சத்குரு:

பஞ்சபூத ஸ்தலங்கள்!

நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து அடிப்படையான அம்சங்களுக்காகவும் தனித்தன்மையான கோவில்கள் தென்னிந்தியாவில் ஐந்து இடங்களில் கட்டப்பட்டிருக்கிறது. பஞ்சபூத ஸ்தலங்கள் என்று இவை அழைக்கப்படுகின்றன. பூகோளரீதியாக இவை எல்லாமே தக்காண பீடபூமியில், (Deccan Plateau) தற்போதைய தமிழகத்தில் நான்கும் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன. நீருக்காக திருவானைக்காவல், நெருப்புக்காக திருவண்ணாமலை, காற்றுக்காக காளஹஸ்தி, பூமிக்காக காஞ்சிபுரம் மற்றும் ஆகாயத்திற்காக சிதம்பரம் ஆகிய இடங்களில் இந்த கோவில்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இக்கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும்போது எந்த ஆடம்பர நோக்கத்துடனும் செய்யவில்லை. ஒரு மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ அதை மட்டுமே செய்தார்.

இதில், சிதம்பரம் கோவில் நம்பவே முடியாத அளவுக்கு ஆச்சரியமான ஒரு இடம். கோவிலில் கொஞ்சம் புதிதாக தெரியும் பகுதியானது சுமார் 1000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் கோவிலின் புராதன உட்புறம் எப்போது கட்டப்பட்டது என்பதுபற்றி யாருக்குமே தெரியவில்லை. 3500 ஆண்டுகள் அல்லது அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்று மக்களால் கருதப்படுகிறது. இப்படியாகத்தான் நம் பாரதநாட்டின் கலாச்சாரம் இருந்திருக்கிறது. அன்றைய காலகட்டத்திலேயே மக்கள் எப்படிப்பட்ட கோவில்களை எழுப்பி இருக்கிறார்கள் என்பதை கவனித்து பாருங்கள். ராமேஸ்வரம், சிதம்பரம், மதுரை என்று எந்த கோவிலானாலும் அது பிரம்மாண்டமானதாகதானே இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான வடிவமைப்புகளை உருவாக்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட, அரசனைத் தவிர அப்போது அனைவருமே குடிசையில் வாழ்ந்தவர்கள் தாம். எந்தவிதமான எந்திரங்களோ, வாகனங்களோ, பளு தூக்கும் சாதனங்களோ இல்லாதபோதும், தலைமுறைகளை தாண்டி மக்கள் ஒரே குறிக்கோளுடன் உழைத்திருக்கிறார்கள். கோவிலை உருவாக்குவதற்காகவே வாழ்ந்து மறைந்த அவர்கள் தங்கள் வாழ்க்கையை விட மதிப்பானதாக இந்த கோவில்களை எழுப்புவதை வைத்திருந்தார்கள் தானே.

CERN அராய்ச்சிக் கூடத்தில் நடராஜர்!

சிதம்பரம் கோவிலில், நடனக்கலையின் அரசனாக 'நடராஜன்' எனும் வடிவில் சிவன் இருக்கிறான். 'நடேசன்' அல்லது 'நடராஜன்' சிவன் எடுத்துள்ள குறிப்பிடத்தக்க வடிவங்களில் ஒன்று. நாம் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்றிருந்தபோது CERN என்ற பௌதீக ஆராய்ச்சிக் கூடத்திற்கு சென்றிருந்தோம். அணுக்களை ஒன்றோடு ஒன்று மோதச்செய்வது, பிளப்பது என அணுவை பற்றிய எல்லாவிதமான ஆராய்ச்சிகளும் இங்கேதான் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப்பட்டிருந்தது. ஏனெனில் இப்போது அவர்கள் செய்து வரும் செயல்களுக்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தில் உள்ள வேறுஎதுவும் அருகில்கூட வரவில்லை என்பதை அவர்கள் கண்டுள்ளனர்.

