பக்தியாளருக்கு ஈஷா யோகா வேலை செய்யுமா?
ஈஷா யோக மையத்தில் எந்த வித யோகா மக்களுக்கு கற்றுத் தரப்படுகிறது? ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்களாக இருக்கும்போது, இங்கே கற்றுத்தரப்படும் ஒரே விதமான யோகா எல்லோருக்கும் எப்படி வேலை செய்யும்? தெரிந்துகொள்வோம்...
ஈஷா யோக மையத்தில் எந்த வித யோகா மக்களுக்கு கற்றுத் தரப்படுகிறது? ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர்களாக இருக்கும்போது, இங்கே கற்றுத்தரப்படும் ஒரே விதமான யோகா எல்லோருக்கும் எப்படி வேலை செய்யும்? தெரிந்துகொள்வோம்...
Subscribe
சத்குரு:
பக்தியாளர், ஞானத்தில் இருப்பவர், கிரியப் பாதையில் இருப்பவர், கர்மப்பாதையில் இருப்பவர் என்றெல்லாம் யாரும் இல்லை. உணர்ச்சிகளைப் பயன்படுத்தி உங்களது உச்சபட்ச தன்மையைத் தேடினால் அதற்கு பக்தி என்கிறோம். அதே உச்சபட்ச தன்மையை உங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தித் தேடினால் ஞானம் என்கிறோம். உடலைப் பயன்படுத்தி உச்சபட்ச தன்மையை அடைய நினைத்தால் அதற்கு கர்மயோகா என்கிறோம். உங்களுடைய உள்நிலை சக்திகளில் மாற்றம் எடுத்துவருவதன் மூலமாக உச்சநிலையை அடைய நினைத்தால் அதனை கிரியா யோகம் என்கிறோம். எனவே இந்த நான்கு வழிகள் மட்டுமே உள்ளன. ஏனென்றால் இந்த நான்கு மட்டுமே உங்களைப் பொறுத்தவரை நிதர்சன உண்மைகள். மற்றவையெல்லாம் உங்கள் கற்பனை தான்.
உங்களுடைய கடவுள், உங்களுடைய கருத்துக்கள், உங்களுடைய அபிப்ராயங்கள், உங்களுடைய சாத்தான் இவையெல்லாமே வேறு யாரோ உங்களுக்கு சொல்லித் தந்தவை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திகள் மட்டுமே. நீங்கள் எங்கே சென்றடைவதாக இருந்தாலும் இந்த நான்கை மட்டுமே பயன்படுத்தி சென்றடைய முடியும். ஞானம், பக்தி, கர்மா, க்ரியா என்றால் தலை, இதயம், கைகள், மற்றும் சக்தி. இந்த உலகில் யாரேனும் தலை மட்டும் இருந்து இதயமோ, கைகளோ இல்லாமல் இருக்கிறார்களா? அல்லது யாரோ ஒருவருக்கு இதயம் மட்டும் இருக்கிறது மற்றவை இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த நான்கும் சேர்ந்த கலவைதான் நீங்கள். யாரோ ஒரு மனிதருக்கு அவருடைய தலையின் ஆதிக்கம் அதிகமாய் இருக்கலாம். மற்றொருவருக்கு அவருடைய இதயம் ஆதிக்கமாய் இருக்கலாம். இன்னொருவருக்கு அவரது கைகள் ஆதிக்கமாய் இருக்கலாம். ஏதோ ஒன்றோடு மட்டும் யாரும் இல்லை. எனவே இந்த நான்கும் சேர்ந்த கலவை இல்லாவிட்டால் அந்த மனிதனுடைய வளர்ச்சி சரியானதாக இருக்காது.
நாம் செய்வது என்னவென்றால் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவருக்கு ஏற்ற கலவையைக் கலந்து தருகிறோம். ஒரு மனிதர் முழுவதும் செயலில் ஈடுபாடு உடையவராக இருப்பார். அவரிடம் நீங்கள் கண்ணை மூடி அமரச் சொன்னால் அவருக்குப் பைத்தியமே பிடித்துவிடும். எனவே ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறு விதமான ஆதிக்கத்தில் இருக்கிறார்கள். அதற்கு ஏற்ற கலவையை அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். அதனால்தான் இந்த கலாச்சாரத்தில் வாழ்கின்ற குருவின் முக்கியத்துவம் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் அவர் மிகச் சரியான கலவையை உங்களுக்குத் தருகிறார். தவறானவற்றை தந்தால் அது உங்களுக்கு
வேலை செய்யாது.