தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி
ஆச்சு தீபாவளியும் வந்தாச்சு! இன்னும் இரண்டே நாள்தான் இருக்கு. ஒரு பக்கம் துணி வாங்குற பரப்பரப்பு இன்னொரு பக்கம் என்ன சமைக்கிறதுங்கிற குழப்பம்! இதோ உங்க குழப்பம் தெரிஞ்சு இரண்டு ரெசிபி, சுவையான ஒரு ஐட்டம், மருந்தா இன்னொரு ஐட்டம்! சமைச்சு பார்த்து சொல்லுங்க...
ஈஷா ருசி
ராகி அதிரசம்
எங்க ஊர் ஸ்பெஷல்...
திருமதி. சுகந்தி, 15 வருடங்களுக்கு மேலாக ஈஷாவுடன் இருப்பவர். கரூர் ஸ்பெஷலாக அவர் வழங்கும் ரெசிபி இது...
எப்பவுமே நம்ம ஊர் வழக்கங்கள், நம்ம ஊர் உணவுகள் என்று பெருமைப்பட்டு கொள்வோர் நம்மில் அநேகம் பேர். அந்த வரிசையில் இது எங்க ஊர் பதார்தம். கேழ்வரகு-வெல்லம் காம்பினேஷனை இன்று தான் நாம் மெல்ல மெல்ல உணர்ந்து வருகிறோம். வித்தியாசமான, சத்தான இந்த பலகாரத்தை செய்து பாருங்களேன்...
தேவையான பொருட்கள்
Subscribe
ராகி மாவு - 500 கிராம்
வெல்லம் - 250 கிராம்
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க
செய்முறை
ராகி மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை கலந்து எடுத்துக்கொள்ளவும். வெல்லத்தை பாகு செய்து அதில் ஊற்றி நன்கு கிளறி வைக்கவும். அதை ஒரு நாள் ஊறவிட்டு, மறுநாள் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதிரசமாக சுட்டு எடுக்கவும். மிருதுவான, சுவையான அதிரசம் தயார்.
தீபாவளி லேகியம்
தீபாவளி ஸ்பெஷல்...
திருமதி. சாந்தி சுகுமார், பெங்களூருவில் இருந்தாலும் தன் வீட்டு பாரம்பரிய ஐட்டமான இந்த பதார்தத்தை மறக்காமல் நம்முடன் பகிர்ந்துக் கொண்டவர்...
சாதாரணமாக தீபாவளி லேகியம் செய்யும் முறை நிறைய நாட்டு மருந்துகள் சேர்த்து சற்று செய்வதற்கு சிரமமாக இருக்கும். இம்முறை சுலபமாகவும், ருசியாகவும் எபக்டிவாகவும் இருக்கும். நிறைய பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் வயிறு உப்புசம், அஜுரணம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கை மருந்து இது.
தேவையான பொருட்கள்
இஞ்சி (இளசு) - 250 கிராம்
வெல்லம் - 1/2 கப்
தேன் - 1/4 கப்
நெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - சிறிதளவு
தனியா பொடி - 2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை
இஞ்சியை நன்றாக கழுவி தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து, நைசாக அரைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு திரும்பவும் காய்ச்ச வேண்டும். நன்றாக நுரைத்து கம்பி பதத்திற்கு வரும்பொழுது அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து மிதமான தீயில், கைவிடாது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 2 நிமிடங்களுக்கு பிறகு மஞ்சள் பொடி, தனியா பொடி, சீரகப்பொடி சேர்த்து கிளறவும். 6, 7 நிமிடங்கள் கிளறியபின் வாணலியில் ஒட்டாமல் கெட்டியாக வரும். அந்த சமயத்தில் நெய் சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும். நன்றாக ஆறியப்பிறகு தேன் சேர்த்து நன்றாக கிளறி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ளலாம். கைப்படாமல் இருந்தால் எளிதில் கெடாது.