பலவித காரணங்களுக்காக பலமுறை தான் டாக்டர்களிடம் சென்ற சுவாரஸ்யமான அனுபவங்கள்! பாம்புக் கடிக்கு, விபத்து காயத்திற்கு போன்ற காரணங்களுக்காக சென்றது, தன்னை தாக்கிய ஆஸ்துமா என்று தன் அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு...

சத்குரு:

டாக்டர் அப்பா!

என் அப்பா ரயில்வே துறையில் மருத்துவராக இயங்கியபோது, அந்தப் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிந்து இருந்தார். ஓர் ஊரிலிருந்து மாற்றலாகிப் போகும்போது, அவரை வழியனுப்ப நூற்றுக்கணக்கானவர்கள் ரயில் நிலையத்துக்கு வருவார்கள்.

சில மருத்துவர்கள் தங்கள் திறமைகளைவிட புத்திசாலித்தனத்தை அதிகம் நம்புவதைக் கவனித்திருக்கிறேன்.

அன்பின் பரிமாற்றங்களுக்காக அந்த இடமே நெகிழ்ச்சியாகக் காணப்படும். 'அட! நம் அப்பா இவ்வளவு பிரபலமாக இருக்கிறாரே!' என்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டு இருப்பேன்.

இளமையில், காட்டிலும், மேட்டிலும் சுற்றிக்கொண்டு சுறுசுறுப்பாகவும், ஓய்வில்லாமலும் இருந்தேன். இயற்கையில் வாழ்ந்ததாலும், இயற்கை தந்ததை உண்டதாலும், மருத்துவர்களிடம் போக வேண்டிய அவசியமே வரவில்லை. தவிர, யோகாவும் இன்றுவரை உறுதுணையாக இருந்து வருகிறது.

என்னைத் தாக்கிய ஆஸ்துமா!

வேறு ஒரு டாக்டருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது.

மைசூர் அருகே ஒரு பண்ணையில் வசித்தபோது, பேருந்துக்காகக் காத்திருக்கும் நேரத்தில், அருகில் இருந்த ஒரு கிளினிக்கில் போய் அமர்ந்திருந்தேன். கிளினிக்கை நடத்தி வந்த டாக்டர் மிக எளிமையான மனிதர். அதிகமாகப் பணம் வசூலிக்காதவர்.

அப்படி ஒருநாள் காத்திருந்தபோது, கிராமத்தில் இருந்து ஓர் இளம் பெண்ணை அங்கே அழைத்து வந்தார்கள். அவள் வயது இருபதுகளில் இருக்கும். எனக்கும் அப்போது அதே வயது இருக்கும். அவள் உடல் வில்போல் வளைந்து வளைந்து மூச்சுத் திணறிக் கொண்டு இருந்தது. ஆஸ்துமாவின் உச்சக்கட்டத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தாள். உடல் ஒரு நிலையில் இல்லாமல் நெளிந்து கொண்டே இருந்தது. உயிருடனும் இல்லாமல், செத்தும் போகாமல் இடையில் மாட்டிக் கொண்டது போன்ற நரகம் அது.

அவளைப் படுக்க வைப்பதே பெரும்பாடாக இருந்தது. அவளை மற்றவர்களுடன் சேர்ந்து நானும் பிடித்து அழுத்திக் கொள்ள, டாக்டர் ஊசி போட்டார். ஆக்ஸிஜன் கொடுத்தார். அன்றைக்குத்தான் டாக்டர்களின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டேன்.

பொதுவாக, நான் உணர்ச்சிகளுக்கு ஆளாவது இல்லை. ஆனால், அந்தப் பெண் என்னை மிகவும் பாதித்துவிட்டதை விரைவிலேயே அறிய நேர்ந்தது. மைசூரில் இருந்து திரும்பியபின், பண்ணை வீட்டில் படுத்திருந்தேன். இரவு 2 மணி இருக்கும். ஆஸ்துமா என்னை முதன்முறையாகத் தாக்கியது. மூச்சுவிட முடியாமல், உயரமான கட்டிலில் இருந்து அப்படியே உருண்டு கீழே விழுந்தேன். உடல் முழுவதும் வியர்த்து, தலை நனைந்து ஈரம் சொட்டியது. செத்துவிடப்போகிறோம் என்றே தோன்றியது. தவழ்ந்து தவழ்ந்து வாசல் கதவை அடைந்து கதவைத் திறந்தேன். வெளிக்காற்றைச் சுவாசிக்க வேண்டும் என்ற துடிப்புடன் அப்படியே அந்த வாசலில் கிடந்தேன். கிட்டத்தட்ட ஆறு, ஏழு மணி நேரம் என் உடல் தவித்துத் துடித்தது.

