400 கி.மீட்டர்கள்... ஷூ அணியாத கால்கள்... ஈஷா வித்யாவிற்காக!
ஈஷா வித்யா மாணவர்களுக்காக மேற்கொள்ளப்படும் தனது இந்த ஓட்டம் இதயப் பூர்வமான உணர்வை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் இவர், இந்த நீண்ட தூர ஓட்டத்தை காலணிகள் கூட அணியாமல் வெறும் கால்களில் ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கு நிதிதிரட்டுகிறார்.
மனிதர்கள் ஓடுவது ஒன்றும் புதிதல்ல! அன்றாடம் சிலர் அலுவலகத்தை நோக்கி பஸ்ஸை பிடிக்கவும் இரயிலைப் பிடிக்கவும் ஓடுகிறார்கள். பலர் பணம்-சொத்து என்றும், இன்னும் சிலர் பதவி-அதிகாரம் என்றும் தேடி ஓடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த மனிதர் ஓடுவதன் நோக்கம் வேறு!
தனது தார் ஜீப்பை விட அதிகம் நான் ஓடியிருக்கிறேன் என வேடிக்கையாகச் சொல்லும் கிரிதர் காமத் எனும் இந்த மனிதருக்கு ஓட்டம் என்பது பேரார்வத்தையும் உத்வேகத்தையும் தரவல்லதாக இருக்கிறது. 2014-15ல் இவர் சுமார் 8000 கிலோ மீட்டர்களை ஓடிக்கடந்துள்ளார். பெங்களூருவிலிருந்து லண்டனை நோக்கிய இந்த பயணத்தை அவர் 12 மாதங்களில் நிறைவு செய்தார். ஒரு நாளைக்கு சராசரியாக 20 கிலோ மீட்டர் ஓடுவதாக கூறும் கிரிதர் காமத், இந்த ஆண்டு 2500 கிலோ மீட்டர்கள் ஓடியுள்ளார்.
46 வயதான கிரிதர் காமத் மேஜிக் கற்றுக்கொண்டு, பின் மேஜிக் உபகரணங்களை செய்து ஏற்றுமதி செய்துவந்தார். 5 வருடங்களுக்கு முன் ஓடத் துவங்கிய இவருக்கு தற்போது ஓட்டம் என்பது வாழ்க்கையின் லட்சியமாக ஆகிப்போனது!
ஈஷா வித்யாவிற்காக 400 கிலோ மீட்டர்கள்!
Subscribe
இம்முறை இவர் ஈஷா வித்யாவிற்காக தனது ஓட்டத்தை மேற்கொள்ளவிருப்பது அவரது ஓட்டத்திற்கு ஒரு அர்த்தத்தை தந்து, சிறப்பு சேர்த்துள்ளது! ஈஷா வித்யா மாணவர்களுக்காக மேற்கொள்ளப்படும் தனது இந்த ஓட்டம் இதயப் பூர்வமான உணர்வை ஏற்படுத்துவதாக தெரிவிக்கும் இவர், இந்த நீண்ட தூர ஓட்டத்தை காலணிகள் கூட அணியாமல் வெறும் கால்களில் ஈஷா வித்யா பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கு நிதிதிரட்டுகிறார். இவரது இந்த ஓட்டத்தில் அவரது மனைவி இராதாவும் மகள் பரிணிதாவும் துணையாக அவர்களின் ஜீப்பில் பயணிக்க உள்ளனர்.
பெங்களூரூவில் சத்குருவின் பிறந்தநாளான செப்டம்பர் 3ஆம் தேதியன்று ஓட்டத்தை துவங்கும் கிரிதர், தனது பிறந்தநாளான செப்டம்பர் 9ஆம் தேதியன்று ஈஷா யோகா மையத்திற்கு வந்தடைந்து, ஓட்டத்தைப் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளார். 400 கிலோ மீட்டர் தூரம்கொண்ட இந்த ஓட்டத்தை அவர் 6 நாட்களில் கடக்க திட்டமிட்டுள்ளார். ஓடிவரும் வழித்தடங்களும் அவர் தற்போதுள்ள இடத்தின் தகவல்களும் அவ்வப்போது இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்படுகிறது.
இதில் நீங்களும் பங்குபெற முடியும்!
இந்த ஓட்டத்தில் நீங்கள் கிரிதருடன் ஓடத் தேவையில்லை! ஆனால், நீங்கள் கிரிதரின் இந்த முயற்சியை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கலாம். இதன் மூலம் ரூ.10 லட்சம் அளவிற்கு நிதி திரட்ட விரும்பும் கிரிதர், இதில் தன்னார்வத் தொண்டர்கள் மனது வைத்தால் இன்னும் அதிகமாக நிதி திரட்ட முடியும் என நம்புகிறார்.
ஈஷா வித்யாவிற்காக இந்த இணையப்பக்கத்தில் நன்கொடை வழங்கலாம்.
ஈஷா வித்யாவின் நோக்கம்!
நம் நாட்டின் வளர்ச்சியில் இந்திய கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. ஆனால், கல்வியின் தரமும் வசதி வாய்ப்புகளும் போதுமான அளவில் இல்லாத காரணத்தால், அடிப்படைத் திறன்களைக் கூடப் பெறாமலே கிராமப் புற மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடிக்கிறார்கள். இதனால் வேலை வாய்ப்பு பெறுவதும் உயர்கல்வி பெறுவதும் அவர்களுக்குத் தடைப்படுகிறது.
கரும் பலகையையும் பாடப் புத்தகங்களையும் தாண்டி இங்கு ஆங்கிலமும் கணினி அடிப்படையிலான கல்வியும் ஈஷா வித்யாவில் வழங்கப்படுகிறது. பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பங்கள் கூட தங்கள் குழந்தைகளை சேர்க்கும் வகையில், இங்கே கல்வி வழங்கப்படுகிறது. எனவே ஈஷா வித்யா, கிராமப்புற குழந்தைகளுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான கதவுகளைத் திறந்துவிடுகிறது.
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் ஒன்று வீதம் 8 ஈஷா வித்யா பள்ளிகளும், ஆந்திர மாநிலத்தில் 1 ஈஷா வித்யா பள்ளியும் செயல்பட்டு வருகிறது.