சத்குரு:

இன்று பலரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? ஆன்மீகப் பாதையில் சென்று அமைதியை நாட வேண்டுமென்றால் ஏதாவதொரு மலையின் குகைக்குப் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறார்கள். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அமைதியாயிருக்க மலைக்குப் போகிறீர்கள் என்றால், மலை அமைதியாயிருப்பதாக அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாயிருப்பதாக அர்த்தமல்ல. இரைச்சல் மிகுந்த சந்தைக்கு நடுவிலும் அமைதியாயிருக்க முடிந்தால்தான், அந்த அமைதி உங்களுடையது என்று அர்த்தம்.

அமைதியாயிருக்க மலைக்குப் போகிறீர்கள் என்றால், மலை அமைதியாயிருப்பதாக அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாயிருப்பதாக அர்த்தமல்ல. இரைச்சல் மிகுந்த சந்தைக்கு நடுவிலும் அமைதியாயிருக்க முடிந்தால்தான், அந்த அமைதி உங்களுடையது என்று அர்த்தம்.

எனவே, வெளிச்சூழலில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் சரி, அதற்கும் உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீங்கள் ஒரு மேலாளராக இருக்கலாம், குடும்பத்தலைவியாக இருக்கலாம், கசாப்புக் கடைக்காரராகக் கூட இருக்கலாம். அந்த நிலையில் இருந்தபடியே ஆன்மீக வளர்ச்சிக்கு உள்நிலையில் தேவையானவற்றை நீங்கள் செய்து கொண்டிருக்கலாம். உங்கள் வெளிச்சூழலுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஒருமுறை கௌதம புத்தர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். பத்துப் பதினைந்து பேர் அவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக ஏசத் தொடங்கினார்கள். காது கொடுத்து கேட்க முடியாத அளவு கடுமையான வசவுச் சொற்கள். அனைத்தையும் புத்தர் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டார். அவர்கள் சொன்ன எதையும் அவர் புறக்கணிக்கவில்லை. முழு விழிப்புணர்வோடு எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் பிறகு சொன்னார். "இன்று மாலை இதே வழியாகத்தான் வருவேன். நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் சொல்லலாம்". இந்தத் தன்மையில் இருக்கிற மனிதரை உங்களால் என்ன செய்ய முடியும்?

அச்சத்தின் காரணமாக புத்தர் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர் குரல் கொடுத்தால் ஓடோடி வர ஆயிரம் பேர் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால், தன் வாழ்க்கைமுறை இப்படித்தான் என்று அவர் தீர்மானித்துவிட்டார். அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதென்பது அவர் எடுத்த முடிவு. நீங்கள் அவரை என்ன செய்தாலும் சரி, அமைதியையும் ஆனந்தத்தையும் விட்டுவிட்டு உங்கள் வழிக்கு அவர் திரும்ப மாட்டார்.

அறிவார்ந்த மனிதர் இப்படித்தானே இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி இல்லை. யாராவது உங்களை ஒருபக்கம் பிடித்துத் தள்ளினால் தள்ளின பக்கம் போவீர்கள். இன்னொருவர் உங்களை ஒருபக்கம் இழுத்தால், இழுத்த இழுப்பிற்குச் செல்வீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வது என்று நீங்கள் தீர்மானித்ததாகத் தெரியவில்லை. அப்படித் தீர்மானித்திருந்தால் யாரோ, ஒரு முட்டாள் எதையாவது செய்தால், நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். அமைதியாக இருப்பீர்கள். ஆனால் அப்படியா இருக்கிறீர்கள்? யாராவது ஒரு முட்டாள் எதையாவது செய்தால் அங்கேயே, அந்த இடத்திலேயே எதையாவது செய்து, அவரைவிடப் பெரிய முட்டாள் நீங்கள் என்று நிரூபிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையை நிறைவான முறையில் நடத்துவதென்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வது என்று நீங்கள் தீர்மானித்ததாகத் தெரியவில்லை. அப்படித் தீர்மானித்திருந்தால் யாரோ, ஒரு முட்டாள் எதையாவது செய்தால், நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். அமைதியாக இருப்பீர்கள்.

நீங்கள் ஒரு குழந்தையாக இருந்தபோது, மனஅமைதி உங்களுக்குள்ளேயே இருந்தது. அதை நீங்கள் வெளியில் தேடவேண்டி வந்ததில்லை. அப்போதும் வெளிச்சூழ்நிலைகள் பலவிதமாகப் போனதுண்டு. ஆனாலும் அமைதியில்லாமல் போகவில்லை. இடையில் ஏதோ நடந்தது. உங்கள் அமைதி காணாமல் போனது. இப்போதெல்லாம் அமைதி என்பது உங்களுக்கு இயல்பான விஷயமாக இல்லை. பிடித்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. விட்டால் போய்விடும், இல்லையா? ஏன் இப்படி ஆனது?