சிதம்பரம் கோவில் எப்படி உருவானது?, Chidambaram kovil eppadi uruvanathu?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நடராஜரின் வடிவம் தென்னிந்தியாவில், அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்தே தோன்றியது. காலமும் எல்லையும் இன்றி நீண்டிருந்த அசைவற்ற தன்மை, தன்னைதானே நடனவடிவில் படைத்துகொண்டு வெளிப்படுத்தும் பேரானந்த களிப்பையே நடராஜர் உருவம் குறிக்கிறது. சிதம்பரம் என்று நீங்கள் அழைப்பது முழுமையான அமைதியில் இருக்கும் அசைவற்ற நிலையே. இங்கே நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ள நடராஜர் குறிப்பால் இதை நமக்கு உணர்த்துகிறார். இங்கே முழுமையான அசைவற்ற தன்மை கோவிலாக குடிகொண்டுள்ளது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இந்த அசைவற்ற தன்மையை கொண்டு வருவதற்காகவே பாரம்பரிய கலைவடிவங்கள் உருவாக்கப்பட்டது. உள்ளுக்குள் அசைவற்ற தன்மை இல்லாமல் உண்மையான கலைத்திறன் வெளிப்படாது.

பதஞ்சலி முனிவர் உருவாக்கிய கோவில்

சிதம்பரம் கோவிலின் ஒரு சிறப்பம்சமாக நடராஜர் இருந்தாலும், ஆகாய தத்துவத்தின் அடையாளமாக வெற்றிடமே மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம் கோவிலை பிரதிஷ்டை செய்தவர் நவீன யோகக் கலையின் தந்தையாக அறியப்படும் பதஞ்சலி முனிவரேதான். யோகாவை அவர் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கெனவே பல்வேறு நிலைகளில் இருந்த யோக முறைகளை அவர் ஒரு தொகுப்பாக முறைப்படுத்தினார். யோக சூத்திரங்களும் அவரால்தான் எழுதப்பட்டன. பதஞ்சலி முனிவரை நீங்கள் ஒரு ஞானமடைந்த உயிராக பார்த்தால், அவர் இன்னொருவரை விட அதிகமாக ஞானம் அடைந்தவரில்லை. அப்படி எதுவும் உண்மையில் இல்லை. தன்னை உணர்தல் என்றால் தன்னை உணர்தல் தான். அவரை ஒரு ஆணாக பார்ப்பதைவிட, அவருடைய பேரறிவையும், உயிர் பற்றிய அவரது விசாலமான புரிதலையும் கவனித்தால், ஒரு மனிதனால் இதுவெல்லாம் சாத்தியம் என்பதையே உங்களால் நம்ப முடியாது. இவர் ஒரு அதிசயமான மனிதராக, கிட்டத்தட்ட மனிதனே இல்லை என்று சொல்லுமளவிற்கு இருந்தார்.

சிதம்பரம் நடராஜரை குறிக்கும் ஓவியம். இடதுபுறம் நடராஜர்-பார்வதி, வலது புறத்தில் வியாக்ரபாதர், பதஞ்சலி.

பதஞ்சலி முனிவர் ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிதம்பரம் கோவிலை உருவாக்கி பிரதிஷ்டை செய்தார். ஏனென்றால் அவர் வெறும் பக்தரல்லர். யோக விஞ்ஞானியுமாவார். எனவே கோவிலை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கும் சரியான வழிமுறைகளை ஏற்படுத்தினார். இதற்காக ஒரு மக்கள் குழுவை குறிப்பிட்ட சாதானாவுடன், ஒருவித ஒழுங்குமுறை மற்றும் கோவிலை பராமரிக்கும் முறையை கற்றுத்தந்து பயிற்சி அளித்தார். அவர்களே பல குடும்பங்களாக பெருகி இன்றும் கோவிலை பார்த்துக் கொள்கிறார்கள். பதஞ்சலி முனிவர் வகுத்துதந்தபடியே பொதுவான நடைமுறைகளும், சடங்குகளும் அவர்களால் இன்றும் கோவில் நடைமுறைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆருத்ரா தரிசனம்

