இந்த வார சத்குரு ஸ்பாட்டில், மாறுபட்டதொரு கோணத்தில் அன்பு குறித்து தெளிவு தருவதுடன், "அன்பு" என்ற தலைப்பில் ஒரு கவிதையும் எழுதியுள்ளார் சத்குரு. அதோடு சமீபத்தில் டம்பா, ஃபிளாரிடாவில் சத்குரு நடத்திய இன்னர் எஞ்ஜினியரிங் நிகழ்ச்சியின் புகைப்படங்களையும் தொகுத்துள்ளோம்.

அன்பு என்பது அழகானது. உங்கள் உணர்வுகளை வைத்து நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயமது. உங்கள் உணர்வுகள் எப்போதும் அது இருக்கக்கூடிய மிக இனிப்பான நிலையில் இருக்கவேண்டும். ஆனால் நீங்கள் அதன் எல்லைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களை யாரோ ஒருவர் எவ்வளவு நேசித்தாலும், அது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. அவர்கள் உங்கள் நண்பராக, கணவராக, மனைவியாக, பெற்றோராக, குழந்தைகளாக என்று யாராக இருந்தாலும், எல்லோருக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது. அந்த கோட்டை நீங்கள் தாண்டிவிட்டால், அன்பு மறைந்துவிடும். அது நிபந்தனைகளுக்கு உட்பட்டது, அதில் தவறேதும் இல்லை. அன்பு என்பது பொறுப்பாக நடத்தப்பட வேண்டும், இல்லாவிட்டால் அது நிலைக்காது. அன்பு என்பது மலரைப் போன்றது. உங்கள் கைகளில் ஒரு மலர் இருந்தால், நீங்கள் கவனமாக நகரவேண்டும். அன்பு உயிரோடு இருக்கவேண்டும் என்றால் பல நிபந்தனைகளை பூர்த்திசெய்யத் தேவையிருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எதுவும் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சொந்தமாக இருந்தாலொழிய, உங்களால் அதனை இப்போது அன்பாகப் பார்க்கமுடிவதில்லை. ஏதோவொன்றை சொந்தமாக்கிக் கொள்ளும் ஏக்கம், ஒருவித பற்றாக்குறையிலிருந்து வருகிறது. உங்களுக்கு ஏதோவொன்று சொந்தமாக இருக்க வேண்டியிருக்கிறது, இல்லாவிட்டால் நீங்கள் மனக்கவலையில் ஆழ்ந்துவிடுவீர்கள். ஏதோவொன்றை சொந்தமாக்கிக் கொண்டால்தான் உங்கள் உணர்வுகள் இனிப்பாக இருக்கின்றன. யாருமே இல்லை என்றாலும் நீங்கள் அன்பாக இருக்கமுடியும். உங்கள் உணர்வுகளின் மையப்பகுதி அன்பாக இருக்கமுடியும். பிரபஞ்சத்தின் மையப்பகுதி அன்பு என்று நினைக்காதீர்கள், அன்பென்பது கிடைக்காமல் தவிப்பவர்கள்தான் கடவுள் என்றால் அன்பு அல்லது பிரபஞ்சத்தின் மையம் அன்பு என்றெல்லாம் கற்பனை செய்வார்கள். அது அப்படியல்ல.

அன்பு என்பது மனித உணர்வு. மனிதர்கள் பாரபட்சமின்றியும் திறந்தநிலையிலும் இருக்கும் ஒரு கணத்தில், அவர்கள் எவரையும் அன்புடன் காண்பார்கள். பெரும்பாலான மனிதர்கள் பெரும்பாலான சமயங்களில் தங்களைப் பற்றி இறுமாப்புடன் இருக்கிறார்கள். அவர்கள் அன்பை உணரவேண்டும் என்றால், அவர்கள் கண்முன் இருக்கும் ஒருவருடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுடைய தந்தை, தாய், குழந்தை, அல்லது வேறு யாருடனாவது அவர்கள் ஏதோவொரு விதத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். நான் இதை அசிங்கமானதாக சித்தரிக்க முயலவில்லை. அன்பென்பது உங்களுக்குள் நிகழும்போது மிக அழகானது. அன்பின் பெயரில் மற்றவர்கள் உங்களுக்குச் செய்வது அவர்களுக்கு அழகாக இருக்கிறது. அதை நீங்கள் பாராட்டலாம். முக்கியமானது பிறர் உங்களை நேசிப்பதல்ல, நீங்கள் அன்பாக இருப்பது. யாரோ ஒருவர் அன்பான நிலையில் நடந்தால்கூட, அது அற்புதமானது. மனிதர்கள் அகங்காரத்துடன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடப்பதைக் காண்கிறேன், ஆனால் என்னைக் கண்ட மறுகணமே அவர்கள் திடீரென பணிந்து வணங்குவார்கள். இப்படிச் செய்வதால் எந்த பிரயோஜனமுமில்லை. இதுதான் உங்களுக்குள் மாறவேண்டும்.