இந்தப் பிரபஞ்சம் என்பதே, ஒரே சக்தி தன்னை இலட்சக்கணக்கான விதங்களில் வெளிப்படுத்திக் கொள்வதுதான் என்பதை அறிவியல் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளது. ஒரு சக்தி பேசுகிறது. இன்னொரு சக்தி கேட்கிறது. ஒரு சக்தி பாடுகிறது. ஒரு சக்தி ஆடுகிறது. உங்கள் சக்தி நிலையின் தன்மை அமைதியாக இருந்தால், நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். இதே சக்தி அடுத்த விநாடி ஆவேசமானதாக மாறலாம். அதற்கடுத்த விநாடி ஆனந்தமானதாக மாறலாம்.

"நீங்கள்" என்று உங்களால் கருதப்படும் சக்தி நிலை வெவ்வேறு தன்மைகளை வெளிப்படுத்துவதை வாழ்க்கை நெடுகப் பார்த்திருப்பீர்கள். சில நேரங்களில் கோபம் கொள்கிறீர்கள். சில நேரங்களில் வெறுப்பை உமிழ்கிறீர்கள். சில நேரங்களில் அன்பைப் பொழிகிறீர்கள். சில நேரங்களில் ஆனந்தமாய் இருக்கிறீர்கள். உங்கள் சக்திநிலை ஏன் இத்தனை விதங்களாக மாறி மாறி வெளிப்படுகிறது? ஒரேயொரு காரணம்தான்.

உங்கள் வெளிச்சூழல் எப்படியிருக்கிறதோ அதற்கேற்ப நீங்கள் மாறுகிறீர்கள்.

வெளிச்சூழ்நிலை உங்களை ஆட்டுவிக்கிறது. அதற்கேற்ப நீங்கள் ஆடுவதற்கொரு காரணம் உண்டு. உங்கள் உடல், உங்கள் மனம், இரண்டுமே வெளிச்சூழலில் இருந்து நீங்கள் பெற்றவைதான். உங்கள் உடல், வெளியிலிருந்து நீங்கள் பெறுகிற உணவின் வார்ப்பு. உங்கள் மனம், வெளியிலிருந்து நீங்கள் பெறுகிற தகவல்களின் தொகுப்பு. ஆனால் உங்களுக்குள் இருக்கிற விஷயம் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. இயேசுநாதர் எத்தனையோ விஷயங்களைச் சொன்னார். எத்தனையோ விஷயங்களைச் செய்தார். அவரைப் பல்லாயிரக்கணக்கானவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கடைசியில் அவர் சொன்னார், "கடவுளின் ராஜ்ஜியம் உங்களுக்குள் இருக்கிறது" என்று.

உங்களுக்குள் இருக்கிறது என்றால் உள்நோக்கிப் பார்க்க வேண்டும். உடலையும் மனதையும் அடிப்படையாகக் கொண்டு உங்களை நீங்கள் பார்க்க முடியாது. ஏனெனில் அவை உள்தன்மையின் அம்சங்கள் அல்ல. வெளியிலிருந்து நீங்கள் பெறுகிற அம்சங்கள். உங்களுக்குள் இருக்கிற கடவுளின் ராஜ்ஜியத்தை நீங்கள் இன்னும் கண்டறியாததன் காரணமே, உடல், மனம் என்கிற எல்லைகளுக்குள் நீங்கள் சிறைப்பட்டிருப்பதுதான். ஸ்தூலம் கடந்த ஒன்றை ஐம்புலன்களால் உணரவே முடியாது. எனவே ஸ்தூலம் கடந்த ஒன்றை அனுபவிக்க விரும்புவீர்களென்றால் ஐம்புலன்களின் எல்லைகளை நீங்கள் தாண்ட வேண்டும். இல்லையென்றால், புலன்களுடனேயே போராடிக் கொண்டிருப்பீர்கள்.

எனக்குள் நான் உணர்கிற தன்மைக்கு விலையாக இந்த உலகையே தந்தால் கூட நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அத்தகைய விலை மதிப்பில்லாத பொக்கிஷம் இது. இந்த நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம்.

உங்கள் உள்தன்மையை ஒரு பழத்தோடு ஒப்பிடுவீர்களானால், உங்கள் ஸ்தூலம் என்பது மேலே இருக்கும் தோலைப் போன்றது. தோலில் ஒட்டியிருக்கும் ஒரு துளி இனிப்பையே பெரிதாக எண்ணுகிறீர்கள். அதைக் கடந்து போனால் ஒரு பழமே உங்களுக்காகக் காத்திருக்கிறது. உங்கள் உள்தன்மையை நீங்கள் உணரத் தொடங்குவீர்களானால், நிகரில்லாத ஆனந்தத்தில் நீங்கள் வாழமுடியும். எனக்குள் நான் உணர்கிற தன்மைக்கு விலையாக இந்த உலகையே தந்தால் கூட நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். அத்தகைய விலை மதிப்பில்லாத பொக்கிஷம் இது. இந்த நிலை ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியம்.

