ஈஷா யோகாவில் தரப்படும் கருவிகள் ஒருவர் வாழ்க்கையில் என்ன மாயம் செய்ய முடியும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். தன் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த அதிசய நிகழ்ச்சி ஒன்றை நம்முடன் இங்கே பகிர்ந்துகொள்கிறார் திருமதி நீலா...

திருமதி. நீலா:

என் பெயர் நீலா. நான் தீபாவளிக்காக அதிரசம் சுட்டுக்கொண்டிருந்தேன். அசட்டையான ஒரு நேரத்தில், நான் சுட்டுக்கொண்டிருந்த பலகாரக் கரண்டி கை நழுவி 2½ லிட்டர் எண்ணெய் உள்ள பாத்திரத்தில் விழுந்தது. பாத்திரத்தையும் தட்டிவிட்டுவிட்டேன். கொதித்துக் கொண்டிருந்த எண்ணெய் என் மார்புக்கு மேலிருந்து கொட்டி, கால் வரை முழுமையாக எண்ணெயில் முங்கி எழுந்ததுபோல் இருந்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

Neela akka - isha yoga sharing

கொதிக்கும் எண்ணெய் மேலே கொட்டினால் என்னாவது? வெந்துபோக வேண்டியதுதான். மனம் எத்தனை பதற்றத்தில் உழலும்? ஆனால், அப்படியொரு பதற்றமான, உயிர் கொல்லும் சூழ்நிலையிலும் எனக்குள் அப்படியொரு தெளிவு. சத்குரு அவர்கள் சொல்லிக் கொடுத்த கருவிகள் எனக்குள் வேலை செய்யத் துவங்கின. வகுப்பில் சொல்லிக் கொடுத்த கருவியின் பயனால் ஒவ்வொரு க்ஷணமும் விழிப்பாக இருந்தேன். துரிதமாக முடிவு செய்து அதன்படியே செயல்புரிந்தேன்.

என் உடம்பில் இருந்த எரிச்சல், கொப்புளங்கள் எல்லாம் தோன்றிய இடம் தெரியாமல் மறைந்துவிட்டன.

அடுத்து என்ன செய்ய? என்னும் சிந்தனை எனக்குள் இயல்பாய் எழுந்தது. உடலும் மனமும் அந்தக் கணத்தில் நான் சொல்வதைக் கேட்டது. உடனே என் துணிமணிகளைக் கிழித்துக்கொண்டு ஓடிப் போய் தண்ணீரை மேலே ஊற்றி கழுவிவிட்டு, எனக்குத் தெரிந்த வகையில் முதலுதவி செய்து கொண்டேன்.

சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு மணி நேரத்திற்குள் என் உடம்பில் இருந்த எரிச்சல், கொப்புளங்கள் எல்லாம் தோன்றிய இடம் தெரியாமல் மறைந்துவிட்டன. பள்ளியிலிருந்து வந்த என் குழந்தையிடமும் கணவரிடமும் இதைப் பற்றிக் கூறியபோது, அவர்கள் நான் சொன்னதை நம்பவில்லை. என் நண்பர்கள் இது குறித்துக் கேள்விப்பட்டவுடன் வீட்டுக்கு வந்து பார்த்துவிட்டு, ‘‘அக்கா, டாக்டரிடம் சென்று TT ஊசி போடவில்லையா?’’ என்று நலம் விசாரிக்கத் துவங்கினார்கள்.

எனக்கு சத்குரு பக்கத்துணையாக இருக்கும்போது வேறு என்ன வேண்டும் என்று அவர்களிடம் கேட்டேன். இப்படிப் பேசுகிறாளே என்று அவர்களுக்குள் அதிசயமும் ஆச்சரியமும் புகுந்து கொள்வதைக் கவனிக்க முடிந்தது. என்னை விட்டு விலகிச் செல்வதற்கு முன் அவர்கள் கூறிச் சென்ற வார்த்தை... “அக்கா சத்குரு அவர்களின் அருள் உங்களுக்கு முழுமையாக உள்ளது!”

எத்தனை உண்மை, எத்தனை ஆழமான கருத்து. அந்தச் சூழ்நிலையில், அந்த மனநிலையில் எனக்குள் சத்குருவின் அருள் பரிபூரணமாய் குடிகொண்டதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்.

என் மனதில் எழுந்த நன்றிப் பெருக்கினை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. குருவுக்கு நம்மால் என்ன செய்துவிட முடியும்? சத்குரு சந்நிதியில் அமர்ந்து, அவர் பாதத்தில், அவர் அருளில் அவருக்கு குருபூஜை செய்து என் நன்றியினை வெளிப்படுத்திக் கொண்டேன். என்னைக் காப்பாற்றிய சத்குரு அவர்களின் பாதம் பணிகிறேன்.

சத்குரு சந்நிதி அருளின் பேரொளி.