சிபிஐக்கு விண்ணப்பித்த நாய் !
சத்குரு சொல்லும் குட்டிக் கதைகளிலிருந்து இரு கதைகள் இங்கே உங்களுக்காக! சிபிஐ-யில் வேலைக்கு சேர தேர்வு எழுதிய போலீஸ் நாயைப் பற்றியும், இத்தாலியை ஆண்ட முசோலினிக்கு நடந்த சம்பவத்தைப் பற்றியும், இதில் கதையாக நாம் கேட்கலாம்!
சத்குரு சொல்லும் குட்டிக் கதைகளிலிருந்து இரு கதைகள் இங்கே உங்களுக்காக! சிபிஐ-யில் வேலைக்கு சேர தேர்வு எழுதிய போலீஸ் நாயைப் பற்றியும், இத்தாலியை ஆண்ட முசோலினிக்கு நடந்த சம்பவத்தைப் பற்றியும், இதில் கதையாக நாம் கேட்கலாம்!
Subscribe
சத்குரு:
தேர்வில் வெற்றி பெற்ற நாய்
ஒரு நாய் பலவகை பயிற்சிகளை கற்றுத் தேர்ந்திருந்தது. சிபிஐ-யில் பணிபுரிய ஒரு பயிற்சி நாய் தேவைப்படுகிறது என ஒரு செய்தித்தாளில் வந்திருந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அந்த நாய் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியது. பிறகு நடந்த அனைத்து எழுத்துத் தேர்வுகளிலும் அது நல்ல முறையில் தேறியது. பிறகு அதற்கு தட்டச்சுத் தேர்வு வைக்கப்பட்டது. ஒரு நிமிடத்திற்கு 60 வார்த்தைகள் டைப் செய்தால் போதும் என்ற நிலையில் அந்த நாய் ஒரு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் டைப் செய்தது. அந்த நாய் பல வகைகளிலும் திறமைசாலியாக இருப்பதைப் பார்த்த அதிகாரிகள், இன்னமும் ஒரு தகுதியை நீ பூர்த்தி செய்தால் உனக்கு வேலை தந்துவிடுகிறோம் என்றனர். என்ன என்றது அந்த நாய். இந்தப் பணியில் நீ சேர வேண்டுமானால் உனக்கு 2 மொழிகள் பேசத் தெரிந்திருக்க வேண்டும், உனக்குத் தெரியுமா என்றார். உடனே அந்த நாய் தலையாட்டிக் கொண்டே, 'மியாவ்' என்றது.
பிறகு எப்படி ஒட்டும்?
இத்தாலிய நாட்டின் சர்வாதிகாரியான முசோலினியின் ஆட்சி காலத்தில், அங்கு ஓடிய ரயில்கள் சரியான நேரத்துக்கு வராமல் இருந்ததற்காக சில ரயில் வண்டி ஓட்டுனர்களை அவர் சுட்டுத் தள்ளிவிட்டார். அன்றிலிருந்து அந்நாட்டின் சரித்திரத்திலேயே முதன் முறையாக அனைத்து ரயில்களும் சரியான நேரத்துக்கு ஓடத் துவங்கி விட்டன. இதைப் பார்த்து பூரித்துப் போன முசோலினி, தன்னுடைய இந்த சாதனையை பாராட்டும் விதமாக, தன் புகைப்படத்துடன் கூடிய அஞ்சல் தலையை வெளியிட்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் எழுந்தது. தபால்காரர்களின் பைகளுக்குள் இந்த அஞ்சல்தலைகள் மட்டும் தபாலிலிருந்து பிய்ந்து விழுந்து குவியல், குவியல்களாகக் கிடந்தன. இந்த அஞ்சல்தலைகள் மட்டும் தபால்களின் மேல் சரியாக ஒட்டவே இல்லை. இது முசோலினியின் கவனத்துக்கு வந்தபோது, தன் நாட்டின் தலைமை அஞ்சல் அதிகாரியைக் கூப்பிட்டு, ‘ஏன் நீங்கள் அஞ்சல்தலைக்குப் பின்னால் நன்றாக ஒட்டுகிற பசையைப் பயன்படுத்தவில்லை?’ என்று கேட்டார். அதற்கு அந்த தலைமை அஞ்சல் அதிகாரி பயத்தில் நடுங்கிக் கொண்டே சொன்னார், ‘நாங்கள் சிறந்த வகையான பசையைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் மக்கள் தபால்தலையின் பின்பக்கத்தில் எச்சில் துப்பி ஒட்டுவதற்கு பதிலாக, முன்பக்கத்தில் எச்சில் துப்பி ஒட்டி வைத்துவிடுவதால், அது சரியாக ஒட்டுவதில்லை.’