சூரியன் உதிக்கும் வரை அப்படியே அந்த நரகத்தை அனுபவித்துக் கொண்டு கிடந்தேன். பிறகு சூரியனில் உட்கார்ந்திருந்தேன். மெள்ள மெள்ள என் உடல் சகஜ நிலைக்குத் திரும்பியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அந்தப் பெண்ணைப் பார்த்தது என் மனதில், என் நினைவில் மிக அழுத்தமாகப் பதிந்துவிட்டதே என் ஆஸ்துமாவுக்குக் காரணம். என் யோகா பயிற்சிகளை மும்முரமாக்கினேன். ஆஸ்துமா காணாமல் போனது.

குத்துமதிப்பான டாக்டர்

சில மருத்துவர்கள் தங்கள் திறமைகளைவிட புத்திசாலித்தனத்தை அதிகம் நம்புவதைக் கவனித்திருக்கிறேன்.

வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து பார்க்கும் முறைகள் அறிமுகமாவதற்கு முன்பே, ஒரு குறிப்பிட்ட மருத்துவர் அதை கணித்துச் சொல்வதில் மிகத் தேர்ந்தவர் என்று பெயர் பெற்றிருந்தார். அவருடைய கணிப்பு தவறியதாகச் சரித்திரமே கிடையாது. அவர் மூப்பெய்தியபோது, தன் மகனிடம் மருத்துவமனையை ஒப்படைத்தார்.

மகனும் டாக்டர்தான். "ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை அப்பா! எந்த அடிப்படையை வைத்து கர்ப்பம் தரித்த உடனேயே அது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று மிகச் சரியாகக் கணித்து வந்தீர்கள்?"

"அந்த ரகசியத்தை உன்னிடம் மட்டும் சொல்கிறேன், மகனே! இருபத்தைந்து வகை இருந்தால் கஷ்டம். ஆண், பெண் என இரண்டே வகைதானே இருக்கிறது? பார்த்தவுடன் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதைச் சொல். ஆண் என்று சொன்னால், ரிஜிஸ்தரில் பெண் என்று குறித்துவிடு. குழந்தை பிறக்க 9 மாதங்கள் ஆகிவிடும். ஆணாக இருந்தால், பாராட்டை வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக் கொள். பெண்ணாக இருந்தால், 'டாக்டர், தவறு செய்துவிட்டீர்களே' என்பார்கள். 'அப்படியா? ரிஜிஸ்தரில் என்ன குறித்து வைத்திருக்கிறேன், பார்ப்போம்' என்று சொல்".

இப்படிக் குத்துமதிப்பாக இயங்கும் மருத்துவர்களைப் பற்றி என்ன சொல்வது?

வலி இயல்பானது. ஆனால் வேதனை?

இன்னொரு மருத்துவருடன் எனக்கு நேர்ந்த அனுபவமும் வித்தியாசமானது.

மோட்டார் சைக்கிளை எவ்வளவோ வேகமாக ஓட்டியிருக்கிறேன். அப்போதெல்லாம் நடக்காத ஒரு விபத்து, பைக்கை ஒரு நெடுஞ்சாலையில் நிறுத்தி வைத்திருந்தபோது நடந்தது. மோட்டார் சைக்கிள் சரிந்து, கால் வைக்கும் பகுதி என் ஆடு சதையை எலும்பு வரை கிழித்துவிட்டது. எனக்கோ நேரத்துக்கு வகுப்புக்குப் போயாக வேண்டும்.

பொதுவாக, எந்த மருத்துவரிடமும் நோயின் தீர்வுக்கான முழுமையான விவரங்கள் இருப்பது இல்லை.

பக்கத்தில் இருந்த கிளினிக் போனேன். "இது மிகப் பெரிய காயம். நிறைய தையல்கள் போட வேண்டும். இங்கே அனஸ்தீஷியா இல்லை. மயக்க மருந்து கொடுக்காமல், என்னால் இதைத் தொட முடியாது" என்றார் டாக்டர்.

"வேறு மருத்துவமனைக்குப் போக நேரம் இல்லை. தயவுசெய்து, மயக்க மருந்து இல்லாமலேயே தையல்களைப் போடுங்கள்" என்றேன்.

"விளையாடுகிறாயா? வலி உன்னைத் தின்றுவிடும்" என்றார் டாக்டர்.