தன்னில் முழுமையாக மூழ்கி, பேரின்பத்தில் திளைத்து, அதேநேரம் வெளியுலகில் இயல்பாகவும் உறுதியாகவும் வாழ்வதற்கான சாத்தியம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்கு, சிறிது சக்தியையும் கவனத்தையும் உள்நோக்கித் திருப்ப வேண்டும். இத்தனை காலமாய் உங்கள் கவனம், உங்கள் சக்தி, உங்கள் வாழ்க்கை அனைத்தும் வெளியுலகம் நோக்கியே செலுத்தப்பட்டு வந்திருக்கிறது. சிறிதளவு சக்தியையும் நேரத்தையும் உங்கள் உள்நிலை வளர்ச்சிக்காக செலவிட நீங்கள் தயாராக இருப்பீர்களென்றால், மகத்தான அற்புதங்கள் நிகழும். ஆனந்தத்தின் வெளிப்பாடாகவே நீங்கள் திகழ முடியும். அப்போது உங்கள் தன்மையே மாறிவிடுகிறது. வாழ்வில் நீங்கள் மேற்கொள்ளும் எந்த விளையாட்டையும் அதன் எல்லைவரை சென்று விளையாட முடியும். ஆனால் தோற்க மாட்டீர்கள். வாழ்க்கையை நீங்கள் விரும்பும் விதமாக அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் வாழ்க்கையால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருந்தால்தான் ஒரு மனிதனால் காரியமாற்ற முடியும். அந்தப் பரிமாணத்தை உள்நிலையிலிருந்து பராமரிக்காவிட்டால் வாழ்க்கையே ஒரு எதேச்சையான நிகழ்வாகிவிடுகிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மிக நல்ல மனிதர்களாக இருந்தால் நல்லதே நடக்கிறது. அவர்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பினால் எல்லாவற்றையும் இழந்து விடுகிறீர்கள். அதனால்தான் எல்லோரும், எப்போதும் மிக நல்ல மனிதர்களையே வாழ்வில் சந்திக்க விரும்புகிறார்கள். நீங்கள் மிக நல்ல தன்மையில் இருந்தால், எந்தவிதமான மனிதர்களை எப்போது சந்தித்தாலும், எல்லாச் சூழலிலும் நீங்கள் ஒரே மாதிரியாக வாழ முடியும்.

இன்னொருவரின் நல்ல குணங்களுக்கும், தகுதிகளுக்கும் நீங்கள் ஏன் அடிமைப்பட்டு வாழ வேண்டும்? எப்போதும் யாராவதொருவர் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? உலகத்தை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டுமே தவிர உலகம் உங்களைப் புரிந்துகொள்ள வேண்டுமென்று ஏங்கக் கூடாது.

அமைதி, அன்பு, நல்வாழ்வு போன்றவை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எண்ணம் இருக்கிறது. திருமணமாகாதவர்களுக்கான கிளப் ஒன்றில் முற்பகல் நேரத்தில் முதிய மனிதனொருவன் மது பருகிக்கொண்டிருந்தான். உலகம் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் புகைப்பிடித்துக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருந்த அந்த முதியவனைப் பார்த்து ஆச்சரியமடைந்த பெண்ணொருத்தி அருகே சென்று கேட்டாள். "காலை நேரத்தில் இப்படிக் குடித்துக் கொண்டும் புகைபிடித்துக் கொண்டும் இருக்கிறீர்களே, உங்கள் வாழ்வின் ரகசியம் என்ன?" என்று. அவன் சொன்னான், "இன்று நான் அருந்தும் ஐந்தாவது பாட்டில் விஸ்கி இது. நாள் முழுக்க புகைப்பிடிக்கிறேன். விரும்பியதைச் சாப்பிடுகிறேன் இதுதான் என் வாழ்க்கை ரகசியம்" என்று. "ஆச்சரியமாயிருக்கிறதே! உங்கள் வயதென்ன?" என்று கேட்ட போது அவன் பதில் சொன்னான், "22" என்று.

எனவே, நன்றாக வாழ்வது என்பது பற்றி அவரவருக்கும் தனித்தனி அபிப்பிராயங்கள் உள்ளன. உண்மையில், ஒரு மனிதர் நன்றாக வாழ்கிறார் என்றால் அவர் அமைதியானவராக, ஆனந்தமானவராக, ஆரோக்கியமானவராக வாழ்கிறார் என்றுதான் பொருள். அமைதியாக வாழ்வது என்பதே இப்போது மகத்தானதொரு விஷயமாகிவிட்டது. தம்மை ஆன்மீகவாதிகள் என்று அழைத்துக் கொள்பவர்கள் கூட, அமைதிதான் வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியம் என்பது போல் பேசுகிறார்கள். அமைதி, வாழ்க்கையின் அடிப்படையான விஷயம். நீங்கள் உங்கள் காலை உணவைச் சாப்பிடக்கூட அமைதி தேவைப்படுகிறது. அப்படியானால் காலை உணவுதான் வாழ்வின் மிகப்பெரிய இலட்சியமா என்ன? நாய் கூடத்தான் காலை உணவு சாப்பிடுகிறது. எனவே அமைதியாய் இருப்பதும், ஆனந்தமாய் இருப்பதும் வாழ்வின் ஆரம்பப் படிகள். அடித்தளங்கள். வாழ்க்கைப் பாடத்தின் அரிச்சுவடிகளே அவைதான்.