இந்தவார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு ஆப்பிரிக்கா சென்றபோது கவனித்த வளமான நிலம், அடர்ந்த பசுமை, மற்றும் துடிப்பான மக்கள் பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச யோகா தினத்தின் போது தான் நிகழ்த்திய யோக நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பையும், அவர் பயணத்தில் இடம்பெற்ற இன்னும் பல நிகழ்ச்சிகளையும் நம்மோடு இந்த வார ஸ்பாட்டில் சத்குரு பகிர்ந்துள்ளார்.

ஆப்பிரிக்காவைப் பற்றி சொல்லவேண்டும் என்றால், நான் முதலில் கவனித்தது மண்ணின் வலுவையும் வளத்தையும் தான் - பூமியில் வெகு சில இடங்களே இப்படி உள்ளன. ஆப்பிரிக்கா தனது மண்ணின் செழிப்பையும் அடர்ந்த பசுமையையும் பாதுகாக்க திட்டமிடுவது அவசியம். ஆப்பிரிக்காவின் பெருமளவு நிலப்பரப்பு வரண்டு இருக்கும்போதிலும், அடர்ந்த காடுகளாக இருக்கும் பகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ள அவற்றை கவனத்துடன் அணுகவேண்டும். கடந்த சில நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவின் மக்கள் நிறைய துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டது, தங்கள் நிலத்தை வெளிநாட்டவருக்கு இழந்தது, மிகக் கொடூரமாக அடிமைகளாகி வர்த்தகப்பொருளானது, கலாச்சார பலத்தை இழந்தது, இவை அனைத்தும் அவர்களை திறமையில்லாதவர்களாகத் தெரியும் ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது. அதிர்ஷ்டவசமாக, அங்குள்ள இளைஞர்களில் சில தரப்பினர் பெருமையுடன் எதிர்காலத்தை மிகத் துடிப்பாக அணுகுகிறார்கள். உலகம் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தந்து இதில் பங்கு வகிக்க வேண்டும். மனித இனம் உருவெடுத்த இடமான ஆப்பிரிக்க கண்டத்தின் தனித்துவத்தைக் காப்பாற்றுவதற்கு இது அத்தியாவசியமானது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உகாண்டாவில் என்னுடைய பயணமும், கென்யாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் பயணத்தில் ஊடே நடந்த சிறிய நிகழ்ச்சிகளும் ஊக்கமளிப்பதாகவும் உற்சாகமூட்டும் வகையில் வித்தியாசமாகவும் அமைந்தன. ஊக்கமளிப்பதாக அமைந்ததற்குக் காரணம், ஒருவர் புதிய உத்வேகத்தை அங்கே உணர்ந்திட முடியும். ஆப்பிரிக்க இளைஞர்களின் உற்சாகத்தை ஒருவரால் வெகு சுலபமாக நகரங்களிலும் சிறுநகரங்களிலும் காணமுடியும். ஆப்பிரிக்காவின் மூலை முடுக்குகளிலுள்ள பகுதிகளைப் பார்த்தால், உதாரணத்திற்கு நடாலி நகரை எடுத்துக்கொண்டால், மாயாலோகம் போன்ற மலைப்பகுதியில் (4200 அடி உயரத்தில்) பச்சைப் பசேலென்ற காடுகள் மத்தியில் எரிமலைகளால் உருவான பல ஏரிகளுடன் இருக்கும் அவ்விடத்தைச் சேர்ந்த மக்கள், அவர்கள் உடை, உணவு, மனப்பாங்கு ஆகியவற்றில் ஆயிரம் வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருப்பார்களோ அப்படியே இருக்கிறார்கள், இன்றுதான் புதிதாய் பூமியிலிருந்து வெளியே வந்தது போல இருக்கிறார்கள். நீங்கள் நம்பவேண்டும் என்றால் உங்கள் கண்களால் கண்ணுற வேண்டும். அக்காட்சி வேறொரு யுகத்தைச் சேர்ந்தது போல உள்ளது. பள்ளிக்கல்விக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ளாத சத்குருவின் பெயரில் தன்னார்வத் தொண்டர்கள் துவங்கியுள்ள "சத்குரு பள்ளி"யை அங்கே திறந்துவைத்தேன். இதை நிகழ்த்துவதில், கையளவு தன்னார்வத் தொண்டர்கள் மிகவும் அர்ப்பணிப்பாக, வியக்கத்தக்க அளவு முயற்சி எடுத்து வருகிறார்கள்.

இப்பகுதிகளில் இந்தியப் பூர்வீகமுடைய மக்களோ வேறொரு கதையாக, இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வெளியில் சுயதொழில்கள் துவங்கி வெற்றிகரமாக நடத்துவதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்துவருகிறார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் தொடர்பு ஒரு சில நூற்றாண்டுகள் பழமையானது, வட ஆப்பிரிக்காவுடனான தொடர்போ சில ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சில சமூகங்கள் தங்கள் அடையாளங்களை சிதைவுறாமல் நூற்றாண்டுகளாக பாதுகாத்து வந்துள்ள விதம் வியக்கத்தக்கது. அவர்கள் தங்கள் மொழி, உணவுப் பழக்க வழக்கங்கள், உடைகள், எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் ஆன்மீகத்தை தூரத்து தேசத்தில் அப்படியே பாதுகாத்து வந்துள்ளார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவின் பொருளாதாரத்தில் அவர்களுடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

ஐ.நா.வில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு சென்றடையும் வகையில், துபாய் வழியாகச் சென்று நியூயார்க் நகரை 20ஆம் தேதி அடைந்தேன். இந்த உப-யோகா நிகழ்ச்சியில் 50 தூதுவர்களும் 135 நாடுகளைச் சேர்ந்த மக்களும் கலந்துகொண்டது புதியதோர் சாதனையாகக் கருதப்படுகிறது. அங்கே ஈஸ்ட் கோஸ்டில் நடந்த முதல் இன்னர் எஞ்சினியரிங் ரெட்ரீட் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக அமைந்தது. பிறகு சிகாகோ நகரில் ஒரு நிகழ்ச்சிக்காக சற்று நேரம், இப்போது மீண்டும் iii-ல் மூன்று நாட்கள், அதைத் தொடர்ந்து நியூயார்க்கில் ஒரு நாள், பெர்லினில் ஒரு நாள், பிறகு லண்டனில் சிலகாலம்.

இம்முறை மிகவும் தனித்துவமானதாக அமைந்திருக்கும் குரு பூர்ணிமாவிற்கு ஈஷா யோகா மையத்தில் இருக்கப்போகும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன்.

Love & Grace