பக்தியில் எல்லாவற்றையும் கண்டு தலைவணங்கினால், உங்களுக்கு அற்புதமான ஒன்று நடந்திருக்கிறது என்று அர்த்தம். இல்லாவிட்டால் நீங்கள் முன்முடிவுகளுடன், ஒன்றை உயர்வாகவும் இன்னொன்றைத் தாழ்வாகவும் பார்க்கிறீர்கள். அன்பும் வெறுப்பும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள், அது வேறெப்படியும் இருக்கமுடியாது. அதன் ஒருபக்கம் விழுந்தால் நேசம் பிறக்கும். இன்னொரு பக்கம் விழுந்தால் வெறுப்பு கொப்பளிக்கும். நீங்கள் அன்பாய் மாறினால் அது உங்களுக்கு அற்புதமாக இருக்கிறது. அது உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அற்புதமாக இருக்கிறது, ஏனெனில் உங்களுடன் இருப்பது அவர்களுக்கும் அழகான அனுபவமாக இருக்கிறது. நோய்த்தொற்றைப் போல அன்பு அவர்களையும் தொற்றிக்கொள்ளலாம். நீங்கள் அன்பாக மாறினால், நீங்கள் என்ன செய்தாலும், உங்களுடன் இருப்பவர்கள் அதை சரியாக எடுத்துக்கொள்வார்கள். எங்கோ அது உங்களுக்குள் சரியான இடத்திலிருந்து வருகிறது. இல்லாவிட்டால், நல்ல விஷயங்களாக கருதப்படுபவை கூட உங்களுக்குக் கெட்டதாக மாறிவிடும்.

அன்பென்பது நீங்கள் செய்யும் செயலல்ல. அன்பு என்பது நீங்கள் இருக்கும் நிலை. அன்பு என்றால் உணர்வின் இனிமை உங்களுக்குள் வந்துவிட்டது என்று அர்த்தம். ஒரு பாத்திரத்தை நீங்கள் எடுத்தாலும் அதை அன்பாகச் செய்வீர்கள். நீங்கள் இன்னொருவரைத் தொட்டாலும் அன்பாகத் தொடுவீர்கள். உங்களைச் சுற்றி எவரும் இல்லாவிட்டாலும் இங்கு அன்பாக அமர்வீர்கள். அன்பு குறித்த உங்கள் கருத்தை நீங்கள் மாற்றவேண்டும். அன்பென்பது இன்னொருவரைப் பற்றியதல்ல, அது உங்களைப் பற்றியது. உங்களுக்குள் உள்ள உணர்வின் இனிமையால், உங்கள் வாழ்க்கை அழகாகிறது. என்ன நடந்தாலும் சரி, வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும், உங்கள் வாழ்க்கை இனிப்பாக இருக்கும்.

அன்பு

பலர் நினைப்பது போல அன்பென்பது
ஒரு உணர்வு மட்டுமல்ல
நம் எண்ணத்தையும் உணர்வையும்
அனைத்தையும் ஒதுக்கிவைப்பதன்
வெறுமையிலிருந்து அரவணைத்து
வாழ்வதன் அறுவடைக்கு
வழிநடத்தும் தண்டவாளமது.
அன்பென்பது ஒரு பந்தம் மட்டுமல்ல
எல்லையில்லாததன் எல்லைக்கு
மிதந்து செல்லச்செய்யும் மிதவை

Love & Grace