Question: 'ஈஷா யோக மையம், கிராமப் புத்துணர்வு இயக்கத்தில் இவ்வளவு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறதே, உங்களுக்கு ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா?

சத்குரு:

'ஈஷா யோக மையம், கிராமப் புத்துணர்வு இயக்கத்தில் இவ்வளவு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறதே, உங்களுக்கு ஏதாவது அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா?' என்று என்னை ஓர் இளைஞன் கேட்டார்.

எனக்கு அந்தக் கேள்வி வேடிக்கையாகவும் இருந்தது. வேதனையாகவும் இருந்தது.

எல்லாவற்றிலும் உங்களுக்கான ஆதாயத்தை மட்டுமே தேடிக் கொண்டு இருந்தால், மனதுக்குள் சாத்தானை அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

'வீட்டுக்குப் போய் உங்கள் தாயிடம் கேளுங்கள்... உங்களைப் பெற்றெடுத்தபோது பால் கொடுத்தாளே, அதற்கு என்ன உள்நோக்கம் என்று? அதே உள்நோக்கம்தான் எனக்கும்!" என்று அந்த இளைஞரிடம் சொன்னேன்.

அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ஆதாயம் இல்லாமல், உள்நோக்கம் இல்லாமல் எதையும் செய்யத் தயாராக இல்லாதவர்களால் இந்த சமூகம் நிரம்பிவிட்டது. அதனால், யாவற்றையும் சந்தேகத்துடன் பார்ப்பதற்கே சமூகம் பழகிவிட்டது.

வாழ்க்கையை கணத்துக்குக் கணம் முழுமையாக அனுபவித்து வாழ வேண்டுமானால், குறைவற்ற அன்பைச் செலுத்திப் பாருங்கள். மாறாக, வாழ்க்கையைக் கொடுக்கல், வாங்கலாக மட்டுமே பார்க்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உங்கள் நிம்மதி தொலைந்துவிடும்!

எல்லாவற்றிலும் உங்களுக்கான ஆதாயத்தை மட்டுமே தேடிக் கொண்டு இருந்தால், மனதுக்குள் சாத்தானை அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சாத்தானின் சாமர்த்தியமான வியாபாரம்!

தேவாலயத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் அன்பின் மேன்மையைப் பற்றி போதனை செய்யும் ஒரு பாதிரியார் தெருவில் சென்று கொண்டு இருந்தார். வழியில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடிப்பதைப் பார்த்தார். பதறிப்போய் அவரைப் புரட்டியவர், திடுக்கிட்டார்.

அங்கே உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தது வேறு யாருமல்ல. கொடிய சாத்தான்!

பாதிரியார் சட்டென்று பின் வாங்கினார். "என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்று சாத்தான் மன்றாடியது.

"என்னது உன்னைக் காப்பாற்றுவதா? உன்னை இந்த உலகிலிருந்து விரட்டுவதற்குத்தானே அத்தனை பாதிரியார்களும் ஓயாமல் போராடிக் கொண்டு இருக்கிறோம்!"

"பகைவனையும் நேசி என்றுதானே உங்கள் ஏசு சொல்லியிருக்கிறார்? அதை மறந்து விட்டீர்களா?"

"சாத்தான் வேதம் ஓதலாம். ஆனால், அதைக் கேட்டு ஏமாற நான் தயாராக இல்லை" என்று பாதிரியார் வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

"எனக்காகச் சொல்லவில்லை. உங்களுக்காகத்தான் சொல்கிறேன். என்னைக் காப்பாற்றவில்லை என்றால், இழப்பு உங்களுக்குத்தான். சாத்தான் என்று ஒன்று இல்லாவிட்டால், கடவுளைத் தேடி யார் வருவார்கள்?"

பாதிரியார் மனதில் போராட்டம் துவங்கியது.

"யோசியுங்கள். தேவாலயத்துக்கு மக்கள் வருவதை நிறுத்திவிட்டால், உங்கள் பிழைப்பு என்ன ஆகும்?"

அதற்குமேல் பாதிரியார் தயங்கவில்லை. சாத்தானை அள்ளிப் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

பாதிரியாரைக்கூட மசியவைக்கும் கொடுக்கல், வாங்கல்தான் சாத்தானின் சாமர்த்தியமான வியாபாரம்!

வாழ்க்கையைக் கொடுக்கல், வாங்கலாக மட்டுமே பார்ப்பீர்களானால், உங்கள் மனதை சாத்தான் வசம் ஒப்படைத்துவிடுவீர்கள் என்று அர்த்தம். அப்புறம் உள்ளும், வெளியும் நரகம்தான் போராட்டம்தான்!

உங்களுக்கு மரியாதை கொடுப்பது என்பது, நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான வியாபாரி என்பதில் அல்ல. நீங்கள் எந்த அளவுக்கு மனிதத்தன்மையுடன் நடந்து கொள்கிறீர்கள் என்பதில்தான்!

சங்கரன்பிள்ளையின் இன்ஷூரன்ஸ்

சங்கரன்பிள்ளையின் தானியக் களஞ்சியத்தில் தீ விபத்து ஏற்பட்டு, அங்கு சேமித்து வைத்திருந்த தானியங்கள் எல்லாம் சாம்பலாகிவிட்டன.

சங்கரன்பிள்ளை துக்கத்தை மறக்க மது கடைக்குப் போனார். அவர் மனைவியோ இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குக் கோபத்துடன் போனாள். மேனேஜரின் அறையில் புயல்போல் நுழைந்தாள். "எங்கள் தானியக் கிடங்கை ஐந்து லட்சத்துக்கு இன்ஷுர் செய்திருக்கிறோம். அந்தப் பணத்தை உடனே எண்ணி வையுங்கள்" என்று சத்தம் போட்டாள்.

"அம்மணி, நீங்கள் என்ன தொகைக்கு காப்பீடு எடுத்திருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. உண்மையிலேயே, அதற்கு அந்த மதிப்பு உண்டா என்பதைத் தீர்மானித்துவிட்டுதான், நாங்கள் பணத்தை செட்டில் செய்வோம்" என்றார் மேனேஜர்.

சங்கரன்பிள்ளையின் மனைவி யோசித்தாள். "அதுதான் இங்கே விதிமுறை என்றால், என் கணவர் மீது எடுத்திருக்கும் இன்ஷுரன்ஸை உடனே ரத்து செய்யுங்கள்" என்றாள்.

மறக்காதீர்கள்... உங்கள் உண்மையான மதிப்பு, வெளியில் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமானவராகச் சித்திரிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதில் இல்லை. உள்ளுக்குள் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதில்தான் இருக்கிறது!

உங்களுக்கு ஆதாயம் என்பதற்காக அடுத்தவரைச் சுரண்ட நினைத்தால் அதற்கான சாமர்த்தியங்களைப் பயன்படுத்துவதில் உங்களைத்தான் எரித்துக் கொள்வீர்கள்.

அதை விடுத்து, நீங்கள் என்ன தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் அடுத்தவர் மீதிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு சாதனமாக அதை அமைத்துப் பாருங்கள். வெற்றியுடன் அமைதியும், ஆனந்தமும் உங்களைத் தேடிவரும்.