இங்கே கோவை ஈஷா யோகா மையத்தில், சில நூறு பேர் சத்குருவின் தரிசனத்தில், அவர் அருளில் திளைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கும் அந்தப் பட்டியலில் சேர விருப்பமா? இதோ இந்த நேரலை வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள். மாலை 6.20 மணிக்கு துவங்கும் தரிசன நேரம் முழுமையாக உங்கள் கணினித் திரையில் விரிகிறது...

 

யோகரதோவா போகரதோவா எனும் ஆதி சங்கரர் பாடலை பாடியபின், "தட்சினாயனத்தின் கடைசி அமாவாசையிது, ஆன்மீக சாதனாவில் அதிக கவனம் செலுத்தவேண்டிய காலகட்டத்தின் கடைசி மாதமிது, அதன்பிறகு டிசம்பர் மாதத்தில் சங்கிராந்தி வந்துவிடும். இது தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு 16-வது ஆண்டாகவும் திகழ்கிறது. அடுத்த 16 வருடங்கள், ஞானத்தின் களஞ்சியமாகத் திகழும் தியானலிங்கத்தின் சக்தியை அனைவரும் இன்னும் சிறப்பாக உள்வாங்கிக்கொள்ள வழிகள் வகுப்பதாக இருக்கும்." என்று சத்குரு கூறினார்.

காயாந்த ஸ்தானம் பற்றியும், தியானலிங்கத்திலும் லிங்கபைரவியிலும் இருப்பது போல, காலபைரவர்முன் எப்படி இருப்பது என்பது பற்றியும் ஒருவர் கேட்க, "காலத்தின்மேல் ஆளுமை கொண்ட யோகிகள் மிகவும் குறைவு. ஒருவர் காலத்தின்மேல் ஆளுமை கொள்ளவேண்டும் என்றால், தன் உடல்மேல் ஆளுமையுடன் இருக்கவேண்டும். ஏனென்றால் காயம் அல்லது உடல் என்பது இருக்கும்வரை, காலம் என்பது ஓடிக்கொண்டே இருக்கும், அதை நிறுத்தமுடியாது." என்று கூறி, உயிருக்கும் காலத்திற்கும் இடையிலான தொடர்பையும் விளக்கினார்.

"நான் அனைத்தையும் இருப்பது போலவே பார்க்கிறேனா, அல்லது நான் உணர்வதற்கும் உண்மைக்கும் இடையே அதிக தூரமுள்ளதா?" என்று ஒருவர் கேட்க, "பூமியிலுள்ள உயிரினங்கள் அனைத்திலும் மிக நுட்பமான பார்வை கொண்ட உயிரினம் மனித இனமே. ஒருவர் எவ்வளவு தெளிவாகப் பார்க்கிறாரோ அந்த அளவு புத்திசாலித்தனமும் கூர்மையாக இருக்கும். இப்போது செயற்கையான வெளிச்சத்துடன் நாம் பெரும்பாலான நேரம் இருப்பதால், நம் பார்வையின் கூர்மை குறைந்துள்ளது. இயற்கையுடன் இயைந்து 12 மணி நேரம் வெளிச்சத்திலும் 12 மணி நேரம் இருட்டிலும் இருந்திருந்தால், வெளிச்சமாக இருந்தாலும் சரி, இருட்டாக இருந்தாலும் சரி, பார்வைத் திறனில் மனிதர்களை விஞ்ச வேறு உயிரினம் கிடையாது." என்று சத்குரு விளக்கினார்.

"ஆசைப்பட்டால்தான் நான் விரும்புவதை அடையமுடியும் என்று சிலர் சொல்கிறார்கள், இது உண்மையா?" என்று ஒருவர் கேட்க, "நீங்கள் ஆசைப்பட்டால் என்ன ஆசைப்படுவீர்கள்? இதுவரை அறிந்ததற்கு மட்டுமே ஆசைப்படுவீர்கள். நீங்கள் ஆசைப்பட்டு உங்களைச் சுற்றி சேகரித்து வைத்திருக்கும் பொருட்களை இழந்துவிட்டால், சொல்லமுடியாத துன்பத்திற்கு ஆளாகிறீர்கள். உங்களிடம் இருக்கும் பணம், வசதிகள் இவை அனைத்தையும் எடுத்துவிட்டால் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று பாருங்கள். இவை எதுவும் இல்லாமலும், உங்களுக்குள் நீங்கள் அற்புதமாக உணரும்விதமாக உங்களை செய்துகொண்டால், இந்த உயிர் எப்போதும் முழுவீச்சில், உச்சபட்ச உயிர்ப்போடு இருந்தால், பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் உங்களைத் தேடிவரும்." என்று சத்குரு கூறினார்.

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.