எளிமையால் உயர்ந்த அப்துல்கலாம்!
அப்துல்கலாம் அவர்கள், மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒரு மனிதராய், ஒரு குடியரசுத் தலைவராய், மிக எளிதில் அணுகக்கூடியவராய் இருந்தார். ஒரு குழந்தை கூட அவரை சந்தித்து பேச முடியும், அவர் தன்னை வைத்துக் கொண்ட விதம் அப்படி.
அக்டோபர் 15, அப்துல்கலாம் எனும் மாமனிதர் பிறந்தநாள்
"உறக்கத்தில் வருவதல்ல கனவு, உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு."
-அப்துல் கலாம்
சத்குரு:
தமிழகத்திலுள்ள ஒரு சிறிய நகரத்தில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் திரு.ஏ.பி.ஜே. அப்துல் கலாம். உயர்வடைய வேண்டும் என்ற தணியா தாகத்தால் வாழ்வின் உச்சிகளைத் தொட்டவர். தனக்கு தானே கற்பிதம் செய்துகொண்டதால் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே தலைச்சிறந்த வானியல் பொறியாளர்களில் ஒருவராய் உயர்ந்தவர்.
Subscribe
அரசியல் சாராத, கட்சி தொடர்பில்லாத எந்தவொரு மனிதரும் இதற்கு முன் ஒரு தேசத்தின் குடியரசுத் தலைவராய் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அவரது எளிமையும் உற்சாகமும், விஞ்ஞானிகள் உலகில் அவர் பரிமளித்த விதமும், மக்கள் அவரை புறக்கணிக்க இயலாமல் போய்விட்டது.
தேசத்தில் உள்ள ஒவ்வொரு மனிதரும் அவர் மேல் அத்தனை மரியாதை வைத்திருந்ததால், இயல்பாகவே அவர் உயர்ந்த நிலையை அடைந்தார். அவர், மிகவும் தனித்துவம் வாய்ந்த ஒரு மனிதராய், ஒரு குடியரசுத் தலைவராய், மிக எளிதில் அணுகக்கூடியவராய் இருந்தார். ஒரு குழந்தை கூட அவரை சந்தித்து பேச முடியும், அவர் தன்னை வைத்துக் கொண்ட விதம் அப்படி.
அவர் எத்தனை எளிமையான ஒரு வாழ்க்கை வாழ்ந்தார் என்பதைச் சொல்ல ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.
அவர் குடியரசுத் தலைவராய் இருந்த சமயம் அது. துபாயில் வந்திறங்கினார். இடைவிடாத அலுவல் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், அவர் எங்கு சென்றாலும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் நேரம் செலவிட்டார். மாணவர்களை சந்தித்து அவர்களை உத்வேகப்படுத்துவதை உறுதிசெய்து கொள்வார். இத்தனைக்கும் இடையே, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரிந்த ஒரு காவலரை அவர் அடையாளம் கண்டுகொண்டார். "வேலுச்சாமி, இங்கு என்ன செய்கிறீர்கள்?" என்றார்.
30 வருடங்களுக்கு முன்னர், இந்த காவலர் அப்துல் கலாம் அவர்களுக்கு வாகன ஓட்டுநராய் இருந்திருக்கிறார். அவரை ஞாபகம் வைத்து, அவ்விடத்திலேயே பேசியிருக்கிறார் கலாம். அந்த ஓட்டுநரை கட்டியணைத்து, "எனக்கு இரவில் கொஞ்சம் வேலை இருக்கிறது. 10 மணிக்கு நான் வந்தவுடன், நீங்கள் என் அறைக்கு வாருங்கள், கொஞ்சம் நேரம் பேசுவோம்," என்றிருக்கிறார்.
பின்னர், அந்த ஓட்டுநரை ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி எடுத்தபோது இதனை பகிர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட எளிமையான மனிதர் கலாம். தன் வாழ்நாள் முழுவதும் தன்னை உந்தித்தள்ளி செயல்பட்டவர். ஆக்ரோஷமாக அல்லாமல், வெற்றி வெற்றி எனும் நெருப்பில்லாமல், போட்டி போடாமல், கொள்கைகள் வைத்திராமல் வாழ்ந்த மிக எளிமையான மனிதர் அவர்.
மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் எனும் எளிமையான ஆசையினால், கிராமத்து பையனாய் இருந்து, தேசத்தின் தலைவர் ஆனவர். ஒரு மனிதன் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு மிக எளிமையாய் என்ன செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாய் இருந்தவர்.