எங்கிருந்தாலும் தரிசனம்
தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.
தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.
மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…
| ||
|
நேற்று நடந்த "சத்குருவுடன் ஒரு நாள்" நிகழ்ச்சியில் சத்குருவை கண்ணாறக் கண்ட பங்கேற்பாளர்கள் பலர், இன்றும் சத்குரு தரிசனம் தரவிருக்கிறார் என்ற இன்ப அதிர்ச்சியில் இருந்தனர், சபரிமலை செல்லும் வழியில் தியானலிங்கம் தரிசிக்க வந்திருந்த ஐயப்ப பக்தர்களும் 'சாமி வருகிறாரா!' என்ற ஆச்சரியக் குறிகளுடன் காத்திருந்தனர்.
நல்லார்க்கும் பொல்லார்க்கும் வரமளிக்கும் அற்புதமாய் தீர்த்தகுண்டத்தின் முன் வந்தமர்ந்த சத்குரு "ஜெய ஜெய ஜெய மஹாதேவ..." மந்திர உச்சாடனையை செய்த பின் பேசத் துவங்கினார்.
Subscribe
எனது பதில் எங்கேயிருந்து வருகிறது!
"இன்று ஒருவர் கேட்ட பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம், 'நீங்கள் கூறும் இந்த பதில்கள் உங்களுக்கு எங்கிருந்து வருகின்றன?' எனக் கேட்டார். நான் 'என் காலியான மூளையிலிருந்து வருகிறது' என்றேன்." இப்படி தன் பேச்சைத் துவங்கிய சத்குரு, இன்று இரவு வெள்ளியங்கிரி மலை உச்சியில் ஒரு கிரீடம்போல் காட்சியளிக்கப்பட உள்ள சந்திர பிறையை அனைவரும் தவறாமல் காண வேண்டும் எனக் கூறி, இயற்கையின் அற்புதக் காட்சியை நினைவூட்டினார்.
உபாசனா...
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கதாநாயகனாக இல்லாமல் துணைக் கதாப்பாத்திரமாக இருப்பீர்களானால் அந்நிலை உபாசனா எனப்படும். நீங்கள் துணைக் கதாப்பாத்திரம் போல் உங்கள் வாழ்க்கையை பக்கவாட்டிலிருந்து கவனிக்கும்போது அது அளப்பரிய சாத்தியத்திற்கு வழிவகுக்கும். இதுவே உபாசனா எனும் செயல்முறை.
எங்கேயும் கரைந்திடுங்கள்...
"மது அருந்த பாருக்கு சென்ற ஒருவர் பேரரிடம் சொல்லி, மூன்று வகையான மது வகைகளை மூன்று தனித்தனி கோப்பைகளில் பெற்று, மூன்றையும் தானே குடித்தார். இது அங்கே தினமும் வாடிக்கையாகவே நடந்தது. அந்த பேரர் அவரிடம் 'ஏன் இப்படி தனித்தனியாக அருந்துகிறீர்கள், நான் இவற்றை ஒன்றாகத் தருகிறேன்' என்ற போது, 'இல்லை! இல்லை! என் இரு சகோதரர்கள் இங்கே இல்லை. அவர்களுக்கும் சேர்த்து நான் குடிக்கிறேன்' என்றார். பின் ஒரு நாள் இரு கோப்பையை மட்டுமே ஆர்டர் செய்தார். உடனே பேரர், 'உங்கள் சகோதரர் ஒருவருக்கு ஏதேனும் விபரீதம் நிகழ்ந்துவிட்டதா?' எனக் கேட்க, இல்லை நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றார்."
இப்படி அந்தக் கதையை சத்குரு அழகாக விவரித்துச் சொல்ல சிரிப்பலைகள் எழுந்தன. இந்தக் கதையில் வருபவர் போலத்தான் பலரும் 'நான்' என்பதை விட்டு விட்டதாக தந்திரம் செய்கிறார்கள் என கதையின் மூலம் சுட்டிக்காட்டிய சத்குரு, "நீங்கள் தியானலிங்கத்தில் இருந்தாலும், மலையில் இருந்தாலும், மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தாலும், எதில் இருக்கிறீர்களோ அதில் உங்களைக் கரைத்திடுங்கள்!" என்றார்.
காயத்ரி மந்திரம் உச்சரிக்கலாமா?
கேள்வி நேரத்தில் காயத்திரி மந்திரம் பற்றி ஒருவர் கேட்க...
"ஆதிசங்கரர் அவர்களால் உருவாக்கப்பட்ட காயத்ரி மந்திரம், முழுக்க முழுக்க பொருள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. உடல் நலம், செல்வ வளம் போன்ற நலன்களைப் பெற அது மிகவும் உகந்தது. பெரும் மக்கள் கூட்டம் பலன் பெறும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆதிசங்கரர் இது போன்ற ஒரு எளிய சக்திவாய்ந்த மந்திரத்தை வழங்கினார். ஆனால் ஈஷாவில் நீங்கள் அதைச் செய்ய தேவையில்லை. இந்த இடம் உங்கள் உள்நிலை வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்போது நாம், பெரும் மக்கள் கூட்டம் எளிதில் உள்வாங்கும் வண்ணம் 'ஈஷா கிரியா' எனும் எளிய பயிற்சியை உருவாக்கியுள்ளோம்," எனப் பதிலளித்தார்.
மனதை நிறுத்துவது எப்படி...?
"யோகா செய்யும்போது என் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனை எப்படி நிறுத்துவது?" என கேட்கப்பட்ட கேள்விக்கு...
"நீங்கள் யோகா செய்யுபோது உங்கள் கணையமும் சிறுநீரகமும் நுரையீரலும் இயங்குவதை நிறுத்த வேண்டும் என நீங்கள் நினைப்பதில்லை. இவையனைத்தும் நீங்கள் யோகா செய்யும்போது இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. எனவே மனதை நிறுத்த முயற்சிக்க வேண்டாம். நீங்கள் உங்கள் மனதுடன் அடையாளம் கொண்டுள்ளதே பிரச்சனை," என்ற சத்குரு மனம் பற்றிய விரிவாகப் பேசினார்.
அங்கே வந்திருந்த புதுமணத் தம்பதிகளுக்கு தன் ஆசிகளை வழங்கிய சத்குரு திருநீற்றையும் ஆசிர்வதித்து அருள் தந்து விடை பெற்றார்.