விவாதங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில் டாக்டர் விட்டுக் கொடுக்க முடிவு செய்தார்.

மயக்க மருந்து இல்லாமல், 44 தையல்கள் போட்டு முடிந்தார். அதற்குள் அவருக்கு வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டது. நானோ அவரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்ததைப் பார்த்து அவருக்கு ஆச்சர்யம்.

"உனக்கென்ன வலியே இல்லையா?" என்றார்.

"அதெப்படி டாக்டர் வலி இல்லாமல் போகும்? வலி உடலைத் திருகி எடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், அந்த வலியினால், மனதில் வேதனை இல்லை. வலி இயல்பானது. ஆனால், வேதனை நாமே உருவாக்கிக் கொள்வது அல்லவா?" என்றேன்.

டாக்டர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்.

அதிர்ஷ்டத்தை நம்பும் டாக்டர்

சில வருடங்களுக்கு முன், மங்களூரில் ஒரு டாக்டரின் வீட்டு வாசலில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். எல்லாவிதப் பாம்புக் கடிகளுக்கும் சில மூலிகை மருந்துகள் அவர் தருவதாக அறிந்தேன். பாம்புக் கடியில் இரண்டு வகைத் தாக்குதல் உண்டு. ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறை, இரண்டுக்கும் பொதுவாக இருக்க முடியாது. அவரிடம் விசாரித்தேன்.

"இந்தியாவில் நூற்றில் தொண்ணூறு பாம்புகளுக்கு விஷம் கிடையாது. அந்த வகைப் பாம்புகள் கடித்து இருந்தால், இந்த மருந்து வேலை செய்யும். அதாவது நூற்றில் தொண்ணூறு கேஸ்கள் இந்த மருந்தைச் சாப்பிட்டுப் பிழைத்துவிடும். மிச்சம் இருக்கும் 10 சதவிகிதப் பாம்புகளிடம் நீங்கள் கடி வாங்கி இருந்தால், அது உங்கள் துரதிர்ஷ்டம்" என்றார்.

இப்படி மற்றவர் அதிர்ஷ்டத்தை நம்பி இயங்கும் மருத்துவர்களும் உண்டு. அண்மையில், அமெரிக்கா சென்றபோது, கடுமையான காய்ச்சல் என்னைத் தாக்கியது. நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டாக்டரிடம் போனேன். ஒரு டாக்டர் அதை டெங்கு காய்ச்சல் என்றார். அதற்கான மருந்துகள் கொடுத்தார். காய்ச்சல் குறையவில்லை.

அடுத்ததாக இன்னொரு டாக்டர் மலேரியாவாக இருக்கும் என்று சோதனைகள் செய்து பார்த்தார். அவராலும் நோய் பற்றி அறிய முடியவில்லை. இன்னொருவர் டைஃபாய்டாகத்தான் இருக்கும் என்று அதற்கான மருந்துகள் கொடுத்துப் பார்த்தார். எதிலும் காய்ச்சல் சரியாகவில்லை.

ரத்தப் பரிசோதனை போதாது என்று, எக்ஸ்-ரே, எம்.ஆர்.ஐ என்று என்னென்னவோ எடுத்துப் பார்த்தனர். யாராலும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 'இனம் தெரியாத காய்ச்சல்' என்று அதைக் குறிப்பிட ஆரம்பித்தார்கள்.

வேறு வழியின்றி, என் எல்லா நிகழ்ச்சிகளையும் இரண்டு நாட்களுக்குத் தள்ளி வைத்தேன். கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தேன். இரண்டே நாட்களில் எந்த மருந்தும் இல்லாமல், காய்ச்சல் விலகி, முற்றிலும் குணமடைந்தேன்.

பொதுவாக, எந்த மருத்துவரிடமும் நோயின் தீர்வுக்கான முழுமையான விவரங்கள் இருப்பது இல்லை.

நம் பிரச்சனையே அதுதான். இயற்கை வைத்தியரிடம் போனால், கடவுளே இயற்கை வைத்தியத்தை ஆதரிப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படுவார். ஹோமியோபதி டாக்டரிடம் போனால், அதைத்தான் கடவுள் சிபாரிசு செய்வார் என்பது அவர் எண்ணம். அலோபதி டாக்டர் அதைத் தாண்டி எந்த மருத்துவமும் இல்லை என்று பூரணமாக நம்புவார். யாரும் திறந்த மனதுடன், மற்றவற்றின் மகத்துவத்தை ஏற்றுக் கொள்வது இல்லை.