சிதம்பரத்தின் தனிச்சிறப்பில் மார்கழி மாதத்தில் நிகழும் ஆருத்ரா தரிசனமும் ஒன்று. ருத்ரா என்பதற்கு கர்ஜிப்பவர் அல்லது ஒரு வினையால் பொங்குதல் என்று பொருள் -பொங்குதல் என்பதையும் விட கர்ஜனையே பொருந்துகிறது. ஆருத்ரா என்றால் நிலையானது; கர்ஜிக்கும் வகையில்லை.. முற்றிலும் நிலையான ஒன்று. ருத்ரா அசைவையும் படைத்தலையும்கூட குறிக்கும். ஆருத்ரா ஒருவிதமான செயலற்ற தன்மையையும் குறிக்கிறது.

சிதம்பரம் கோவிலின் கட்டிட பகுதிகள் மட்டுமே சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. முற்றிலும் கற்களை கொண்டு அற்புதமாக கோவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது தவிர, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிவந்தங்களாக ( அரசனுக்கு வரிசெலுத்த தேவையில்லை) கோவிலை பராமரிப்பதற்காகவே விடப்பட்டது. ஏராளமான ஆபரணங்களும், நவரத்தின மணிகளும் கோவிலின் சொத்தாக இருந்தன. ஆனால் வெள்ளையர்கள் காலத்தில் கோவில்களின் பெருஞ்சொத்துக்காகவே தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இப்போது அந்த நகைகள் எல்லாம் மாயமாகி விட்டது. இரண்டாவது உலகப் போரை நடத்த ஏற்பட்ட செலவில் பெரும்பகுதி இந்திய கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்திலிருந்து தான் ஈடுகட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கோவில் நிலங்களும் பல்வேறு வகையில் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டதால் இப்போது இக்கோவில் ஏழையாகி அத்தியாவசிய பராமரிப்பு பணிகளையே நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது.

கோவிலை பராமரிக்கும் குடும்பங்கள்

இன்று இந்த கோவில் நிர்வாகத்தைக் கொண்டு செல்லவும், சடங்குகள் மற்றும் பூஜைகளை நிறைவேற்றுவதற்காகவும் 360 குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களுக்கான வருமானம் இக்கோவிலில் இருந்துதான் பெறப்படுகின்றது. ஆனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டுதான் பராமரிப்புப் பணியை செய்து வருகிறார்கள். பலவும் அவர்களின் கையை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காய்கறிகளில் இருந்து இயற்கையாக கிடைக்கும் வண்ணங்களை பயன்படுத்தி கோவில் மேற்கூரையில் வரைந்த பழமையான சித்திரங்களில் 60 சதவீதம் இப்போது இல்லை. சாந்து பொருட்களும் விழுந்து வருகிறது. இதை மீண்டும் சரிசெய்யவும் யாருமில்லை. போதிய கவனம் இல்லாமல் முழுவதும் கற்களை கொண்டு கட்டப்பட்ட இந்த கோவிலினுள் ஆங்காங்கே கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டதன் விளைவாக கோவிலின் அழகமைப்பும் ஷக்தி செயல்படும் விதமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும்போது எந்த ஆடம்பர நோக்கத்துடனும் செய்யவில்லை. ஒரு மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ அதை மட்டுமே செய்தார். அந்த இடம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு அதே புனிதத் தன்மையுடன் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார், நாமும் அவ்வாறே விரும்புகிறோம். இதற்காக கோவிலைச் சுற்றியுள்ள கடைகளை அப்புறப்படுத்தி முன்பு இருந்தது போல கோவிலை பராமரிக்க நிறைய செலவாகும். மேற்சொன்ன நோக்கத்துடன் வியாபார ஸ்தலங்களையும், விடுதிகளையும் வேறு இடங்களுக்கு மாற்றி அமைக்க முடியுமா என்று ஆலோசனை செய்து வருகிறோம். எனினும் இது ஆரம்ப திட்ட அளவிலேயே உள்ளது. இதற்காக எந்த பெரிய நிறுவன (corporate) மாவது முன் வருவார்களா என்றும் பார்க்கிறோம். ஏனெனில் சிதம்பரம் நடராஜர் கோவிலை முன்பிருந்ததைப் போல ஆன்மீகத் துடிப்புள்ள சக்திமிக்க ஸ்தலமாக மீட்க முடிந்தால் அது மகத்தான முன்னேற்றத்தை கொண்டு வரும்.

