உங்களிடம் கேட்டால், 'இதற்கெல்லாமா நேரத்தை வீணடிப்பார்கள்' என்றுதான் உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது.

மூச்சு விட்டுக் கொண்டு இவ்வுலகில் சும்மா இருப்பதற்காகவா இங்கு வந்தீர்கள்? அது, உயிரை உடலில் இருத்தி வைத்துக் கொள்வதற்குத்தான் பயன்படும். உயிரோடு இருப்பது வேறு, வாழ்வது என்பது வேறு. ஒரு கணம்... ஒரே ஒரு கணத்தையாவது முழு விழிப்புணர்வோடு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.