செம்பின் கிருமி எதிர்க்கும் இயல்பு குறித்து மருத்துவ சமூகம் பெரிதும் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த பக்கத்தில் சத்குரு, தண்ணீரை சரியான முறையில் சேமித்து வைப்பதன் முக்கியத்துவத்தையும், எப்படி செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அருந்துவது நம் உடலில் உள்ள பல்வேறு நச்சு பொருட்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது பற்றியும் யோக கலாச்சாரத்தின் பார்வையில் சொல்கிறார் சத்குரு.

சத்குரு:

நான் என்று நீங்கள் குறிப்பிடுவது, மனித உடல் என்று நீங்கள் குறிப்பிடுவது அடிப்படையில், இது ஒரு மென்பொருள் செய்த வேலை. இந்த மென்பொருள் என்றால் இன்று நினைவாற்றல் என்று நமக்கு தெரியும். தனிமனித உடல் என்றாலும், பெரிதான பிரபஞ்ச உடல் என்றாலும் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றால் ஆனது. இவை ஒவ்வொன்றுக்கும், தனி நினைவாற்றல் இருக்கிறது. அதனால்தான் இவை எந்த விதமாக இயங்குகிறதோ, அந்த விதமாக இயங்குகிறது.

தண்ணீரை செம்பு பாத்திரத்தில் இரவே அல்லது குறைந்தது நான்கு மணி நேரமாவது சேமித்து வைத்தால் செம்பில் இருந்து ஒரு இயல்பை நீர் பெறுகிறது.

கடந்த சில வருடங்களில் பல பரிசோதனைகள் நிகழ்ந்து, அதன் அடிப்படையில் தண்ணீருக்கு நினைவாற்றல் இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர். எதை தொட்டாலும் நீர் அதை நினைவில் வைத்துக் கொள்கிறது. இந்த கலாச்சாரத்தில் இதை நாம் அறிந்து இருந்ததால் இதை பல விதத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறோம். நம் பாட்டிகள் சும்மா யாரிடம் இருந்தும் தண்ணீரும், உணவும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று சொல்லி வந்திருக்கின்றனர். நம் மீது அன்பும் அக்கறையும் உள்ளவர்களிடம் இருந்து மட்டுமே இவற்றை பெற வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளனர். கோவில்களில் ஒரு சொட்டு நீர்தான் கொடுப்பார்கள். அதை பெற கோடீஸ்வரர்களும் போராடுவார்கள். ஏனென்றால் அதை நீங்கள் எங்கேயும் விலை கொடுத்து வாங்க முடியாது. நீர்தான் தெய்வீகத்தை தன் நினைவில் வைத்திருக்கிறது. தீர்த்தம் என்பது அதுவே. தங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை நினைவுபடுத்துவதால் மக்கள் அதை அருந்த விரும்புகின்றனர். எந்த விதமான நினைவை சுமந்து இருக்கிறது என்பதை பொறுத்து அதே தண்ணீர் விஷமாகவும் இருக்க முடியும், வாழ்வின் அமிர்தமாகவும் இருக்க முடியும்.

எனவே நீருக்கு நினைவு இருப்பதால் நாம் அதை எப்படி சேமித்து வைக்கிறோம் என்பதில் கவனமாக இருக்கிறோம். தண்ணீரை செம்பு பாத்திரத்தில் இரவே அல்லது குறைந்தது நான்கு மணி நேரமாவது சேமித்து வைத்தால் செம்பில் இருந்து ஒரு இயல்பை நீர் பெறுகிறது. இது குறிப்பாக உங்கள் ஈரலுக்கும், பொதுவாக உங்கள் உடல்நலத்திற்கும், சக்திக்கும் நல்லது. முரட்டுத்தனமாக இறைத்து உங்கள் வீட்டுக்கு ஈயம் அல்லது பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் பல வளைவுகள், திருப்பங்கள் கடந்து வரும்பொழுது தண்ணீரில் பல எதிர்மறை நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த குழாய் நீரை ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட்டால் இந்த எதிர்மறை விஷயங்கள் தானாக விலகி விடும்.

என்னை போல் அதிகம் பயணம் செய்பவராக இருந்தால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லையென்றால், குறைந்த அளவு விஷம் உங்கள் உடலில் பல விதத்தில் உள்ளே நுழைகிறது. செம்பு இந்த விஷயத்தை கவனித்துக் கொள்ளும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.