புனித ஸ்தலங்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது?

நாம் வாழும் இடம் 10,000 சதுர அடிகளாகவோ அல்லது 1000 சதுர அடிகளாகவோ இருந்தால் அதில் பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியப் போவதில்லை. ஆனால் சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்திற்கு அருகே இருப்பதென்பது ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை உங்கள் வாழ்க்கையில் கொண்டுவரும். இதை மனதில் கொண்டுதான் பாரத கலாச்சாரத்தில் குடியிருப்புகளை இப்படி அமைத்தார்கள் : 25 வீடுகள் இருந்தால் அங்கே ஒரு கோவில் இருக்க வேண்டும். நீங்கள் அங்கே போனாலும் சரி போகவில்லை என்றாலும் சரி, நீங்கள் வழிபட்டாலும் சரி, வழிபடாவிட்டாலும் சரி, உங்களுக்கு மந்திரம் தெரியுமா என்பதும்கூடமுக்கியமல்ல. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு ஷணமும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு இடத்தில் இருக்கவேண்டும்.

இக்கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும்போது ஆடம்பரத்துக்காக என்று அவர் எதையும் செய்யவில்லை. ஒரு மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ அதை மட்டுமே செய்தார். அந்த இடம் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு அதே புனிதத் தன்மையுடன் தொடர்ந்து மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார், நாமும் அவ்வாறே விரும்புகிறோம். கோவிலை புனரமைப்பதுடன் அதன் சுற்றுப்புறத்தையும் சரிசெய்ய வேண்டியிருக்கிறது. ஷக்தி அதிர்வு மிக்க வளாகத்தினுள் எல்லாவிதமான வியாபாரங்களுடன் கூச்சலும் குழப்பமுமாக இருப்பது அந்த இடத்தின் தன்மையையே சீர்குலைப்பதாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு வியாபார ஸ்தலங்களையும், விடுதிகளையும் சரியானபடி மாற்றி அமைக்க முடியுமா என்று ஆலோசனை செய்து வருகிறோம். எனினும் இது ஆரம்ப திட்ட அளவிலேயே உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவிலை முன்பிருந்ததைப் போல ஆன்மீகத் துடிப்புள்ள சக்திமிக்க ஸ்தலமாக மீட்க முடிந்தால் அது மகத்தான முன்னேற்றத்தை கொண்டு வரும்.

வாழ்வின் இந்த பரிமாணம் குறித்த அளப்பரிய ஞானம் எப்போதும் நிலையாக, அதிலும் குறிப்பாக நமது கலாச்சாரத்தில் இருந்து வந்துள்ளது. இதுவே அனைத்திலும் உயர்வானதாக இருந்தது. நாம் என்ன உண்கிறோம், எப்படி வாழ்கிறோம், எத்தனை நாள் உயிரோடு இருக்கிறோம் என்பதையெல்லாம் தாண்டி படைப்பின் மூலத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற தேவை உங்கள் வாழ்வில் ஒருநாள் ஏற்படும். தேடல் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் படைப்பின் மூலத்தோடு தொடர்பு கொள்ளக்கூடிய சாத்தியம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்கத் தவறினால், தேடல் உள்ள ஒரு மனிதருக்கு அந்த சாத்தியத்திற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது உண்மையில் மனிதனின் நல்வாழ்வை ஏற்படுத்த தோற்றுவிட்ட ஒரு சமுதாயமாகவே இருக்கும்.